PUBLISHED ON : ஜூன் 06, 2026 12:15 AM

மா.கம்யூ., கட்சியின் மாநில செயலர் சண்முகம் அறிக்கை:
ஏற்கனவே ஏகப்பட்ட கெடுபிடிகள் உள்ள நிலையில், முன் அனுமதிச்சீட்டு பெற்றுத்தான் தலைமை செயலகத்திற்குள் வர முடியும் என, புதிதாக போடப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் உடனே விலக்கி கொள்ளப்பட வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள், அரசு இயந்திரத்தை பொதுமக்கள் எளிதில் அணுக முடியாத நிலையை ஏற்படுத்தும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
தலைமை செயலகத்தை முதல்வர் விஜய் படங்களின் ஷூட்டிங் நடக்கும் ஸ்டூடியோன்னு அதிகாரிகள் நினைச்சுட்டாங்களோ?
தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி அறிக்கை:
ஸ்ரீவைகுண்டம் அருகே பெண் ஒருவர், த.வெ.க., நிர்வாகிகள் இருவரால் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி, அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. தேர்தல் காலத்தை போல தி.மு.க., மீது பழி போடுவதை நிறுத்திவிட்டு, நாம் தான் ஆளுங்கட்சி என்பதை உணர்ந்து, முதல்வர் விஜய் பொறுப்புடன் செயல்பட போவது எப்போது?
தி.மு.க., ஆட்சியில் இந்த மாதிரி பல நுாறு சம்பவங்கள் நடந்தப்ப, இவங்க எங்க போயிருந்தாங்க?
தமிழக காங்., பொதுச்செயலர் வசந்தராஜ் அறிக்கை:
தி.மு.க.,வில் இருந்து கழுத்தை பிடித்து தள்ளப்பட்ட வைகோ, மீண்டும் தி.மு.க., கூட்டணியில் சேரலாம். சொந்த சின்னத்தை விட்டு உதயசூரியனில் நிற்கலாம். மக்கள் நல கூட்டணி வைத்து பல கட்சிகளை காலி செய்யலாம். வாரிசுக்காக, கட்சியில் உழைத்த பலரை நன்றி இல்லாமல் துரோகி எனலாம். வளர்த்து விட்ட கருணாநிதியை துாற்றலாம். நன்றியை பற்றி யார் போதிப்பது; வைகோ ஓய்வு எடுப்பது நல்லது.
தி.மு.க., கூட்டணியில் இருந்து வைகோ வெளியேறினால், அவரை தி.மு.க.,வினர் திட்டுறதுக்கு, 'நோட்ஸ்' எடுத்து கொடுக்கிறாரே!
பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபினுக்கு, தமிழக பா.ஜ., தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவின் அமைப்பாளர் அர்ஜுனமூர்த்தி கடிதம்: தமிழக அரசியல் முக்கியமான கட்டத்தில் நிற்கிறது. ஆட்சிக்கும், மக்களின் உணர்வுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் இடைவெளி, பொதுமக்களிடையே நிலவும் குழப்பம் மற்றும் நம்பகமான தலைமை பற்றாக்குறை ஆகியவை, மாநிலத்தின் எதிர்கால திசை குறித்து தீவிரமான கவலைகளை உருவாக்கி உள்ளன. இந்நிலையில், தமிழக பா.ஜ.,வுக்கு புதிய ஆற்றல், திட்டமிட்ட விரிவாக்கம், ஒழுக்கமான செயல்பாடுடன் கூடிய தலைமை தேவைப்படுகிறது.
ஏன் இப்படி சுத்திவளைக்கணும்...? 'அண்ணாமலையை மாநில பா.ஜ., தலைவராக்கணும்'னு பகிரங்கமா சொல்லிட வேண்டியது தானே!
