ரசாயன நச்சுத்தன்மை இல்லாத பண்ணையை உருவாக்கி இருக்கேன்!
ரசாயன நச்சுத்தன்மை இல்லாத பண்ணையை உருவாக்கி இருக்கேன்!
PUBLISHED ON : ஜன 19, 2024 12:00 AM

முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன்: எனக்கு பூர்வீகம், அரூர் பக்கத்தில் இருக்கிற வேப்பம்பட்டி கிராமம். அரசியலில் ஆர்வம் இருந்ததால், வாத்தியார் வேலையை விட்டுட்டு அரசியலில் ஈடுபட்டேன்.
அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது மரக்கன்றுகளை நடுவதை வாடிக்கையாக வைத்திருந்த அந்த ஆர்வம் தான், என்னை விவசாயத்திற்கு ஈர்த்தது.
தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த செங்குட்டை பெரியார் சமத்துவபுரம் பகுதியில் உள்ளது என்னுடைய, 200 ஏக்கர் பண்ணை. இங்கு, 10,000க்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்து, கிட்டத்தட்ட ஒரு சோலைவனம் மாதிரி உருவாக்கி இருக்கேன்.
மரம் வளர்ப்பு என முடிவு செய்து விட்டதால், மரக்கன்றுகளுக்கு மற்ற இடங்களில் அலைவதை விட, நாமே உற்பத்தி செய்து கொள்ளலாம் என்று, நர்சரி அமைத்தோம்.
விதைகள் போட்டு முளைக்க வைத்து மரக்கன்றுகள் நட்டால், அது வளர, 5 ஆண்டுகள் ஆகும். அதையே ஒட்டுக் கன்று முறையில் வளர்த்தால், 3 ஆண்டுகளில் வளர்ந்துவிடும்.
வரப்பில், 40 தென்னை மரங்கள் நட்டு வளர்க்கிறேன். இந்தப் பண்ணையில், மாந்தோட்டம் 100 ஏக்கர் பரப்பளவில் இருக்கிறது.
இமாம் பசந்த், அல்போன்சா, பெங்களூரா, செந்துாரா உள்ளிட்ட ரகங்கள் உள்ளன. இந்த நிலம், செம்மண் என்பதால், 10 ஏக்கரில் நெல்லிக்காய் போட்டிருக்கேன்.
எலுமிச்சையில், வறட்சியான பகுதியில் சாகுபடி செய்வதற்கேற்ற ரகமான, பாலாஜி என்ற ரகத்தை திருப்பதியில் இருந்து வாங்கி பயிர் செய்கிறேன்; 250 மரங்கள் இருக்கின்றன.
இவற்றுடன், சாத்துக்குடியும் போட்டு உள்ளேன். சப்போட்டாவும், 1 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்து வருகிறேன்.
மரவள்ளிக் கிழங்கு, 2 ஏக்கரில் சாகுபடி செய்திருக்கிறேன். காய்கறிகள் போட்டிருக்கிறேன். 30 நாவல் மரங்கள் இருக்கின்றனர்.
இது தவிர, 4 ஏக்கரில் தான்றிக்காய் போட்டிருக்கேன். செம்மரத்தை, 4 ஆண்டுகளுக்கு முன், 4 ஏக்கரில் நட்டேன். வரப்பில் தான் புளிய மரங்கள் சாகுபடி செய்து வருகிறேன். உரிகம் புளி ரகத்தை தான் போட்டுள்ளேன்.
தினமும் பண்ணையை பார்வையிடுவதை தவறவிட மாட்டேன்.
இயற்கை விவசாயம் வாயிலாக மண்ணுக்கும், சூழலுக்கும் என்னாலான பங்களிப்பை செய்து வருகிறேன். இந்தப் பண்ணைக்கு யார் வேண்டுமென்றாலும் வந்து பார்க்கலாம்.
உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்க... எனக்கு தெரிந்ததை சொல்றேன். பரஸ்பரம் இயற்கை விவசாயம் சம்பந்தமான அறிவு வளரட்டும்.
ரசாயன நச்சுத்தன்மை இல்லாத பண்ணையாக இதை உருவாக்கி இருக்கேன் என்று நினைக்கும் போது, ஆறுதலாகவும், ஆத்ம திருப்தியாகவும் இருக்கு.
தொடர்புக்கு:
94426 12626.
