PUBLISHED ON : ஜூலை 22, 2026 12:00 AM

முன்னாள் அமைச்சரும், தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுமான தங்கம் தென்னரசு அறிக்கை:
தமிழகத்துக்கு, 'தமிழ்நாடு' என்ற பெயரை சூட்டக் கோரி, தியாகி சங்கரலிங்கனார் உயிர் நீத்ததும், எண்ணற்றோர் போராடியதும் வரலாறு. தமிழினத்திற்கான தனித்துவமான அடையாளத்தை வழங்க மறுத்த ஆதிக்க மனப்போக்கிற்கு எதிராக போராடி, ஆட்சி பொறுப்பை ஏற்றவர் அண்ணாதுரை. அவரது தலைமையிலான தி.மு.க., அரசுதான், இந்த மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது.
தமிழகத்தில், காங்., ஆட்சியில் தான் தியாகி சங்கரலிங்கனார் போராடி உயிரிழந்தார்... நீங்க, ஆதிக்க சக்தி என அவங்களைத் தானே சொல்றீங்க?
மா.கம்யூ., மாநில செயலர் சண்முகம் பேச்சு:
தமிழக இடைத்தேர்தலில், இடதுசாரிகள் தனி அணியாக செயல்பட தீர்மானித்துள்ளோம். அரசியல் சூழலை பொறுத்து, அப்போது முடிவு எடுப்போம். இடதுசாரிகளால் தான், மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும். முதல்வர் விஜய் தலைமையிலான, த.வெ.க., ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்துள்ளோம். த.வெ.க., ஆட்சியில் செல்வாக்கை செலுத்தும் அளவிற்கு எங்களிடம் பலம் இல்லை. அதனால், நாங்கள் ஆட்சியில் பங்கேற்க மாட்டோம்.
'எங்களுக்கு பலம் இல்லாததால, ஆட்சியில பங்கு தர மாட்டாங்க... அதனால, நாங்களே முந்திக்கிட்டு மறுத்துட்டோம்'னு சொல்ல வர்றாரோ?
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் பேட்டி:
'ரெஸ்டோ பார்' எனும் ஒரு விஷயத்தை மட்டும் சிலர் தவறாக பேசி வருகின்றனர். மது விற்பனை மூலம் அரசின் வருமானத்தை பெருக்குவது எனும் வார்த்தையை தவிர்த்து விடுங்கள். அவ்வாறு வருமானத்தை பெருக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கோ, முதல்வருக்கோ கிடையாது. மதுவுக்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பது, அடுத்த தலைமுறையினர் இந்த பிரச்னையில் சிக்காமல் தடுப்பது தான், த.வெ.க., அரசின் உறுதியான நோக்கம்.
அப்படி என்றால், வருஷத்துக்கு இத்தனை கடைகள் என இலக்கு நிர்ணயித்து, ஐந்தாண்டுகளில் பூரண மதுவிலக்கு என்ற லட்சியத்தை நோக்கி நடை போடலாமே!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின், ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனி பேட்டி:
தமிழகத்தில் மீண்டும் ஒரு தேர்தல் திணிக்கப்படக் கூடாது என்றும், ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற நோக்கிலும் தான், த.வெ.க., அரசுக்கு ஆதரவு வழங்கினோம். மேலும், பள்ளி மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு அருகில் உள்ள, 717 மதுக் கடைகளை மூட அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் லஞ்சமற்ற, ஊழலற்ற நிர்வாகத்தை வழங்க, முதல்வர் விஜய் எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டத் தக்கவை.
ஆனா, 'இந்த ஆட்சி நீடித்தால், தமிழகத்தில் லஞ்சம் முற்றிலும் ஒழிஞ்சிடுமோ'ன்னு, இரண்டு திராவிட கட்சியினரும் பயப்படுறாங்களே!
