/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
வருங்கால தலைமுறை இந்த கலைகளை கற்க வேண்டும்!
/
வருங்கால தலைமுறை இந்த கலைகளை கற்க வேண்டும்!
PUBLISHED ON : ஏப் 09, 2026 04:20 AM

நாட்டுப்புற கலைகள் மற்றும் வீதி நாடகங்களில் ஆர்வமுடன் பங்கேற்று வரும், சென்னையில் வசிக்கும் காயத்ரி ரவிச்சந்திரன்:
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அருகில் உள்ள டி.மணல்மேடு என்ற சிறிய கிராமத்தில் இருந்து, உயர் கல்விக்காக சென்னை வந்தவள் நான். விவசாயியும், சமூக சேவகருமான என் தந்தையின் ஆசைப்படி, சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை பயின்று வருகிறேன்.
இந்த பயணத்தில் எனக்கு கல்வியுடன் சேர்த்து, ஒரு புதிய அடையாளத்தையும் கொடுத்தது, முனைவர் ரா.காளீஸ்வரன் அய்யாவின் மாற்று ஊடக மையம்.
ஆரம்பத்தில், எனக்கு நாட்டுப்புறக் கலைகள் குறித்து எதுவும் தெரியாது. சென்னை வந்தபின் தான் பறை, கரகம் என, நம் மண்ணின் இசைக் கருவிகளை முதன் முதலாக பார்த்தேன். 'வீதி' விருது விழாவில், ஆயிரக்கணக்கான கலைஞர்களை கண்டபோது, எனக்கும் அந்த கலைகளின் மீது, தீராத காதல் பிறந்தது.
பெரிய மனிதர்களின் ஆதரவும், அப்பாவின் வாழ்த்துகளும் கொடுத்த தைரியம் தான், இன்று என்னை பலவித கலை வடிவங்களை கற்ற, முழுமையான கலைஞராக மாற்றி இருக்கிறது. நாட்டுப்புற கலைகளுக்கு இன்று நல்ல வரவேற்பு இருக்கிறது.
பெரிய வணிக நிறுவனங்கள் முதல் அரசு விழாக்கள் வரை, பல மேடைகளில் ஆடி இருக்கிறேன்.
ஸ்டெல்லா மேரிஸ் போன்ற கல்லுாரியில் படிக்கும் மாணவியர், ஆர்வத்துடன் நாட்டுப்புற கலைகளை தேடி கற்பது, ஆரோக்கியமான மாற்றமாக தெரிகிறது. கிராமத்து பின்னணியில் இருந்து வந்ததால், வெளி நபர்களிடம் பேசுவதற்கு ஆரம்பத்தில் அதிகம் தயங்கினேன்.
ஆனால் அந்த பயத்தை போக்கியவை, நான் கற்றுக் கொண்ட கலைகள் தான்.
இதன் அடுத்த கட்டமாக, போதை பொருள் விழிப்புணர்வு, கொரோனா விழிப்புணர்வு குறித்த, 15க்கும் மேற்பட்ட வீதி நாடகங்களில் நடித்தேன். இப்போது ஒரு நிகழ்ச்சியை தலைமையேற்று நடத்தும் ஆளுமை பண்பும், கலைகளால் எனக்குள் வளர்ந்திருக்கிறது.
தற்போது, 'சுவடுகள்' என்ற திட்டம் வாயிலாக, கலைகளையும், கருவிகளையும் இணையத்தில் ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளேன்.
மனிதர்கள் மறைந்தாலும், அந்த இணையத்தில் உள்ள செய்முறை விளக்கங்கள் மூலம், வருங்கால தலைமுறை இந்த கலைகளை சிதையாமல் கற்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
இதுவரை, 30க்கும் மேற்பட்டவர்களுக்கு தனிப்பட்ட முறையிலும் கற்றுக் கொடுத்திருக்கிறேன்.

