ஒரு காலத்தில் ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய இந்த கலை வடிவத்தில், தற்போது சென்னையைச் சேர்ந்த இல்லத்தரசிகள், பணிபுரியும் பெண்கள் மற்றும் மாணவிகள்,சிறுவர்கள் எனப் பலரும் இணைந்து புதிய தாள அலையை உருவாக்கி சாதனை படைத்து வருகின்றனர்.
இதன் உச்சகட்டமாக, சென்னை மகாலிங்கபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அய்யப்பன் குருவாயூரப்பன் கோயிலில், ஸ்ரீ அய்யப்ப பக்த சபா 'வாத்ய வித்யாலயம்' அமைப்பின் 9-வது அணியைச் சேர்ந்த மாணவர்களின் பிரம்மாண்ட 'பஞ்சாரி மேளம் அரங்கேற்ற விழா' நேற்று மிகக் கோலாகலமாக நடைபெற்றது.
கிலோ எடையுள்ள கனமான செண்டை மேளத்தைத் தங்களின் தோள்களிலும், உலோக ஸ்டாண்டுகளிலும் தாங்கியபடி, ஐந்து பெண்கள் உள்ளிட்ட 15 பேர் கொண்ட இந்த மாணவர் குழுவினர் தங்களின் கைகளில் உள்ள குச்சிகளை தாளத்திற்கு ஏற்ப உயர்த்தி தாழ்த்தி, 'பஞ்சாரி மேளம்' வாசித்து அசத்தினர். இந்த மாணவர்கள் அனைவரும் பயிற்சியாளர் கோபி பள்ளிபுரம் மற்றும் 'வலந்தலா' கலைஞர்களான சுரேஷ் மற்றும் திலீஷ் ஆகியோரின் தீவிர கண்காணிப்பில் கடுமையான பயிற்சி பெற்று இந்த நிலையை எட்டியுள்ளனர்.
இந்த அரங்கேற்ற விழாவின் மிக முக்கிய சிறப்பம்சமாக, புதுமுக மாணவர்களுடன் இணைந்து கேரளாவின் முன்னணி மற்றும் உலகப் புகழ்பெற்ற பாரம்பரிய வாத்தியக் கலைஞர்கள் பலர் பங்கேற்றனர். கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 75-க்கும் மேற்பட்ட முன்னணி மற்றும் முக்கிய வாத்தியக் கலைஞர்கள் ஒருமித்து பங்கேற்று வாசித்த தாள முழக்கம், திரண்டு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களையும் இசைப் பிரியர்களையும் தாள முழக்க மழையில் நனைய வைத்தது.
மணிக்கட்டின் துல்லியமான அசைவுகள், அசாத்திய உடல் வலிமை மற்றும் கொம்பு, குறுங்குழல் போன்ற பிற வாத்தியங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய இந்த சவாலான கலை வடிவம், ஸ்ரீ அய்யப்ப பக்த சபையின் இந்த அரிய முயற்சியால் சென்னை போன்ற பெருநகரங்களிலும் அடுத்த தலைமுறைக்கு மிகச் சரியாகக் கொண்டு சேர்க்கப்பட்டு வருகிறது.