PUBLISHED ON : மார் 07, 2026 12:21 AM

'வசந்தம்' என்ற பெயரில், சிறப்பு குழந்தைகளுக்கான உண்டு - உறைவிட பள்ளியை நடத்தி வரும், சென்னை, முகப்பேரைச் சேர்ந்த, 67 வயதான அல்லி முருகேசன்: கடந்த 1980களில் சில பள்ளிகளில் ஆசிரியையாக வேலை பார்த்தேன். அந்த சமயத்தில், பல சிறப்பு குழந்தைகள் இருப்பதையும், அவர்களுக்கு தேவையான வசதிகள் இல்லாததையும் கவனித்தேன்.
இதற்காக, 'நேஷனல் இன்ஸ்டிடியூட் பார் த மென்டலி ஹேண்டிகேப்டு' நிறுவனத்தில், பட்டயப்படிப்பு முடித்தேன்.
சிறப்பு குழந்தைகளை கவனித்து கொள்வதற்காகவே ஒரு பள்ளி தேவை என தோன்றவே, வாடகை கட்டடத்தில், ஆறு குழந்தைகளுடன் பள்ளியை துவக்கினேன். 1998ல் சொந்த இடத்துக்கு மாறினோம்.
சிறப்பு குழந்தைகள் வளர வளர, அவர்களை கையாள்வது பெற்றோருக்கு மிகவும் சிரமம். அதனால், இங்கேயே தங்கி படிக்கும் வசதியும் வைத்துள்ளோம். தற்போது, 130 குழந்தைகள் வரை இருக்கின்றனர்.
இந்த குழந்தைகளுக்கு சரியாக பேச தெரியாது; என்ன வேண்டும் என்று தெளிவாக சொல்ல தெரியாது.
அவர்களை சரியாக புரிந்து கொண்டு, அன்பு காட்ட வேண்டும். நான் இதை ஒரு வேலையாக பார்க்கவில்லை; என் வாழ்நாள் பொறுப்பாகத் தான் பார்க்கிறேன்.
அல்லியின் மகளும், பள்ளியின் இயக்குநருமான, 36 வயதான கிருபா முருகேசன்: நான், சிறப்பு குழந்தைகளுக்கான பேச்சு பயிற்சி படித்து, முனைவர் பட்டம் பெற்று, சென்னை, போரூரில் உள்ள தனி யார் மருத்துவ கல்லுாரி யில் துணை பேராசிரியையாக பணியாற்றி வருகிறேன்.
எங்கள் பள்ளியில் பயிலும் சிறப்பு குழந்தைகளுக்கு, தங்களது வீட்டு முகவரியை கூறுவது, யார் உதவியும் இல்லாமல் கழிப்பறை செல்வது, போர்வையை மடிப்பது, அறையை விட்டு வெளியே வரும்போது விளக்குகளை அணைப்பது போன்ற அன்றாட வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை முதலில் சொல்லி கொடுப்போம்; அதன்பின் தான் கல்வி.
அவர்களை, எட்டாம் வகுப்பு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் அளவுக்கு தயார் செய்வோம். இங்கு, எட்டு குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் பணி செய்கின்றனர்.
சிறப்பு குழந்தைகளை, அவர்கள் சொந்த காலில் நிற்க வைப்பது தான் எங்கள் பள்ளியின் வெற்றி.
காகித பைகள், காகித கப்கள் தயாரிக்க, தறி நெய்ய என நிறைய தொழில் பயிற்சிகளையும் சொல்லி கொடுக்கிறோம்.
இதை அவர்கள் முறையாக செய்தால், அவர்களுக்கு வருமானமும் ஏற்படுத்தி கொடுக்கிறோம். இங்கு எவருக்கும் கட்டாய கட்டணம் கிடையாது.
பணம் கட்ட முடி யாதவர்களின் குழந்தை களை இலவசமாகவே பராமரிக்கிறோம். சாலையோரங்களில் இருந்து மீட்கப்பட்டு, உறவு என யாரும் இல்லாத சிலர், எங்களுடன் பல ஆண்டுகளாக இருக்கின்றனர்.
தொடர்புக்கு
98400 99403
