PUBLISHED ON : ஆக 27, 2019 12:00 AM

ஊசி மூலம் தழும்பை கரைக்கலாம்!
'கீலாய்டு' தழும்பு குறித்து கூறும், அழகுக்கலை அறுவை சிகிச்சை நிபுணர், சிவகுமார்: உடலில் புண்கள், காயங்கள் மற்றும் அறுவை சிகிச்சை செய்த இடத்தில் தழும்புகள் உருவாகும். சில தழும்புகள் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு சிறியதாகவும், மிக பெரியதாகவும் இருக்கும். இவையெல்லாம் இயல்பான தழும்புகளே.ஆனால், சிலருக்கு மட்டும் தழும்பு வளர்ந்து கொண்டே இருக்கும். அப்படி வளரும் தழும்புகளை தான், 'கீலாய்டு' என்கிறோம். உடலில் சுரக்கும், 'கொலாஜென்' எனும் புரதம், தழும்புகளை மறைய செய்து விடும். ஆனால், கீலாய்டு வகை தழும்புகள் மறையாது.உடலின் அனைத்து பகுதிகளிலும் கீலாய்டு தழும்புகள் ஏற்பட வாய்ப்பிருந்தாலும், பெரும்பாலும் நெஞ்சு மற்றும் தோள்பட்டை பகுதியில் தான் உருவாகும். அந்த பகுதிகளில் சருமம் மிகவும் இறுக்கமாக இருப்பதே, இதற்கு காரணம்.காயம் படுவது, அறுவை சிகிச்சை போன்ற காரணங்களால் உருவான கீலாய்டு தழும்புகள், அருகிலுள்ள இடத்துக்கும் பரவும். சிலருக்கு லேசான சிராய்ப்பு, பருக்கள் கூட, கீலாய்டு தழும்புகளாக மாறலாம். இதற்கு மரபணு கோளாறுகளே காரணம்.குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை, யாருக்கு வேண்டுமானாலும், இந்த தழும்புகள் உருவாகலாம். பெற்றோருக்கு இருந்தால், குழந்தைகளுக்கும், இதே வகையான தழும்புகள் உருவாகும் வாய்ப்பு அதிகம்.பெரும்பாலும் தீக்காயங்கள், அறுவை சிகிச்சை செய்த பிறகு ஏற்படும் காயங்களால் உண்டாகும் தழும்புகளே, கீலாய்டு தழும்புகளாக மாறும். இது தவிர, அம்மை தழும்பு, சுகாதாரமற்ற முறையில் காது குத்துவதால் ஏற்படும் தழும்பு, தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் உண்டாகும் தழும்பு போன்றவையும், கீலாய்டு தழும்புகளாக மாறும்.முதலில் சிவப்பாக தோன்றும் இவை, நாளடைவில், பழுப்பு நிறத்துக்கு மாறி விடும். இவை, சாதாரண தழும்புகளை போல் அல்லாமல், மிகவும் பளபளப்பாக இருக்கும். தழும்புகளில் வலியும், அரிப்பும் ஏற்படும்.தொடக்க நிலையில் களிம்பு, 'சிலிக்கான் ஜெல் ஷீட்' வாயிலாக சரி செய்யலாம். இவை தவிர, தழும்பிலேயே போடப்படும் ஊசி மூலமும் கரைக்கலாம். பாதிப்பு அதிகமாக இருந்தால் அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை அளிக்கப்படும். ஆனாலும், தழும்புகள் மீண்டும் உருவாக வாய்ப்புகள் அதிகம். 100 சதவீதம் சரி செய்வதற்கான சிகிச்சை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.காதில் உண்டாகும் கீலாய்டு தழும்புகளுக்கு தான், அடிக்கடி அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் உள்ளதால், சுகாதாரமான முறையில் காது குத்துவது நல்லது.

