PUBLISHED ON : மே 01, 2026 12:39 AM

பெரம்பலுார் மாவட்டம், கல்லுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெண்மணி யூனுஸ் ஆடிலின்:
எங்களுக்கு சொந்த ஊர் கல்லுப்பட்டி தான். எங்கள் நிலத்தில், என் தந்தை பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வந்தார்; நஷ்டமே ஏற்பட்டது. இதனால், 'நான் விவசாயம் செய்து, லாபமாக மாற்றுகிறேன்' என்று சொல்லி, களத்தில் இறங்கினேன்.
முருங்கை விவசாயம் செய்ய முடிவு செய்தேன். 'திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கப்பல்பட்டியில் கிடைக்கும் கரும்பு முருங்கை ரகத்தை பயிரிட்டால் லாபம் கிடைக்கும்' என்று சிலர் கூறினர்.
இவ்வகை முருங்கை அதிக நீளமாகவும், கொஞ்சம் இனிப்பாகவும் இருப்பதால் அனைவரும் விரும்பி உண்கின்றனர்.
அந்த ரக முருங்கை கன்றுகளை வாங்கி நட்டு வைத்தேன்; விளைச்சல் அமோகமாக இருந்தது. தற்போது என், 48 ஏக்கர் நிலத்திலும் கரும்பு முருங்கை ரகத்தை தான் பயிரிட்டு இருக்கிறேன். ஒரு ஏக்கர் நிலம் இருந்தால் போதும்; கரும்பு முருங்கை விவசாயம் செய்யலாம்.
களிமண் நிலமாக இல்லாமல், செம்மண் நிலமாக இருந்தால் இன்னும் அருமையாக வளரும். போதுமான தண்ணீர் வசதி வேண்டும். கரும்பு முருங்கை, எடை அதிகமாக இருக்கும். எடை அதிகமாக இருந்தால் தான் லாபம் கிடைக்கும்.
ஒரு ஏக்கரில், 175 கன்றுகள் நடலாம். 175 கரும்பு முருங்கைகளில், 160 மரங்கள் நிச்சயமாக காய்கள் கொடுக்க ஆரம்பிக்கும். ஒரு மரத்தில், மாதம் 500 முதல் 700 காய்கள் வரை பறிக்கலாம்.
ஒரு ஏக்கரில் முருங்கை பயிரிட அனைத்து செலவுகளும், 30,000 ரூபாய்க்குள் அடங்கிவிடும். சராசரியாக மாதம், 30,000 ரூபாய் லாபம் கிடைக்கும்.
கரும்பு முருங்கை லாபகரமாக இருப்பதால், அதன் கன்றுகள் கேட்டு, விவசாயிகள் பலரும் வரவே, இதற்காகவே 3 ஏக்கரில் தனியாக பதியம் போட்டு, விற்பனை செய்து வருகிறேன்.
பதியம் என்பது, நன்கு வளர்ந்துள்ள முருங்கை மர தண்டில் சிறிய துளையிட்டு, அதனுள் சில உரங்களை வைத்து, பிளாஸ்டிக் பேப்பர் போட்டு, கட்டி வைத்திருக்க வேண்டும்.
தொடர்ந்து, 45 நாட்கள் அப்படியே மரத்தில் வைத்திருந்தால் போதும். பின், அந்த மரத்துண்டை வெட்டி, பிளாஸ்டிக் பேப்பரை எடுத்து வீசிவிட்டு, அப்படியே நட்டு வைத்தால், கரும்பு முருங்கை, 'விறுவிறு' என வள ர ஆரம்பிக்கும்.
பதியம் ஒன்றை, 45 ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன். இதிலும் எனக்கு மாதாமாதம் நல்ல வருமானம் வருகிறது. ஒரு ஏக்கர் முருங்கை விவசாயத்தில், 30,000 ரூபாய் லாபம் என்றால், 48 ஏக்கரில் முருங்கை விவசாயம் செய்கிறேன்.
என் வருமானத்தை கணக்கு போட்டு சொல்ல முடியாது; ஆனால், லட்சக்கணக்கில் வருமானம் கிடைத்து வருகிறது.
