PUBLISHED ON : ஜூன் 22, 2019 12:00 AM

உப்பு நீரை பயன்படுத்த கூடாது!
எலி வால் கூந்தல், அடர்த்தி ஆக வழி கூறும், ஆயுர்வேத மருத்துவர், ஆர்.பாலமுருகன்: வயது, 30ஐ கடந்த பெண்கள் பலரும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்னையே, முடி தொடர்ச்சியாக கொட்டி, எலி வால் போல ஆவது தான். சிலருக்கு நீளமாக இருந்தாலும் கூட, அடர்த்தி குறைவாக இருக்கும்.மன அழுத்தம், அதிக வேலைப் பளு, கர்ப்பகாலம், வைட்டமின், 'ஏ' அதிகமாக இருப்பது, புரதச்சத்து குறைபாடு, வழுக்கை உண்டாவது, 'ஹார்மோன்' பிரச்னை, ரத்தசோகை, அதிகமாக உணர்ச்சிவசப்படுதல், தைராய்டு குறைவு, வைட்டமின், 'பி' குறைபாடு...உடல் எடை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, சினைப் பை கட்டிபிரச்னை, மன அழுத்தம் மற்றும் ரத்த விருத்திக்காக மாத்திரை சாப்பிடுவது, முடியை அதிகசிரமத்துக்கு உள்ளாக்குவது, வயது முதிர்ச்சி ஆகியவை, எலிவால் கூந்தலுக்கான காரணங்கள்.மேலும், அதிக சூடுள்ள தண்ணீரை தலைக்கு குளிக்க பயன்படுத்த கூடாது. குழாயில் வரும் தண்ணீரும் சூடாக இருந்தாலும், அதை வாளியில் பிடித்து, சூடு போன பின் குளிப்பதே சிறந்தது. உப்பு தன்மையுள்ள தண்ணீரை தவிர்த்து, நல்ல தண்ணீரில் தலைக்கு குளிக்கலாம்.ரசாயனம் அதிகம் உள்ள, 'ஷாம்பு'வால் அலசுவதும், அடிக்கடி மாற்றுவதும் கூடாது. தலைமுடியை முறுக்குவதோ, அழுத்தமாக பிழிவதோ, துவட்டும்போது, அழுத்தமாக சுழற்றுவதோ கூடாது. 'ஹேர் டிரையர்' உபயோகிக்க கூடாது.ஈரமாக இருக்கும்போதே, அவசர அவசரமாக முடியை சீவக் கூடாது. ஆயுர்வேத சாஸ்திரத்தின் படி, தினமும் தலையில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். அவ்வாறு முடியாதபட்சத்தில், வாரம் இருமுறை அல்லது ஒரு முறையாவது, கட்டாயம் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.கரடுமுரடான இடங்களில் தலை வைத்து துாங்க கூடாது; வெயிலில் அதிகமாக அலைய கூடாது; மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். கதிர் வீச்சு மற்றும் நீண்ட நாள் தலைக்கு சிகிச்சைகளை மேற்கொள்ளும் போது, சத்தான உணவு, மருந்துகளை எடுத்து கொள்ள வேண்டும்.அதிக உப்பு மற்றும் புளிப்பு சேர்த்த உணவுகளை, தவிர்க்க வேண்டும். அழுக்கான சீப்பை பயன்படுத்த கூடாது. மாதத்திற்கு ஒரு முறை, சீப்பை மாற்ற வேண்டும். மற்றவர் பயன்படுத்திய சீப்பை பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.தலையில் ஈரம் இருக்கும்போது, எண்ணெய் தேய்க்க கூடாது. முடி நன்றாக வளர, ஆழ்ந்த துாக்கம் அவசியம். கால்சியம், இரும்புச்சத்து உள்ள உணவுகளை, அதிகமாக சாப்பிட வேண்டும். இரவில் பால் சாதம் சாப்பிடுதல், துாங்குவதற்கு முன், பாதங்களில் எண்ணெய் தேய்த்தல் ஆகியவையும், தலைமுடிக்கு இதமளிக்கும்.
