/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
பசுமை பாதுகாவலர்கள் நியமிக்க வேண்டும்!
/
பசுமை பாதுகாவலர்கள் நியமிக்க வேண்டும்!
PUBLISHED ON : ஏப் 22, 2026 12:00 AM

குறுங்காடுகள் வளர்த்து, பசுமையை பாதுகாக்கும், கரூர் மாவட்டம், ஆலமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த, 47 வயதான, பெயின்டர் முருகானந்தம்:
கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன், கா.பிச்சம்பட்டி ஊராட்சியில் இருந்த என் கிராமம் உட்பட, 14 குக்கிராமங்களும் மிகவும் பசுமையாக இருந்தன. ஆண்டு முழுக்க ஏரி, குளங்களில் தண்ணீர் நிறைந்திருக்கும்.
நாளடைவில், எங்கள் பகுதியில் கல் குவாரிகளும், காற்றாலைகளும் பெருக ஆரம்பித்ததும், நிலைமை தலைகீழாக மாறியது. நிலத்தடி நீர்மட்டம் படிப்படியாக குறைந்து, 1,500 அடி ஆழத்திலும் தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டு, சுற்றுச்சூழல் மிகவும் மோசமானது.
அதனால், எங்கள் ஊரில் உள்ள இளைஞர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்களை ஒருங்கிணைத்து, சிறிய இடத்தில் அதிக எண்ணிக்கையிலான மரக்கன்றுகளை, நெருக்கமாக நடவு செய்யும் முறையான, 'மியாவாக்கி' எனப்படும், குறுங்காடுகள் உருவாக்க முடிவு செய்தோம்.
இதன்படி, மக்களுக்கு பலன் தரும் வகையில் பழ மரக்கன்றுகள், நாட்டு மரக்கன்றுகள் அதிகம் நட்டோம். தண்ணீர் பிரச்னை வரக்கூடாது என்பதற்காக எங்கள் ஊரில், 'வாட்டர் டேங்க்' அருகில் உள்ள காலி இடத்தில் தான் நட்டோம். அந்த டேங்க் நிரம்பி வீணாகும் நீரை மரக்கன்றுகளுக்கு பாய்ச்சி, கண்ணும் கருத்துமாக வளர்த்தோம். அவை இப்போது மரங்களாக வளர்ந்துள்ளன.
எங்கள் செயல்பாட்டை பாராட்டி, வனத்துறையினர் எங்களுக்கு நிறைய மரக்கன்றுகளை இலவசமாக கொடுக்கின்றனர். எங்கள் செயல்பாடுகளை மேலும் தீவிரப்படுத்துவதற்காக, 'அடர்வனம் குறுங்காடு நண்பர்கள்' என்ற அமைப்பை துவக்கினோம்.
நிலத்தடி நீரை சேமித்து வைப்பதிலும், மண் அரிப்பை தடுப்பதிலும், பனை மரங்கள் முதன்மையான பங்களிப்பு செய்யும் என்பதால், பனை விதைகளை விதைப்பதிலும் அதிக ஆர்வம் காட்டுகிறோம். இதுவரை, 22,000க்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு, பராமரித்து வருகிறோம்.
எந்த மரக்கன்றுகளுக்கும் ரசாயன உரம் எதுவும் போடுவதில்லை. குறுங்காடு அமைக்க விரும்புவோருக்கு, தேவையான ஆலோசனைகளையும் வழங்கி வருகிறோம். எங்கள் பசுமை பணி இன்னும் பல ஆண்டுகளுக்கு தொடர்ந்து கொண்டே இருக்கும். எங்கள் ஊராட்சியில் உள்ள அனைத்து குக்கிராமங்களிலும், குறுங்காடுகள் அமைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம்.
சமூக நலன் கருதி, பொது இடங்களில் மரம் வளர்ப்பில் ஈடுபடக்கூடிய எங்களை போன்ற நபர்களை ஊக்குவித்து, அரசு சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். துாய்மை காவலர்கள் போன்று, பசுமை காவலர்களை நியமித்து, இயற்கை வளத்தை சுரண்டி, வறட்சியை ஏற்படுத்தும் நபர்களிடம் இருந்து, அந்தந்த பகுதிகளை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடர்புக்கு:
63805 07003

