/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
தெய்வீக தமிழிசையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கணும்!
/
தெய்வீக தமிழிசையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கணும்!
தெய்வீக தமிழிசையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கணும்!
தெய்வீக தமிழிசையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கணும்!
PUBLISHED ON : பிப் 07, 2026 02:29 AM

தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணி யாற்றியபடியே, ஆன்மிக சொற்பொழிவாற்றி வரும், சென்னையைச் சேர்ந்த நித்யா அருணாசலம்:
என் சொந்த ஊர், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள பட்டமங்கலம். என், 3 வயதிலேயே பக்தி பாடல்களை பாடுவேன் என்று பெற்றோர் கூறுவர். என் அத்தை தான் எனக்கு பக்தி பாடல்களை கற்றுக் கொடுத்தார்.
பள்ளி ஆசிரியர்களின் ஊக்கத்தாலும், பிரபல பாடகர்களின் பக்தி வீடியோக்களை பார்த்து பயிற்சி எடுத்தும், என் திறமையை வளர்த்துக் கொண்டேன்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.இ., முடித்து, மதுரை தியாகராஜர் கல்லுாரியில், எம்.பி.ஏ., படிப்பில் தங்கப்பதக்கம் வாங்கியுள்ளேன். இசை மீதான காதலால், தமிழிசையில் முது கலை பட்டமும் பெற்று உ ள்ளேன்.
கடந்த 20 ஆண்டுகளாக, சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில், துறை மேலாளராக பணியாற்றி வருகிறேன்.
கடந்த, 2018ல், ஆத்தங்குடி நகரச்சிவன் கோவில் குடமுழுக்கில், 'நால்வர் காட்டிய நல்வழி' என்ற தலைப்பில், என் முதல் இசை சொற்பொழிவு அரங்கேறியது.
கடும் பணிச்சுமைக்கு மத்தியிலும், தமிழிசை மற்றும் பக்தி இலக்கியத்தின் மீதுள்ள ஈடுபாட்டால், இசை பேருரைகள் வாயிலாக ஆன்மிக சொற்பொழிவாற்றி வருகிறேன். வார நாட்களில் அலுவலக பணி, வார இறுதியில் இசை நிகழ்ச்சிகள் என ஓடிக் கொண்டிருக்கிறேன்.
என் பெற்றோரும், மாமியாரும் தான் எனக்கு பக்கபலம். என் மாமியார், இசை நிகழ்ச்சிகளுக்கு நான் ஒத்திகை பார்க்கும்போது, அவரே முதல் ரசிகராக இருந்து கருத்து கூறுவார்.
நான் வெளியூர் செல்லும் நேரங்களில், என் மகனை கணவர் கவனித்து கொள்வதால் தான், நிகழ்ச்சிகளில் மனமொன்றி பாட முடிகிறது.
இதுவரை நுாற்றுக்கும் மேற்பட்ட மேடைகளில் உரை நிகழ்த்தி உள்ளேன். 'நித்யா இசை விசை' என்ற யு டியூப் சேனல் வாயிலாக, 220க்கும் மேற்பட்ட காணொலிகளை பதிவேற்றி உள்ளேன்.
இதில் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்புகழ் மற்றும் கந்த சஷ்டி கவசத்திற்கான விளக்க உரைகளை, எளிய முறையில் வழங்கி உள்ளேன்.
'இசையுரை அரசி, திருப்புகழ், இசைவாணி' போன்ற பட்டங்களை பெற்றுள்ளதுடன், கோவில் குடமுழுக்கு வர்ணனைகளிலும் தனி முத்திரை பதித்து வருகிறேன். தற்போது, ஓதுவார் வழியில் திருமுறையை கற்று வருகிறேன்.
தமிழிசை மற்றும் பக்தி இலக்கியங்கள் நமக்கு கிடைத்த ஈடு இணையற்ற பொக்கிஷங்கள்.
இத்தகைய தெய்வீக தமிழிசையை, அடுத்த தலைமுறையினரிடம் எளிய முறையில் கொண்டு சேர்ப்பதே என் லட்சியம்.

