/
தினம் தினம்
/
சொல்கிறார்கள்
/
நேர்மையாக உழைத்து டிபன் கடை நடத்துகிறோம்!
/
நேர்மையாக உழைத்து டிபன் கடை நடத்துகிறோம்!
PUBLISHED ON : மார் 08, 2026 01:47 AM

சென்னை, அரும்பாக்கத்தில் டிபன் கடை நடத்தி வரும் செல்வம் - கலைவாணி தம்பதி:
செல்வம்: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பக்கத்தில் இருக்கும் சுப்பிரமணியபுரம் தான் என் சொந்த ஊர். சிறு வயதிலேயே அப்பா இறந்து விட்டார்; படிக்க வழியில்லை.
இதனால், சென்னைக்கு வந்தேன். வந்தவர்களை வாரி அணைத்து வாழ வைக்கும் சென்னை, என்னையும் ஒரு தாய் மாதிரி அள்ளி அரவணைத்துக் கொண்டது. ஒரு டீக்கடையில் வேலை கிடைத்தது.
அடுத்து, ஹோட்டல் வேலைக்கு சென்றேன். கிடைக்கும் அனைத்து வேலைகளையும் தயங்காமல் செய்தேன்.
இடையில், ரயில்வே கேன்டீனில் வேலை பார்த்தேன். அதன்பின் கர்நாடகா, ஆந்திரா என பல மாநிலங்களுக்கும் சென்று வேலை பார்த்தேன்.
என் வாழ்க்கையில் சந்தோஷமான ஒரு மாற்றம் வந்தது, என் மனைவி கலைவாணியால் தான். 2002ல் எங்களுக்கு திருமணம் நடந்தது.
'ஊர் ஊராக அலைந்தது போதும்; நிலையாக ஒரு இடத்தில் வேலை பார்க்க வேண்டும்' என்று என் மனைவி கூறினார். அதன்படி, தள்ளுவண்டியில் கூழ் விற்க துவங்கி, தற்போது டிபன் கடை வரை வளர்ந்துள்ளோம்.
நான் சிரமப்பட்ட காலத்துல உறவினர்களிடமும், தெரிந்தவர்களிடமும் உதவி கேட்டு பலமுறை அவமானப்பட்டிருக்கிறேன். சென்னையில் தங்குவதற்கு சரியான இடம் இல்லாமல், அவதிப்பட்டிருக்கிறேன்.
அப்போது அரும்பாக்கம், என்.எஸ்.கே.நகரில் முனியம்மா என்ற ஒரு அம்மா தான், இரு நாட்கள் அவர்கள் வீட்டில் தங்க வைத்து பார்த்துக் கொண்டார்.
இப்போது வாழ்க்கையில் சிரமங்கள் இல்லை. ஆனாலும், இந்த இடத்தை விட்டு செல்ல மனம் இல்லை.
கடந்த, 20 ஆண்டுகளாக இங்கு தான் வாழ்ந்து வருகிறோம். வாழ்க்கையில் கஷ்டம் இருந்தாலும், நம்பிக்கை இருந்தால் எல்லாம் சரியாகும். கடுமையாக உழைக்க தயாராக இருந்தால் போதும்.
கலைவாணி: இவர், ரொம்ப வருஷமா கூலி வேலை பார்த்து வந்தார். சின்னதாக நமக்குன்னு ஒரு சொந்த தொழில் வேண்டும் என்று தோன்றியது. அப்படித்தான் தள்ளுவண்டியில் கூழ் வியாபாரம் ஆரம்பித்தோம்.
எங்களின் நேரம், காலம் பார்க்காத உழைப்பால், டிபன் கடை போடும் அளவுக்கு முன்னேற்றம் வந்தது. இந்த வறுமையோ, போராட்டமோ, எங்களின் குடும்ப வாழ்க்கையில் எந்த சலசலப்பையும் உருவாக்கவில்லை.
எங்கள் மகள் காப்பீட்டு துறையிலும், மகன் மருந்து கம்பெனியிலும் வேலை பார்க்கின்றனர். எங்களுக்கு டிபன் கடையில் தினமும் 2,000 ரூபாய் வரை கிடைக்கிறது.
சிரமம் இருந்தாலும், நேர்மையாக உழைத்து முன்னுக்கு வந்த திருப்தி இருக்கிறது!

