/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
அழுக்கான அப்பாதான் எனக்கான உந்துசக்தி!
/
அழுக்கான அப்பாதான் எனக்கான உந்துசக்தி!
PUBLISHED ON : ஆக 11, 2024 12:00 AM

நகராட்சியில் துாய்மை பணியாளராக பணியாற்றியவரின் மகளாக பிறந்து, நகராட்சி ஆணையராக தேர்வாகியுள்ள, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தைச் சேர்ந்த 30 வயதாகும் துர்கா:
என் அப்பா சேகர், மன்னார்குடி நகராட்சியில் துாய்மை பணியாளராக பணியாற்றியவர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன் சாலை விபத்து ஒன்றில் இறந்து விட்டார். அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 முடித்து, மன்னார்குடி அரசு கல்லுாரியில் இளங்கலை பவுதீகவியலில் தேர்ச்சி பெற்றேன்.
எனக்கு 2015ல் திருமணம் முடிந்து விட்டது. கணவர், மதுராந்தகம் அரசு அலுவலகம் ஒன்றில் தொகுப்பூதிய தற்காலிக அலுவலராக பணியாற்றி வருகிறார். எனக்கு 5, 7 வயதில் இரு மகள்கள் உள்ளனர்.
குறைந்த வருவாயில் இரண்டு மகள்களையும் எப்படி வளர்த்து, படிக்க வைக்கப் போகிறோம் என்ற கவலை பெரிதும் வாட்டத் துவங்கியது. இதனால், 2019ல் டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்காக படிக்க துவங்கினேன். அப்போது இரண்டு மகள்களுமே கைக்குழந்தைகள்.
சனி, ஞாயிறுகளில் கணவரிடம் குழந்தைகளை விட்டுவிட்டு, அரசு பணித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி மையங்களுக்கு சென்று விடுவேன். என் வாழ்வின் திருப்புமுனையே அந்த இலவச பயிற்சி மையங்கள் தான்.
கடந்த 2019, 2020ல் குரூப் 2, 4 தேர்வெழுதினேன்; ஆனால் தோல்வியடைந்தேன். மனம் சோர்ந்து விடவில்லை. கூடுதலாக நேரம் ஒதுக்கி கடுமையாக படித்தேன்.
அதன்பின், மீண்டும் குரூப் 2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன். அப்போதுதான் அப்பாடா என்றிருந்தது. 2024ல் குரூப் 2 நேர்முகத்தேர்வில் தேர்ச்சி பெற்றேன். அதிலும் ஒரு சிக்கல் வந்தது.
நேர்முக தேர்வின் அடிப்படையில், நகராட்சி ஆணையர் பதவியை விட பெரிய பதவியான, குற்றவியல் சிறப்பு புலனாய்வு பிரிவில் எனக்கு பணி நியமனம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
அந்த பணியை என் மனம் ஏற்றுக்கொள்ள வில்லை. எனவே அதை மறுத்து, குரூப் 2 முதன்மை எழுத்து தேர்வு தேர்ச்சி அடிப்படையில், நகராட்சி ஆணையர் பணிக்கு எனக்கு வாய்ப்பு இருந்ததால், அந்த பணி நியமனத்துக்கு விண்ணப்பித்தேன். அதன் வாயிலாக, நகராட்சி ஆணையர் பணி எனக்கு கிடைத்துள்ளது.
என் அப்பா சில இடங்களுக்கு சென்று, 'செப்டிங் டேங்க்' சுத்தம் செய்து விட்டு மிகவும் அழுக்கான உடலுடன் வீட்டுக்கு வருவார். அப்போதெல்லாம் எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். நான் பார்க்க நேரிட்ட அழுக்கான அப்பா தான் எனக்கான உந்துசக்தி.
நான் நன்றாக படித்து, உயர்பதவிக்கு வரவேண்டும் என்பது தான் அப்பாவின் கனவு. அதை மெய்ப்பட வைத்ததற்கு, நான் அடைந்த தோல்விகளும், என் விடாமுயற்சிகளுமே காரணம்!
மிகவும் குறுகிய காலத்திலேயே உருவான காடு!
கரூர் மாவட்டம், பஞ்சப்பட்டி ஊராட்சி, கொடிக்கம்புதுாரைச் சேர்ந்த, அரசு பள்ளி தலைமையாசிரியர் முனியப்பன்:
இதுதான்
என்னோட பூர்வீக கிராமம். நாங்க விவசாயக் குடும்பம். நான், பள்ளி மாணவனாக
இருந்தபோது, எங்கள் ஊர் பச்சை பசேல்னு செழிப்பா இருந்தது. காலப்போக்கில்
வறட்சியாலும், வயது முதிர்வாலும் அந்த மரங்களை இழக்க வேண்டியதாயிடுச்சு.
பஞ்சப்பட்டி
ஏரி வறண்டு, நிறைய சீமைக்கருவேல மரங்கள் மண்டி, காடு மாதிரி ஆயிடுச்சு.
எங்க ஊராட்சியில் உள்ள மற்ற சிறுசிறு நீர்நிலைகளுக்கும் அதே அவல நிலை
உருவானது.
அதனால் விவசாயமும், ஊரைச் சுற்றி இருந்த பசுமையும்
குறைந்து விட்டது. இதற்கிடையில், அரசுப்பள்ளி ஆசிரியராக, 1990ல் பணிக்கு
சேர்ந்தேன்.
நான் தற்போது தலைமை ஆசிரியாக பணியாற்றி வரும் கடவூர்
ஒன்றியம், ரெட்டியப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 2010ல் 50
நாட்டு மரக்கன்றுகளை நட்டு, மாணவர்களின் உதவியுடன் அவற்றை பெரிய
மரங்களாக்கினேன்.
எங்கள் பள்ளிக்கு எதிரே உள்ள திடலிலும்
மரக்கன்றுகள் நட்டு, அதைச் சுற்றி தடுப்புக் கட்டைகள் அமைத்தேன். தற்போது
அந்த மரங்கள் 20 அடி உயரத்திற்கு மேல் வளர்ந்துள்ளன; இதுதவிர, சாலை
ஓரங்களிலும் மரக்கன்றுகள் நட்டு வைத்தேன். 'மாணவர்கள் மரம் வளர்ப்பு
திட்டம்' என்ற பெயரில், மரக்கன்றுகள் கொடுத்து மாணவர்களையும்
ஊக்கப்படுத்தினேன்.
என் சொந்த ஊரான பஞ்சப்பட்டியில், புங்காறில்
இருந்து தண்ணீர் வந்து சேரக்கூடிய பஞ்சப்பட்டு முகத்துவாரப் பகுதியில்
கொடிக்கம்புதுார் குளம் அமைந்திருக்கு.
இந்த குளத்தோட சுற்றுப்பகுதியில் 13 ஏக்கர் நிலம் இருக்கு. இது பஞ்சப்பட்டி ஊராட்சிக்கு சொந்தமான இடம்.
எங்கள்
ஊர் இளைஞர்களுடன் சேர்ந்து, அங்கு உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி,
2016ல் மரக்கன்றுகள் நடும் முயற்சியில் இறங்கினேன். அதற்கு ஊராட்சி
நிர்வாகமும், வனத்துறையினரும் ஒத்துழைப்பு கொடுத்தனர்.
கடந்த
2016ல் இருந்து ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தி அன்று 200 - 400 மரக்கன்றுகள்
நடுவதை வழக்கமாக வைத்துள்ளேன். இதுவரை 2,000 மரக்கன்றுகள் நடவு
செய்துள்ளோம்.
குறுகிய காலத்திலேயே இது ஒரு காடு போன்று
உருவாகியுள்ளதால், இன்னும் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நட்டு, அடர்வனமாக
மாற்றப் போகிறோம். இந்த சமூக காடு அமைக்கும் திட்டத்துக்கு, 'ஏ.பி.ஜே.
அப்துல்கலாம் பசுமைப் பாதை' என பெயர் வைத்துஉள்ளோம்.
ஊர் கூடி தேர் இழுத்தால் தான் முழுமையான பலன்கள் கிடைக்கும். அதனால் எல்லாரையும் ஒருங்கிணைத்து, பசுமைப் பணிகளை செய்து வருகிறேன்.
தொடர்புக்கு:
97873 30329

