/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
கனரக வாகனங்களை ஓட்டும் 'ராணி' 73 வயது ராதாமணியம்மா!
/
கனரக வாகனங்களை ஓட்டும் 'ராணி' 73 வயது ராதாமணியம்மா!
கனரக வாகனங்களை ஓட்டும் 'ராணி' 73 வயது ராதாமணியம்மா!
கனரக வாகனங்களை ஓட்டும் 'ராணி' 73 வயது ராதாமணியம்மா!
PUBLISHED ON : ஆக 27, 2025 12:00 AM

கனரக வாகனங்களை ஓட்டும், கேரளாவைச் சேர்ந்த, 73 வயதான ராதாமணியம்மா:
நான்கு சக்கர வாகனம் இயக்கும் உரிமத்தை, 1981லும், கனரக வாகனங்கள் இயக்கும் உரிமத்தை, 1983லும் பெற்றேன்.
பின், மூன்று சக்கர வாகனங்கள், பேருந்துகள், லாரிகள், கிரேன்கள், போர்க் லிப்ட்கள், ரோடு ரோலர்கள் என்று பலதரப்பட்டவற்றையும் ஓட்டும் உரிமங்களை, வெற்றிகரமாக பெற்றேன். 'ஹஸார்டஸ் லைசென்ஸ்' எனப்படும் மிகப் பெரிய வாகனங்களை ஓட்டும் உரிமத்தை, 2022ல் பெற்றேன்.
ஆரம்பத்தில், கேரளாவில் கனரக வாகனங்களை ஓட்டுவதற்கான பயிற்சி பள்ளி துவங்குவது கடினம். என் கணவரின் பல சட்டப் போராட்டங்களின் விளைவாகவே, கனரக வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு பயிற்சி அளிக்கும் நிறுவனத்தை, என் பெயரில் பதிவு செய்து துவக்கினோம்.
கணவர், 2004ல் எதிர்பாராத விதமாக இறந்துவிட்டார். அதன்பின் பல தடங்கல்களுக்கும், இன்னல்களுக்கும் ஆளானேன்.
ஆனாலும், சளைக்காமல் ஓட்டுநர் பயிற்சி பள்ளியை தொடர்ந்து நடத்தி வருகிறேன். என் விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் பல தலைமுறைகளுக்கு ஊக்கம் அளித்து வருகிறது.
'ஏ டூ இசட் டிரைவிங் இன்ஸ்டிடியூட்' என்று பெயரிடப்பட்ட என் நிறுவனம், அனைத்துவித கனரக வாகனங்களையும் ஓட்டுவதற்கு பயிற்சி அளிக்கிறது. வயதை பொருட்படுத்தாமல் கல்வியும் கற்று வருகிறேன். இயந்திர பொறியியலில் பட்டய படிப்பும் முடித்துள்ளேன்.
கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு எப்போதும் உண்டு. படிப்புக்கு வயது வரம்பு கிடையாது என்று நிச்சயமாக நம்புகிறேன்.
பேருந்து, லாரி உள்ளிட்ட வாகனங்களை ஓட்ட பெண்கள் முன்வராத காலத்தில், அவர்களையும் அவ்வித வாகனங்களை ஓட்டச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன்; அதில் வெற்றியும் பெற்றேன். புதிதாக எந்த வாகனத்தை பார்த்தாலும் அதை ஓட்டி பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வம் வந்துவிடும்.
வாகனம் ஓட்டுவது ஆண்களின் வேலை என்று நினைக்காதீர்கள். அது ஆண் - பெண் என அனைவருக்குமானது. வாகன உரிமம் வைத்திருப்பவர்களுக்கு, அது இல்லாதவர்களை காட்டிலும் வேலைவாய்ப்புகள் அதிகம் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.
வாகனம் ஓட்டுவது பிழைப்புக்காக மட்டும் தான் என்றும் எண்ணாதீர்கள்; மன மகிழ்ச்சிக்காகவும் வாகனம் ஓட்டலாம்.