PUBLISHED ON : பிப் 08, 2026 02:18 AM

தமிழால், தான் பிரபலமானது பற்றி கூறும், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த, 25 வயதான ராஜி ஐஸ்வர்யா: பெண் பிள்ளைகள் அதிகம் பேசக்கூடாது என்று சிலர் கூறுவர். ஆனால், அந்த பேச்சு தான் எனக்கு பெயரையும், புகழையும் கொடுத்துள்ளது. சிறு வயது முதலே தமிழ்மொழி மீது ஆர்வமும், தீராத காதலும் உண்டு. அதற்கு முக்கிய காரணம், தமிழாசிரியரான என் தாத்தா.
அவர் தான், பள்ளிகளில் நடக்கும் பேச்சு போட்டிகள், கட்டுரை போட்டிகளில் என்னை பங்கேற்க துாண்டினார். 8ம் வகுப்பு படிக்கும்போதே, மாநில அளவிலான பேச்சு போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெற்றிருக்கிறேன்.
கல்லுாரியில் நடந்த பேச்சு போட்டியில், எனக்கு நடுவர்களிடம் இருந்து கிடைத்த பாராட்டு தான், திருப்புமுனையாக அமைந்தது. 'உங்களுடைய தமிழ் உச்சரிப்பு நன்றாக இருக்கிறது. குரலில் இனிமையும் இருக்கிறது. இதை மற்றவர்களும் பயன்பெறும்படி உபயோகித்து கொள்ளுங்கள்' என்று கூறினர். அதன்பின் தான் குரல் கலைஞர் வேலையை செய்ய துவங்கினேன்.
அம்மன் கோவில் அறிவிப்புகள் முதல் அரசு விளம்பரங்கள் வரை, கோபிசெட்டிப்பாளையத்தின் எட்டு திசைகளிலும் என் குரல் ஒலிக்கும். இப்போது, ஒலிபெருக்கிகளில் என் குரல் கேட்டால், 'என் பெண்ணுடைய குரல் இது' என்று, மற்றவர்களிடம் பெருமையுடன் என் பெற்றோர் கூறுவர். என் முகம் தெரியாதவர்களுக்கும், என் குரல் மிகவும் பரிச்சயம்.
'மாணவர்களையும், மரங்களையும் சரியாக வளர்த்து விட்டால் போதும்; இந்த தேசம் பிழைத்துக் கொள்ளும்' என்று கூறுவர். ஆசிரியராக இந்த வார்த்தைகளை நான் மனதார நம்புகிறேன். 'வானம் தொடு நுண்கலை பயிற்சியகம்' வாயிலாக பல மாணவர்களுக்கு தமிழ் பேச்சு, மேடை பேச்சுகளுக்கு பயிற்சி கொடுத்து வருகிறேன்.
மாணவர்கள் மட்டுமல்லாமல், பல தொழில் முனைவோர், வழக்கறிஞர்கள் கூட பேச்சு கலையை வளர்த்து கொள்ள பயிற்சி பெறுகின்றனர். அமெரிக்கா, பிரிட்டன், துபாய் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் இணையம் வழியாக பயிற்சி பெறுகின்றனர். இப்படி, கிட்டத்தட்ட 10,000 மாணவர்களை உருவாக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
'இளம் நாவலர், பாரதி கண்ட புதுமைப்பெண், சொல்லருவி, சிங்கப்பெண்' என, பல விருதுகளை பெற்றுள்ளேன். 'அரசு பள்ளியில் படித்தால் என்ன செய்ய முடியும், தமிழ் கற்றுக் கொண்டால் என்ன லாபம்' என்றெல்லாம் பலரும் கேட்கின்றனர்.
முறைப்படி தமிழை கற்றுக் கொண்டால், அதுவே பணம் மட்டுமல்லாமல், பெயர், புகழையும் சேர்த்தே சம்பாதித்துக் கொடுக்கும். இது என் அனுபவம்!
தொடர்புக்கு
63825 56909
'டிராபிக் பாயம்மா!'
எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல், கடந்த 12 ஆண்டுகளாக, சென்னை - தரமணி சந்திப்பில், கழுத்தில் விசிலுடன், போக்கு வரத்தை ஒழுங்குப்படுத்தி வரும், 52 வயதாகும் ஷாகுர் பானு:
நான், காதலித்து திருமணம் செய்து கொண்டேன். கணவர், கட்டட வேலை பார்த்து வந்தார். எங்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.
வளர்த்து, ஆளாக்கி, திருமணம் முடித்து விட்டோம். கணவர் மூன்று ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். நான் தனியாக வாடகை வீட்டில் இருக்கிறேன்.
கடந்த 2014ல், ஒரு கார் மோதி, என் வலது காலில் அடிபட்டு விட்டது. பெரிய காயம் இல்லை என்றாலும், அந்த சம்பவம் என் மனதிற்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. அந்த காரை ஓட்டியவர் கவனமாக, விதிகளை பின்பற்றி இருந்தால், அந்த விபத்து நடந்திருக்காது.
விபத்து என்பது, பெரும்பாலும் அலட்சியத்தில் தான் நடக்கிறது என்றும் புரிந்தது. அதன்பின் இதை யாராவது சரி செய்வர் என்று காத்திருக்க மனம் வரவில்லை.
நானே ஏதாவது செய்ய நினைத்தேன். அப்படித்தான் ஒருநாள் தரமணி சந்திப்புக்கு சென்று, வாகனங்களை ஒழுங்குப்படுத்த ஆரம்பித்தேன்; எவரிடமும் அனுமதி வாங்கவில்லை.
ஆரம்பத்தில் எவரும் மதிக்கவில்லை. ஆனாலும், பொறுமையுடன் அந்த வேலையை செய்தேன். நாட்கள் செல்ல செல்ல சிலர், நான் சொல்வதை கேட்க ஆரம்பித்தனர். சிலர் காவல் துறையில் புகார் கொடுத்தனர். அவர்களும் என்னிடம் வந்து விசாரித்தனர்.
நான் எல்லாவற்றையும் விளக்கி சொன்னதும், என்னை பாராட்டி, 'பிரண்ட்ஸ் ஆப் போலீசில்' பதிவு செய்ய அறிவுறுத்தினர். நான் பதிவு செய்ததும், ஆரஞ்சு நிறத்தில் சீருடை கொடுத்தனர்.
அந்த சீருடை அணிந்த பின், மக்கள் பார்வையில் மாற்றம் வந்தது. எங்கள் ஏரியாவில் என்னை, 'டிராபிக் பாயம்மா' என்று சொன்னால் தான் தெரியும். அந்த பெயரே இப்போது எனக்கு அடையாளம் ஆயிடுச்சு.
தினமும் காலை, 8:00 மணி முதல் பகல் 11:00 மணி வரை இந்த பகுதியில் வாகன நெரிசல் அதிகமாக இருக்கும். அதனால் மருத்துவமனையில் பார்த்து வந்த உதவியாளர் வேலையை விட்டு விட்டேன்.
காரணம், என் வேலை நேரம் இந்த சேவையுடன் ஒத்துப் போகவில்லை. இந்த வேலையில் எனக்கு சம்பளம் எதுவும் கிடையாது; கிடைக்கும் நேரங்களில், வீட்டு வேலைகள் செய்து, அதில் வரும் வருமானத்தில், என் தேவைகளை நிறைவேற்றி கொள்கிறேன்.
'போ க்குவரத்தை ஒழுங்குப்படுத்துவதால் உனக்கு என்ன கிடைக்க போகுது' என பலரும் கேட்பர். அதற்கு நான், 'பலரும் மனநிம்மதி இன்றி, அவதிப்படுகின்றனர். ஆனால், எனக்கு இந்த சேவை செய்வதால் தான் மன நிம்மதி கிடைக்கிறது' என்று சந்தோஷத்துடன் கூறுவேன்.
தொடர்புக்கு:
93634 24478

