PUBLISHED ON : ஜூன் 06, 2026 12:22 AM

மருத்துவ குணங்கள் நிறைந்த பூனைக்காலி மூலிகையை சாகுபடி செய்து, நிறைவான லாபம் ஈட்டும், விருதுநகர் மாவட்டம், அயன்ரெட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த, 51 வயதாகும் ஜெயவீர பாண்டியன்: எங்களுக்கு பூர்வீகத் தொழிலே விவசாயம் தான். எங்கள் ஊர், மழையை நம்பியிருக்கும் மானாவாரி கரிசல் பூமி; எங்களுக்கு, 4 ஏக்கர் நிலம் இருக்கிறது.
நான், தொழில் பயிற்சி படிப்பு முடித்ததும், தனியார் தொலைபேசி நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தேன். 16 ஆண்டுகள் வேலை பார்த்தவன், விவசாயம் செய்வதற்காக ராஜினாமா செய்தேன்.
எனக்கு நிலத்தடி நீரோட்டம் பார்க்கத் தெரியும். நீரோட்டம் பார்ப்பதற்கு பல ஊர்களுக்கும் சென்றிருக்கிறேன்.
அப்படி செல்லும் ஊர்களில் உள்ள விவசாயிகளிடம், அவர்கள் சாகுபடி செய்யும் பயிர், சந்தை நிலவரம் குறித்து தெரிந்து கொள்வேன். அப்படித்தான் இயற்கை விவசாயம் குறித்தும் தெரிந்து கொண்டேன்.
ஒரு விவசாயியை சந்தித்தபோது, அவருடைய நிலத்தில் பல வகை மூலிகைகளை சாகுபடி செய்திருந்ததை பார்த்தேன்.
மூலிகைகளுக்கு அதிக தேவை இருப்பதாகவும், மருந்துகள் தயாரிக்க சித்த மருத்துவர்களும், நாட்டு மருந்து கடை வைத்திருப்போரும், அவற்றை விலைக்கு வாங்குவதாகவும் தெரிவித்தார். அவர்தான் எனக்கு பூனைக்காலி மூலிகையை அறிமுகப்படுத்தினார்.
பூனைக்காலி மூலிகை, சித்த மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதன் பூ, விதைகள், வேர் என அனைத்தும் மருத்துவ குணங்கள் நிரம்பியவை. கை, கால் நடுக்கம் தீர, ஆண்மை குறைபாட்டை போக்குவதற்கும் பயன்படுகிறது.
சோதனை முயற்சியாக, 25 சென்ட் பரப்பில் பூனைக்காலி மூலிகையை பயிர் செய்தேன். இயற்கை இடுபொருட்களும், மூலிகை பூச்சி விரட்டியும் பயன்படுத்தியதால் பயிர்கள் நன்கு விளைந்தன.
தற்போது, ஒரு ஏக்கரில் பூனைக்காலியை சாகுபடி செய்கிறேன்; அறுவடை முடிந்து, 790 கிலோ மகசூல் கிடைக்கிறது.
ஒரு கிலோ, 200 ரூபாய் வீதம் விற்பனை செய்வதில், 1.58 லட்சம் ரூபாய் வருமானமும், செலவுகள் போக, 1 லட்சத்து 27,500 ரூபாய் லாபமும் கிடைக்கிறது.
விருதுநகரில் உள்ள நாட்டு மருந்து கடைகள், சித்த மருத்துவர்கள் மற்றும் மூலிகை வியாபாரிகளுக்கு விற்பனை செய்கிறேன்.
விற்பனைக்கான தொடர்புகளை உறுதிப்படுத்தி விட்டு சாகுபடியில் இறங்கினால், நிச்சயம் நல்ல லாபம் கிடைக்கும். ஐந்து ஆண்டுகளாக, பூனைக்காலி சாகுபடியில் நிறைவான லாபம் ஈட்டி வருகிறேன்.
தொடர்புக்கு
79049 91934
