PUBLISHED ON : பிப் 13, 2026 02:38 AM

கிடா ஆடுகளை விலைக்கு வாங்கி, நான்கு மாதங்கள் வளர்த்து விற்பனை செய்வதன் மூலம் கணிசமான லாபம் பார்த்து வரும், விருதுநகர் மாவட்டம், குமாரலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த, 60 வயதான ஆறுமுகப் பெருமாள்: இதுதான் என்னோட சொந்த ஊர். நாங்கள் விவசாயக் குடும்பம். எஸ்.எஸ்.எல்.சி., முடித்ததும் தீப்பெட்டித் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்தேன்.
நாளடைவில் நானே சொந்தமாக தீப்பெட்டித் தொழிற்சாலை துவங்கி, படிப்படியாக வளர்ச்சி அடைந்தேன். நல்ல வருமானமும் கிடைத்தது. ஒரு கட்டத்தில், மன அழுத்தம் ஏற்பட ஆரம்பித்தது. அமைதியான, இயற்கையான சூழலில், பொழுதைக் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்தது. சமூக வலைதளங்களில் வெளியான ஆடுகள் வளர்ப்பு தொடர்பான காணொலிகளை பார்த்தவுடன், அந்த தொழிலில் ஆர்வம் ஏற்பட்டது.
இதன்பின், 3 ஏக்கர் நிலத்தில் ஆட்டுப் பண்ணை ஆரம்பித்தேன். இனப்பெருக்கத்துக்காக பெட்டை ஆடுகள் மற்றும் கிடா ஆடுகள் வளர்த்தேன். அனுபவம் கிடைத்தாலும், பெரும் நஷ்டம் ஏற்பட்டது. பெரிய ஆடுகளையும், குட்டிகளையும் ஒரே இடத்தில் அடைத்ததால், கிடாக்களால் குட்டிகள் பாதிக்கப்பட்டன. அதிகமாக தீவனம் சாப்பிட்டதால், பெரிய ஆடுகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துவிட்டன.
ஆடு வளர்ப்பில் அனுபவம் உள்ள விவசாயிகளை பார்த்து, ஆலோசனை கேட்டேன். 'பெட்டை ஆடுகள் வளர்க்காமல், கிடா ஆடுகளை மட்டும் விலைக்கு வாங்கி, சில மாதங்கள் வளர்த்து விற்பனை செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம்' என்று கூறினர். அவர்கள் கூறியபடியே, பிறந்து ஆறு மாதங்களான கிடா ஆடுகளாக பார்த்து வாங்கி, வளர்த்து விற்பனை செய்ய தொடங்கினேன். நல்ல லாபம் கிடைக்க ஆரம்பித்தது. கிடா குட்டியை வாங்கி, சத்தான தீவனம் கொடுத்து வளர்த்ததில், ஒரு மாதத்துக்கு, 3 கிலோ வீதம் எடை அதிகரித்தது.
கால்நடை மருத்துவர்கள் பரிந்துரைக்கும் தடுப்பூசிகளை, ஆடுகளுக்கு அந்தந்த பருவ காலங்களில் போடுகிறேன். ஒரு கிடா விற்பனை மூலம், 1,800 ரூபாய் லாபம் கிடைக்கும். ஒரு மாதத்துக்கு, 50 கிடா ஆடுகள் வீதம், ஆண்டுக்கு, 600 கிடா ஆடுகள் விற்பனை செய்வதன் வாயிலாக, 10.80 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது.
விவசாயமோ, கால்நடை வளர்ப்போ, எந்தத் தொழிலாக இருக்கட்டும்... பணத்தை முதலீடு செய்துவிட்டு, பணியாளர்கள் மூலம் நடத்தி, நிறைய லாபம் பார்க்கலாம் என்று நினைத்து விடக்கூடாது. உரிமையாளரின் நேரடிக் கண்காணிப்பு மிகவும் அவசியம். தினமும் காலை, 7:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை இந்த ஆடுகளுடன் தான் என் பொழுது கழிகிறது.
தொடர்புக்கு: 96299 61497.

