PUBLISHED ON : ஜூலை 11, 2026 12:42 AM

கடலுார் காங்., - எம்.பி., விஷ்ணுபிரசாத் பேச்சு:
காங்கிரஸ் கட்சியில் பல்வேறு நிலைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும். மூத்த தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுக்கு கடந்த காலங்களில் உரிய மரியாதை கிடைக்கவில்லை. இனியாவது அந்த மரியாதை எல்லாருக்கும் கிடைக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் புதிய தலைமை மாறும் போது, அவர்களை சுற்றி ஒரு கூட்டம் கூடி விடுகிறது. இதனால், கோஷ்டி அரசியல் தான் வளர்ச்சி பெறுகிறதே தவிர, கட்சி வளர்ச்சி அடைவதில்லை.
இவரது அப்பா கிருஷ்ணசாமி காங்., தமிழக தலைவரா இருந்தப்ப, அவர் தலைமையில் ஒரு கோஷ்டி இயங்கியதை இவர் மறந்துட்டாரோ?
சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி பேட்டி: கூட்ட நெரிசலில் சிலர் இறப்பது இந்தியாவில் புதிதல்ல. ஆனால், ஒவ்வொரு முறையும் அதற்கு கண்டனம் மட்டுமே தெரிவிக்கிறோம். அதில் இருந்து எந்த பாடத்தையும் நாம் கற்றுக்கொள்வதில்லை. எந்த இழப்புக்கும் அரசு வேலை மட்டுமே இழப்பீடு ஆகாது. இழப்பீடு போதுமானதாக இருக்க வேண்டும்.
இவரது கட்சி, த.வெ.க., அரசில் அங்கம் வகிக்குது... ஆனாலும், கரூரில் விஜய் பொதுக் கூட்டத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குறது தப்புங்கிற மாதிரி பேசுறாரே!
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட ஜெ., பேரவை இணை செயலர், பட்டுக்கோட்டை பூபதி பேச்சு: அ.தி.மு.க., ஆட்சியில் கட்சி பதவியிலும், ஆட்சி அதிகாரத்திலும் கொடி கட்டி பறந்த முன்னாள் அமைச்சர்கள் சிலர், கட்சிக்கு ஏற்பட்டுள்ள சோதனையான காலத்தில் பொதுச்செயலர் பழனிசாமிக்கு உறுதுணையாக இல்லாமல், முதுகில் குத்தும் துரோகிகளாக மாறி விட்டனர். இனி அ.தி.மு.க., கட்டமைப்பை பலப்படுத்த இளைஞர்களுக்கும், புதுமுகங்களுக்கும் பதவிகள் வழங்க வேண்டும்.
'அண்ணன்கள் எல்லாம் காலியாகிட்டாங்க... தம்பிகளுக்கு பதவிகள் குடுங்க'ன்னு, 'துண்டு' போடுறாரோ?
தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கத்தின் தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால் அறிக்கை: காமராஜரின் பிறந்த நாளை, கல்வி வளர்ச்சி தினமாக அரசு கொண்டாடுகிறது. இந்த ஆண்டு, அனைத்து கல்வி நிறுவனங்களிலும் காமராஜர் பிறந்த நாளை, கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாட அரசாணை பிறப்பிக்க வேண்டும். த.வெ.க.,வின் கொள்கை தலைவர்களில் ஒருவரான காமராஜரின் பிறந்த நாளில், அவரது சென்னை, தி.நகர் இல்லத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க, முதல்வர் விஜய் வர வேண்டும்.
த.வெ.க., கூட்டணி அரசில் காங்கிரஸ் பங்கேற்றிருப்பதால், காமராஜருக்கு உரிய மரியாதையை முதல்வர் கண்டிப்பா செய்வார்!
