PUBLISHED ON : மே 26, 2026 12:00 AM

விருதுநகர் காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர் பேட்டி: 'எம்.பி.,க்கள்
பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தனியாக தேர்தலை சந்திப்பீர்களா' என, எங்களை,
தி.மு.க., - எம்.பி.,க்கள் கேட்கின்றனர். காங்கிரசை அவமானப்படுத்துவது
மட்டும் தான், தி.மு.க., வேலையாக இருக்கிறது. காங்கிரஸ், வி.சி.க., மற்றும்
கம்யூனிஸ்ட் ஓட்டுகளை வாங்கிதான் தி.மு.க., - எம்.பி.,க்களும் வெற்றி
பெற்றுள்ளனர். அவர்கள் ராஜினாமா செய்தால், நாங்களும் ராஜினாமா செய்கிறோம்.
இந்த ரெண்டு கட்சியினரும் ரோஷப்பட்டு ராஜினாமா பண்ணிட்டா, மொத்த எம்.பி.,
பதவிகளையும், த.வெ.க.,வினர் கொத்தா அள்ளிட்டு போயிடுவாங்க! அவசரப்பட்டு
வார்த்தையை, 'அள்ளி' விடுறாரே?
அ.தி.மு.க., முன்னாள் செய்தி தொடர்பாளர் ஜவஹர் அலி பேட்டி: 'த.வெ.க., ஆட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு' என தெரிவித்த கம்யூ.,க்கள், இப்போது, 'ஊழல் சக்தி, அ.தி.மு.க.,வை ஆட்சியில் சேர்க்கக் கூடாது' என சொல்வது என்ன நியாயம்? ஊழலின் ஊற்றுக்கண்ணான, தி.மு.க., கூட்டணியில் தானே இவ்வளவு நாளாக இருக்கிறீர்கள்... தி.மு.க.,வுடன் உறவு; ஆனால், த.வெ.க.,வுடன் கூட்டணி என்பது என்ன கொள்கை?
தமிழகத்தில், காங்., கட்சியை, கம்யூ.,க்கள் ஆதரிப்பாங்க... பக்கத்துல இருக்கிற கேரளாவுக்கு போயிட்டா, காங்கிரசை கடுமையா எதிர்ப்பாங்க... கம்யூ.,க்களின் இரட்டை வேடம், எல்லாருக்கும் தெரிஞ்சது தானே!
இந்திய கம்யூ., கட்சியின் மாநில செயலர் வீரபாண்டியன் அறிக்கை: இந்தியாவிலேயே நலத்திட்டங்கள் அதிகம் வழங்குவதில், முதல் மாநிலம் தமிழகம் தான். அந்த நலத்திட்டங்கள் தொடர வேண்டும். அரசை எவ்வளவு உறுதியாக ஆதரிக்கிறோமோ, அவ்வளவு உறுதியாக எளிய மக்களின் குரலாகவும் நாங்கள் ஒலிப்போம். பிரதமர் மோடியை முதல்வர் விஜய் சந்தித்து, தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள நிதியை கேட்டு பெற வேண்டும். மத்திய அரசும் தடையின்றி நிதியை வழங்க வேண்டும்.
'தி.மு.க., அரசுக்கு ஜால்ரா தட்டியது போல இருக்க மாட்டோம்..கொஞ்சம் தீவிரமா இந்த அரசைகண்காணிப்போம்'னு சொல்லாம சொல்றாரோ?
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி: கவர்ச்சியை நம்பிய மக்கள், எதுக்கு ஓட்டு போடுகிறோம் என தெரியாமல் ஓட்டு போட்டு விட்டனர். கருத்தாக பேசிய நான், வேடிக்கைக்காரனாகி விட்டேன்; வேடிக்கை காட்டியவர் இன்று தலைவராகி விட்டார். மக்களுக்கு தேவை கருத்து அல்ல; கவர்ச்சி என்பதை மட்டும், இந்த தேர்தலில் புரிந்து கொண்டேன்.
கவர்ச்சி என்பது சீக்கிரம் காணாம போயிடும்... கருத்து தான் காலா காலத்துக்கும் நிற்கும் என்பதை விஜயே புரிந்து கொண்டுவிட்ட நிலையில், அரசியலில் பக்குவப்பட்ட இவருக்கு தெரியாதா?
