PUBLISHED ON : ஏப் 22, 2024 12:00 AM

'சிறந்த மில்லியனர் விவசாயி' என்ற விருது பெற்றுள்ளது பற்றி கூறும், ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள கோரைபள்ளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமர்: என் தோட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மிளகாய் மற்றும் கொத்தமல்லியை அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறேன்.
பல ஆண்டுகளாக, இயற்கை விவசாயம் செஞ்சுக்கிட்டு இருக்கேன்; நிறைய விருதுகள் வாங்கியிருக்கேன்; பல ஊடகங்களில் என்னைப் பத்தி செய்திகள் வெளியாகியிருக்கு. ஆனால், அப்பெல்லாம் விவசாயிகள் மத்தியில் எனக்குப் பெருசா சொல்லிக்குற அளவுக்கு அங்கீகாரமும் கிடைச்சதில்லை.
ஆனால், இப்பத் தான், பல மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தெல்லாம், முகம் தெரியாத நிறைய விவசாயிகள், இயற்கை விவசாய செயல்பாட்டாளர்கள் என்னை தொடர்புகொண்டு வாழ்த்தினாங்க. அது மட்டுமின்றி, விற்பனை வாய்ப்புகளும் அதிகரிக் கத் துவங்கியுள்ளன.
மொத்த வியாபாரிகள், உணவுப் பொருட்கள் தொடர்பான தொழில்களில் ஈடுபட்டுட்டு இருக்குற நிறுவனங்களைச் சேர்ந்தவங்களும் என்னை அணுகினாங்க. எட்டு ஆண்டிற்கு முன், பெங்களூரில் சர்வதேச அளவிலான இயற்கை விவசாய கருத்தரங்கம் நடந்துச்சு. ராமநாதபுரம் மாவட்ட தோட்டக்கலைத்துறை மூலம் நானும் அந்தக் கருத்தரங்கத்தில் பங்கேற்றேன்.
என்னோட தோட்டத்தில், இயற்கை முறையில் விளைவிச்ச மிளகாய் வத்தலையும், கொத்தமல்லி விதைகளையும் அங்க கொண்டு போயிருந்தேன். ஏற்றுமதி நிறுவனத்தினர் அதை வாங்கிக்கிட்டாங்க.
அடுத்த சில வாரங்கள் கழிச்சி, என்னைத் தேடி, எங்க ஊருக்கே வந்துட்டாங்க அவங்க. 'உங்க பொருளை வாங்கிக்குறோம்.
ஆனால், இது மட்டும் போதாது; இந்தப் பகுதியில் மற்ற விவசாயிகளையும் இயற்கை முறையில் மிளகாய், கொத்தமல்லி விதைகள் உற்பத்தி செய்ய ஏற்பாடு பண்ணுங்க'னு சொன்னாங்க.
அதன்படி, 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாறி, மிளகாய், கொத்தமல்லி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செஞ்ச மிளகாய் வற்றலையும், கொத்தமல்லியையும், பெங்களூருவில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தினர் கொள்முதல் செஞ்சுக்குறாங்க.
நாங்க உற்பத்தி செய்து கொடுக்கும் பொருட்களை ஆய்வகத்தில் பரிசோதனை செய்து, அதுக்கு பின் தான், அந்த நிறுவனத்தினர், அமெரிக்கா, ஜெர்மனி, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்புகின்றனர்.
மிளகாய் வற்றலுக்கு, 1 கிலோவுக்கு, 240 ரூபாயும், கொத்தமல்லிக்கு, 1 கிலோவுக்கு, 105 ரூபாயும் விலை கிடைத்தது. இயற்கை விவசாயத்தால் விளைவிக்கப்பட்ட பொருட்களுக்குச் சமீப காலமாக தமிழகத்திலும் நல்ல வரவேற்பு இருக்கு.
மக்களிடம் விழிப்புணர்வு அதிகரிச்சதுனால, ரசாயனத்தில் விளைவிக்கப்படும் பொருட்களுக்குக் கொடுக்குற விலையை விடவும், இயற்கை விவசாய விளைபொருட்களுக்குக் கூடுதல் விலை கொடுக்க பலரும் தயாரா இருக்காங்க!
தொடர்புக்கு: ராமர் - 91594 05051

