PUBLISHED ON : ஏப் 23, 2026 12:43 AM

கடிதம் எழுதும் பழக்கத்தை மீண்டும் உருவாக்க முயற்சி செய்து வரும், சென்னை பல்கலையில் முனைவர் பட்டத்துக்காக ஆராய்ச்சி மேற்கொண்டுள்ள, மவுலி பிரியா:
நான் முதுகலை பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தபோது, என் பேராசிரியர், 'போஸ்ட்கிராசிங் டாட் காம்' என்ற இணையதளம் குறித்து சொல்லி இருந்தார்.
அதாவது, 'உலகெங்கிலும் உள்ள முகம் தெரியாத யாருக்கு வேண்டுமானாலும், இந்த இணையதளம் வாயிலாக அஞ்சல் அட்டைகளை அனுப்பலாம். பதிலுக்கு, எங்கிருந்தோ ஒருவரிடமிருந்து நமக்கு கார்டு வரும்' என்று கூறினார்.
முதலில் சிலருக்கு கார்டுகளை அனுப்பினேன். ஜெர்மனி, அமெரிக்கா, ஜப்பான் நாடுகளில் இருந்து எனக்கு பதில் கார்டுகள் வந்தன.
உலகின் ஏதோ ஒரு மூலையில் இருப்பவர், நமக்காக நேரம் ஒதுக்கி, நமக்கு பிடித்த கருப்பொருளில் கார்டு அனுப்புவது எனக்குள் பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இதுபோன்ற கடிதம் தொடர்பான ஆர்வம் காரணமாக, தபால் தலைகள் குறித்த ஆராய்ச்சி படிப்பையும் தொடர்கிறேன். ஆர்வத்தை, தொழில் முறையாக மாற்ற, 'போஸ்டலி ஹட்' என்ற பெயரில், 'ஸ்டார்ட் அப்' நிறுவனத்தையும் நடத்தி வருகிறேன்.
'கடிதம் எழுதுவது பல நன்மைகளை செய்யும். எழுதுவதன் வாயிலாக மன அழுத்தம் குறையும்' என்று உளவியல் மருத்துவர்கள் கூறுகின்றனர். கடிதமாக எழுதும்போது, என்ன எழுதலாம் என்று சிந்திப்போம். மனதிற்குள்ளேயே தெளிவான ஒரு வடிவம் கிடைத்த பின் எழுத ஆரம்பிப்போம். இதெல்லாம், எழுதுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள். முக்கியமாக, நமக்காக யாரோ ஒருவர் கடிதம் அனுப்பி உள்ளார் என்ற உணர்வு, இன்னும் அலாதியானது.
நம் கலாசாரம் மற்றும் பாரம்பரியம் சார்ந்த ஓவியங்களை அஞ்சல் அட்டைகளாகவும், ஸ்டிக்கர்களாகவும் உருவாக்கி, உலகம் முழுதும் ஆர்வமுள்ளவர்களுக்கு அனுப்பி, நட்பு சங்கிலியை உருவாக்கி வருகிறேன்.
சந்தையில் ஒரு கார்டு, 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், நான் அதை வெறும், 10 ரூபாய்க்கு வழங்கினேன். 2021ல் துவங்கப்பட்ட 'போஸ்டலி ஹட்' இப்போது ஒரு குழுவாக வளர்ந்துள்ளது.
நான் அனுப்பும் கார்டுகளில் பெரும்பாலும் நம் பண்பாடு, அடையாளங்கள், தலைவர்கள் மற்றும் உணவு குறித்த விடுகதைகளை ஆங்கிலத்தில் எழுதி அனுப்புவேன். அதற்கு, மின்னஞ்சல் வாயிலாக பதில்கள் வரும்போது, சிறந்த தகவல் பரிமாற்றம் நிகழ்கிறது.
இந்திய அஞ்சல் துறை சார்பிலும் எனக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. அஞ்சல் அட்டை எழுதும் பழக்கத்தை, இளைஞர்களிடம் தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என்பதை, வாழ்நாள் லட்சியமாக கொண்டுள்ளேன்.

