PUBLISHED ON : ஜூலை 16, 2026 01:21 AM

அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு பேச்சு: அ.தி.மு.க.,வை விட்டுச் செல்வோரை பற்றி, கட்சி ஒருபோதும் கவலைப்படாது. தமிழகத்தில், 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருந்தது அ.தி.மு.க., மட்டுமே. விஜய் ஒன்றும் கவர்ச்சியான தலைவர் இல்லை. எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் மட்டுமே, பார்த்தால் மீண்டும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என தோன்றும்.
ஆனா, எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் பார்த்து பார்த்து வளர்ந்த உங்க கட்சியினர் தான், அந்த கவர்ச்சி இல்லாத விஜயைத் தேடி ஓடுறாங்க தெரியுமா?
அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேட்டி:
காட்டிக் கொடுக்கும் எட்டப்பன்கள் மட்டுமே அ.தி.மு.க.,வில் இருந்து சென்றுள்ளனர். இளம் தலைமுறையினரை மூளைச்சலவை செய்து தான், எந்த தகுதியும் இல்லாத விஜய் ஆட்சியில் அமர்ந்துள்ளார். ஓட்டு போட்ட மை காயும் முன்பே, எம்.எல்.ஏ.,க்கள் விலை போவது கவலை தருகிறது. முதல்வர் விஜய், த.வெ.க., -- எம்.எல்.ஏ.,க்களின் முகத்தைப் பார்த்து, அவர்கள் பெயர்களை சரியாகச் சொல்லி விட்டால், நான் பொது வாழ்க்கையில் இருந்தே விலகி விடுகிறேன்.
நீங்க என்ன விலகுறது...இன்றைய அரசியல் சூழலில் உங்க கட்சியே பொது வாழ்க்கையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமா விலகிட்டுத்தான் இருக்கு!
வி.சி.க., தலைவர் திருமாவளவன் பேச்சு: தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கான புதிய வாசல் திறந்துள்ளது. தமிழகத்தில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சி தான் என்ற புதிய அரசியல் சூழல் உருவாகியுள்ளது. ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற கருத்து தற்போது நிறைவேறி உள்ளது. தமிழக அரசியல் புதிய பாதையில் பயணிக்கத் துவங்கியுள்ளது.
இத்தனை ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகள் செய்ய விரும்பாததை, அரசியலுக்கு புதியவரான விஜய் செய்து காட்டியது பாராட்டுக்குரியது தான்!
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலர் பழனிவேல் பேச்சு: புதுக்கோட்டை மாவட்டத்தில், 15 ஆண்டுகளாக விஜயபாஸ்கரிடம் நாம் ஏமாந்து கொண்டிருந்தோம். 15 ஆண்டுகளாக அ.தி.மு.க.,வினரை நசுக்கி ஒடுக்கி வாழ்ந்து வந்தவர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர். கட்சி பதவிகள் வழங்கி, யாரையும் வளர விட மாட்டார். விஜயபாஸ்கர் தமிழகத்தில் எந்த இடத்தில் போட்டியிட்டாலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து நாங்கள் சென்று அவரை தோற்கடிக்க வேலை செய்வோம்.
கடந்த 15 வருஷங்களா இவரை கட்சியில் எழுந்திருக்க விடாமல், விஜயபாஸ்கர் அமுக்கி வச்சிருந்தார் என்பது, இவரது ஆவேசத்தை பார்த்தாலே தெரியுதே!
