PUBLISHED ON : பிப் 02, 2026 01:56 AM

சென்னையை சேர்ந்த ஒப்பனை கலைஞர் அர்ச்சனா: எனக்கு சொந்த ஊர் நாமக்கல். சிறு வயது முதலே ஒப்பனை செய்வது எனக்கு பிடிக்கும். ஒப்பனை கலைஞர் ஆக வேண்டும் என்று, என் வீட்டில் கூறிய போது, 'இதெல்லாம் ஒரு வேலையா... ஒவ்வொருவர் வீட்டுக்கு சென்று வேலை செய்வதெல்லாம் சரியா வராது' என்று கூறினர்.
வேறு வழியே இல்லாமல், இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்தேன். படிப்பு முடிந்ததும், திருமணமாகி கணவருடன் சென்னைக்கு வந்து விட்டேன்; எங்களுக்கு இரு குழந்தைகள்.
எட்டு ஆண்டுகள் இல்லத்தரசியாக இருந்தேன். மனதில் ஒரு வெறுமை இருந்தபடியே இருந்தது. என்னை தொலைத்த மாதிரியான உணர்வில் இருந்தேன்.
வேலைக்கு சென்றால், எல்லாம் சரியாகும் என தோன்றியது. ஆனால், அனுபவம் இல்லாமல் எங்கு சென்று வேலை கேட்பது என்று தயக்கமாக இருந்தது.
வெளியே சென்று வேலை தேடுவதை விட, நமக்கு பிடித்த ஒப்பனை துறையில் இயங்க ஆரம்பிக்கலாம் என நினைத்தேன். வீட்டில் எவரும் ஆதரவு அளிக்கவில்லை; என்னை நம்பி களத்தில் இறங்கினேன்.
ஒப்பனை கலைஞர் பயிற்சி படிப்பதற்கு, என் நகைகளை அடமானம் வைத்து படித்தேன். வெவ்வேறு நிகழ்ச்சிகளுக்கு நிறைய வகைகளில், ஒப்பனை பொருட்கள் அவசியம்.
அதற்காக, ஆரம்பத்தில் தெரிந்தவர்கள் வாயிலாக 'ஆர்டர்'கள் எடுத்து நிகழ்ச்சிகளுக்கு ஒப்பனை கலைஞராக செல்ல ஆரம்பித்தேன். அப்படி கிடைத்த வருமானத்தை தொழிலுக்கு முதலீடாக்கினேன்.
ஏழு ஆண்டுகளுக்கு முன், 'க்ளோ ஷை ன் மேக் ஓவர்' என்ற நிறுவனத்தை ஆரம்பித்து, சமூக வலைதளங்களில் ஒப்பனை குறித்த வீடியோக்களை பதிவிட ஆரம்பித்தேன். படிப்படியாக, பிரபலங்களுக்கு ஒப்பனை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. எல்லா வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்திக் கொண்டேன்.
நேரம், காலம் பார்க்காமல் உழைத்தேன். இன்று, மாதம் மூன்று லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது. மேலும், என் துறையில் வெற்றிகரமான தொழில் முனைவோராகவும் இருக்கிறேன்.
படித்து முடித்து, தினமும் புதிது புதிதாக ஒப்பனை கலைஞர்கள் வெளியே வருகின்றனர். கடுமையான போட்டி இருக்கும்; ஆனால், நாம் செய்யும் சரியான ஒப்பனை தான் வாடிக்கையாளர்களை உருவாக்கும்.
நேரம் தவறாமல் இருப்பது, புதிது புதிதாக கற்றுக் கொள்வது ஆகியவை, நிறைய வாடிக்கையாளர்களை பெற்றுத் தருகின்றன.

