பட்டுப்புடவையாக விற்பனை செய்வதில் பல மடங்கு லாபம்!
பட்டுப்புடவையாக விற்பனை செய்வதில் பல மடங்கு லாபம்!
PUBLISHED ON : மே 06, 2025 12:00 AM

பட்டுக்கூடு உற்பத்தியுடன், பட்டுப்புடவை தயார் செய்து விற்பனை செய்து வரும், தென்காசி மாவட்டம், வேதம்புதுார் பகுதியை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான ஜேக்கப்: எங்களுக்கு 100 ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில் காய்கறிகள், நெல் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வந்தார் தாத்தா.
அத்துடன் வீட்டின் சிறு அறையில் பட்டுப்புழு வளர்த்தார். அதற்காக, 1 ஏக்கரில் மல்பெரி சாகுபடி செய்தார். மாதத்திற்கு 40 - 50 கிலோ பட்டுக்கூடுகள் உற்பத்தி செய்தார்.
நான், பட்டப்படிப்பு முடித்த பின், பட்டுப்புழு வளர்ப்பை முழுநேர தொழிலாக செய்ய முடிவெடுத்தேன்.
இதற்கான தொழில்நுட்பங்களை முழுமையாக கற்று, 2020ல் பட்டுப்புழு வளர்ப்பில் இறங்கினேன். 100 அடி நீளம், 22 அடி அகலம் கொண்ட இரண்டு மனைகளை 30 லட்சம் ரூபாயில் அமைத்தேன்.
பலவித நவீன கட்டமைப்பு வசதிகள் செய்ததால் தான் இவ்வளவு ரூபாய் ஆனது. முதல் தரமான பட்டுக்கூடுகள் உற்பத்தி செய்வதற்கு நவீன கட்டமைப்பு வசதிகள் அவசியம்.
பட்டுப்புழுக்களின் உணவு தேவைக்காக, மொத்தம், 12 ஏக்கரில் மல்பெரி சாகுபடி செய்ய ஆரம்பித்தேன். பட்டுப்புழுக்களுக்காக அமைத்திருக்கிற இரண்டு மனைகளிலும் சேர்த்து, மொத்தம் 800 முட்டை தொகுதிகள் வைப்பேன்; 22ம் நாள், 800 கிலோ பட்டுக் கூடுகள் கிடைக்கும்.
'உற்பத்தி செய்த பட்டுக்கூடுகளை விற்பனை செய்யாமல், அதில் இருந்து நுால் தயார் செய்து, கைத்தறி நெசவாளர்களிடம் கொடுத்து பட்டுப்புடவை தயார் செய்து விற்பனை செய்தால், பல மடங்கு லாபம் கிடைக்கும்' என, பட்டு வளர்ச்சி துறை அதிகாரிகள் ஆலோசனை கூறினர்.
அதனால், நுால் தயார் செய்வதற்காக, 21 லட்சம் ரூபாய் முதலீட்டில், பட்டு நுால் உற்பத்தி இயந்திரம் வாங்கினேன். 3 கிலோ பட்டுக்கூடுகளில் இருந்து சராசரியாக அரை கிலோ பட்டுநுால் கிடைக்கும்; அரை கிலோ பட்டுநுாலில் ஒரு புடவை தயார் செய்யலாம். 800 கிலோ பட்டுக்கூடுகள் வாயிலாக, 266 பட்டுப்புடவைகள் தயார் செய்யலாம்.
தயார் செய்த பட்டுப்புடவையை, 6,400 ரூபாய் என, விற்பனை செய்கிறேன். ஆனால், பட்டுப் புடவை தயாரிப்பதற்கு, 2,100 ரூபாய் தான் செலவாகிறது; இதர செலவுகள் போக, ஒரு புடவைக்கு 3,200 ரூபாய் லாபம். 266 பட்டுப்புடவைகள் விற்பனை வாயிலாக 8,51,200 ரூபாய் லாபம் கிடைக்கிறது.
உற்பத்தி செய்த பட்டுக்கூடுகளை, அதே நிலையில் விற்பனை செய்தால், எனக்கு மிகக் குறைவான லாபம்தான் கிடைக்கும்.
ஆனால், பட்டுக்கூடுகளில் இருந்து நானே நுால் உற்பத்தி செய்து, புடவை தயார் செய்து விற்பனை செய்வதால், எனக்கு பல மடங்கு லாபம் கிடைக்கிறது.
தொடர்புக்கு
80567 20648
