/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
காய்கறிகள் பழப்பயிர்கள் சாகுபடி செய்யணும்!
/
காய்கறிகள் பழப்பயிர்கள் சாகுபடி செய்யணும்!
PUBLISHED ON : பிப் 17, 2026 03:25 AM

தேனி மாவட்டம், அமைச்சாபுரம் பகுதியில், 2.5 ஏக்கர் நிலத்தில், பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி செய்து வரும் பி.இ., பட்டதாரியான பவித்ரா: கோவை மாவட்டம், வெள்ளியங்காடு தான் என் சொந்த ஊர்; பெற்றோர் விவசாயிகள்.
பி.இ., முடித்ததும், சிங்கப்பூரில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணி கிடைத்தது. அங்கு பணிபுரிந்த அருண்குமாரை காதலித்து, 2018ல் திருமணம் ஆனது.
கொரோனா காலத்தில், எனக்கு குழந்தை பிறந்தது. அந்த சமயத்தில், என் நண்பர்களின் வீடுகளில் நிறைய உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதற்கு மேலும் சிங்கப்பூரில் இருக்க வேண்டாம் என்று முடிவு செய்து, தமிழகம் வந்து விட்டோம்.
என் கணவர், தேனியில் தன் நண்பருடன் சேர்ந்து கட்டுமான தொழிலில் இறங்கினார். நான் இந்த ஊரில், 2.5 ஏக்கர் நிலம் வாங்கி, 2023ல் இருந்து இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்தேன்.
எனக்கு விவசாயம் புதிது என்பதால், அக்கம் பக்கத்தில் உள்ள விவசாயிகள் மிகவும் ஒத்துழைப்பு தந்தனர்.
முதல் முறை, 660 கிலோ அரிசி கிடைத்தது. எங்கள் வீட்டு தேவைக்கு, 260 கிலோ வைத்துக் கொண்டோம். அந்த சமயத்தில் நாங்கள் புது வீடு கட்டி இருந்தோம்.
கிரகப்பிரவேசத்திற்கு வந்தவர்களுக்கு அன்பளிப்பாக, தலா 1 கிலோ வீதம், மொத்தம், 200 நபர்களுக்கு அந்த அரிசியை கொடுத்தோம்.
அதை சமைத்து சாப்பிட்ட பலரும், 'மிகவும் சுவையாக உள்ளது; விலைக்கு கிடைக்குமா' என்று கேட்டனர். 1 கிலோ 100 ரூபாய் என, 200 கிலோ அரிசியை விற்பனை செய்தேன்.
இயற்கை விவசாயம் மூலம் லாபம் பார்ப்பது என் நோக்கமில்லை. உற்பத்தி செலவுகளை ஈடுகட்டும் அளவுக்கு வருமானம் வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு.
கடந்தாண்டு கருப்பு கவுனி, ரத்தசாலி, கருங்குறுவை உள்ளிட்ட நெல் வகைகளை பயிரிட்டேன். 420 கிலோ அரிசி கிடைத்தது. 120 கிலோ அரிசியை எங்கள் தேவைக்கு வைத்துக் கொண்டேன். 300 கிலோ அரிசியை, 1 கிலோ, 220 ரூபாய் வீதம் விற்பனை செய்ததன் மூலம், 66,000 ரூபாய் வருமானம் கிடைத்தது.
வீட்டுக்கு எடுத்து வைத்த, 120 கிலோ அரிசி விலையையும் சேர்த்து கணக்கு பார்த்தால், 92,400 ரூபாய் கிடைத்தது.
வைக்கோல் விற்பனையில், 3,000 ரூபாய் என, கடந்தாண்டு மொத்தம், 95,400 ரூபாய் வருமானம் கிடைத்தது.
இதில், சாகுபடி செலவுகள், 24,400 ரூபாய் போக மீதி, கடந்தாண்டு 71,000 ரூபாய் லாபம் கிடைத்தது.
இன்னும் கூடுதலாக நிலம் வாங்கி, காய்கறிகள் மற்றும் பழப்பயிர்கள் சாகுபடி செய்ய வேண்டும் என்பதே என் எதிர்கால லட்சியம்.
தொடர்புக்கு
97903 68597

