PUBLISHED ON : ஏப் 10, 2026 07:34 PM

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியா... சாதி என்ற பெயரில் ஒடுக்கப்பட்டுக் கிடந்தது, பெண் என்ற காரணத்தால் ஒரு சமூகம் இருட்டில் தள்ளப்பட்டிருந்தது. இந்த அநீதிச் சுவர்களை உடைத்து எறிய, மகாராஷ்டிராவின் மண்ணிலிருந்து புறப்பட்ட ஒரு சிங்கம் தான் ஜோதிபா பூலே!
ஜோதிபா பூலே 1827-ஆம் ஆண்டு ஏப்ரல் 11-ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பிறந்தார். இவருடைய முன்னோர்கள் பூக்கடை நடத்தி வந்ததால் 'பூலே' ( - பூக்கார்) என்ற குடும்பப் பெயர் ஏற்பட்டது. தொடக்கத்தில் தனது கல்வியைப் பாதியில் நிறுத்திய இவர், பின்னர் ஒரு ஸ்காட்டிஷ் மிஷனரி பள்ளியில் சேர்ந்து தனது கல்வியைத் தொடர்ந்தார். அங்குதான் அவருக்குச் சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் குறித்த சிந்தனைகள் உருவாயின.
தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்ட குழந்தைகளுக்காகப் பல பள்ளிகளைத் திறந்தார். இதற்காக அவர் சமூகத்திலிருந்து கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தார்.பூலே வெறும் பேச்சாளர் மட்டுமல்ல, அடிமைத்தனத்தை வேரோடு அறுக்க நினைத்த எழுத்தாளர். 'குலாம்கிரி' (அடிமைத்தனம்) என்ற புத்தகம், சாதிய அடுக்குமுறைகளைத் தோலுரித்துக் காட்டியது. 'உண்மையைத் தேடுவோர் சங்கம்' என்ற அமைப்பைத் தொடங்கி, 'கடவுளை வழிபடத் தரகர்கள் (புரோகிதர்கள்) எதற்கு?' என்ற புரட்சிகரமான கேள்வியை எழுப்பினார். புரோகிதர்கள் இல்லாத திருமணங்களை நடத்தி வைத்துச் சடங்குச் சம்பிரதாயங்களைச் சுக்குநூறாக உடைத்தார்.
அக்காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் பொதுக் குளத்தில் நீர் எடுக்கத் தடை இருந்தது. பூலே என்ன செய்தார் தெரியுமா? 'மனிதாபிமானம் இல்லாத சட்டங்களை நான் மதிக்க மாட்டேன்' என்று முழங்கி, தனது வீட்டுத் தண்ணீர்த் தொட்டியையே ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் திறந்துவிட்டார். இது ஒரு சாதாரணச் செயலல்ல, அக்காலச் சூழலில் மரணத்தை எதிர்கொள்வதற்குச் சமமான துணிச்சல்!
மக்களுக்காகவே வாழ்ந்த இந்தச் சமூகப் போர்வீரனுக்கு, 1888-ல் மும்பை மக்கள் திரண்டு வந்து 'மகாத்மா' (பெரிய ஆத்மா) என்ற பட்டத்தைச் சூட்டினார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களே, ஜோதிபா பூலேவைத்தான் தனது குரு எனப் பெருமையுடன் அழைத்தார்.
ஜோதிபா பூலே ஏற்றி வைத்த அந்தச் சமூக நீதித் தீப்பந்தம் தான் இன்று நாம் அனுபவிக்கும் கல்வி, உரிமை மற்றும் சமத்துவத்திற்கு அடிப்படை. 1890-ல் அவர் மறைந்தாலும், 'ஒவ்வொரு மனிதனும் சமம்' என்ற அவரது முழக்கம் இன்றும் இந்திய மண்ணில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது!
இன்று அவரது 200வது பிறந்த நாள்:டில்லி நாடாளுமன்றத்தில் அவரது சிலைக்கு பிரதமர் மோடி,எதிர்கட்சி தலைவர் ராகுல் உள்பட பலரும் மரியாதை செலுத்தினர்.
வாழ்க மகாத்மா ஜோதிபா பூலேவின் புகழ்!
-எல்.முருகராஜ்

