PUBLISHED ON : மார் 07, 2024 12:00 AM

மகளிர் குழு வாயிலாக, சணல் பைகள் தயாரித்து விற்பனை செய்து வரும், கன்னியாகுமரி மாவட்டம், சித்தன் தோப்பு கிராமத்தைச் சேர்ந்த வினிதா மேரி:
எங்கள் ஏரியா பெண்களுடன் சேர்ந்து மகளிர் சுய உதவிக்குழு வாயிலாக சணல் பைகள் தயாரித்து வருகிறோம். நாங்கள் தயார் செய்யும் பைகள் தமிழகம் மட்டுமல்லாது, கேரளா உட்படபிற மாநிலங்களுக்கும் செல்கின்றன.
பி.எஸ்சி., - பி.எட்., படிச்சிட்டு எங்கள் ஊரில் ஒரு தனியார் பள்ளியில் டீச்சராக வேலை பார்த்துட்டு இருந்தேன்; வருமானம் குறைவு தான்.
ஆனாலும், 'விடுமுறை எடுக்கக் கூடாது, கூடுதல் வேலை நேரம்' என, ஆயிரம் கண்டிஷன் போட்டாங்க. கணவர் தினக்கூலியா கிடைக்கிற வேலைக்குப் போவாரு.
எனக்கு இரண்டு பொண்ணுங்க. ஒரு கட்டத்தில், டீச்சர் வேலையை விட்டேன். எங்கள் பகுதி மக்களுக்கு அரசு இலவசமாக சணல் பைகள் தைக்க, 13 நாள் பயிற்சி கொடுப்பது தெரிந்து, பயிற்சி வகுப்பில் சேர்ந்து சணல் பைகள் தைக்க கத்துக்கிட்டேன்.
லேப்டாப் பை, ஹேண்ட் பேக், வாட்டர் பாட்டில் பைகள், வித்தியாசமான பர்ஸ் வகைகள் என, 60 மாடல்கள் பண்ணிட்டு இருக்கேன்.
துவக்கத்தில், ஒரு பை, இரண்டு பை தான் விற்பனையானது; 2019ல் வீட்டு நிகழ்ச்சிக்காக, ஒருவர் மொத்தமாக, 40 பைகள் ஆர்டர் கொடுத்தாங்க; அது தான் என் பிசினசோட ஆரம்பமாக அமைந்தது.
'டிகிரி படிச்சுட்டு, 50க்கும், 100க்கும் பை தைக்குது'ன்னு பலரும் என்னைக் கிண்டல் செய்தனர். 'மகளிர் சுய உதவிக்குழுவில் சேர்ந்தால், அரசு உதவிகள் கிடைக்கும், பைகளுக்கும், பொருட்களுக்கும், 'ரீச்' இருக்கும்'னு சொன்னாங்க.
அதனால், எங்கள் ஏரியாவில் உள்ள ஆறு பெண்களை சேர்த்து, 2022ல், 'அன்னை' சுய உதவிக்குழுவைத் துவங்கினேன். இப்போது குழு வாயிலாக ஆறு பெண்கள் சேர்ந்து பிசினஸ் பண்ணிட்டு இருக்கோம்; வரும் லாபத்தை சரிசமமாக பிரித்துக் கொள்வோம். எட்டு தையல் மிஷின்கள் இருக்கு.
வாடகைக்கு இடம் பிடித்து, தையல் வேலைகளைப் பார்த்துட்டு இருக்கோம். 1 மீட்டர் சணல் துணி, 100 ரூபாய்ல இருந்து கிடைக்கிறது. 1 மீட்டர் துணியில் '3 மீடியம் சைஸ்' பைகள் தைக்கலாம்.
சென்னையில் ஸ்டால்கள் போட்டும் விற்பனை செய்கிறோம். 'வானவில்' என்ற பெயரில் இணையதளம் வாயிலாக பொருட்களை விற்பனை செய்யும் முயற்சிகளிலும் இறங்கி இருக்கோம்.
மாதத்திற்கு 1 லட்சம் ரூபாய்க்கும் மேல, 'டர்ன் ஓவர்' செய்கிறோம்; எங்களுக்கு போதுமான லாபமும் கிடைக்கிறது, குடும்பத்துக்கும் உதவ முடிகிறது. கிண்டல் செய்தவர்கள் முன், தற்போது தலை நிமிர்ந்து வாழும் சந்தோஷத்தை இந்த தொழில் கொடுத்திருக்கு.

