
ஆத்துார் பள்ளி அருகில்
தேங்கிய மழைநீரால் அவதி
ஆத்துார் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகில், சாலையோரமாக மழைநீர் தேங்கி, குட்டை போல் காட்சி அளிக்கிறது.
மேலும், அதில் தேங்கியுள்ள கொசுக்களால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் உள்ளது.
பள்ளி மாணவர்களின் நலன் கருதி, சாலையோரம் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- த.சுப்பிரமணியன், ஆத்துார்.
அனுமதி பெறாமல் இயங்கும்
தொழிற்சாலையால் குடிநீர் மாசு
மதுராந்தகம் வட்டம், சிலாவட்டம் கிராமத்தில், அரசு அனுமதி பெறாமல், தனியாருக்கு சொந்தமான தார் கலவை கலக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறும் புகை மற்றும் கழிவுகளால், சுற்றுவட்டார பகுதியில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் பாதிப்படைகிறது.
கிணற்று நீர் மாசடைவதுடன், குடிநீரின் சுவை குறைந்து, துர்நாற்றம் வீசுகிறது. மேலும், அதிகப்படியாக வெளியேறும் புகையால், மூச்சுத்திணறல் மற்றும் உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.
மேலும், இதன் அருகில் ஊராட்சி ஒன்றிய பள்ளியும் உள்ளது. மாணவர்களுக்கும் சுவாசப் பிரச்னைகள் ஏற்படுகின்றன.
எனவே, அனுமதி பெறாமல் இயங்கும் தனியார் நிறுவனத்திற்கு தடை விதித்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.ஆதிமூலம், சிலாவட்டம்.
சேதமான வழிகாட்டி பலகை
சாலையூர் சந்திப்பில் சிரமம்
சித்தாமூர் அடுத்த வேட்டூர் கிராமத்தில், சாலையூர் செல்லும் சாலையில், நீர்பெயர் மற்றும் வேட்டூர் கிராமத்திற்கு செல்லும் சந்திப்பு உள்ளது.
மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பாக, சாலை சந்திப்பு அருகே வழிகாட்டிப் பலகை அமைக்கப்பட்டு இருந்தது.
வழிகாட்டிப் பலகை தற்போது சேதமடைந்து சாய்ந்துள்ளதால், புதிதாக சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் வழிதெரியாமல் அவதிப்படுகின்றனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், சேதமடைந்துள்ள வழிகாட்டிப் பலகையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இ.திருக்குமரன், சித்தாமூர்.
ஊரப்பாக்கம் தெரு விளக்குகளை
சீரமைக்க வேண்டுகோள்
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி பிரியா நகர் பிரதான சாலை மற்றும் அருள் நகர், காவேரி தெரு உள்ளிட்ட பகுதிகளில், சில நாட்களாக தெரு விளக்குகள் எரியவில்லை.
இதனால், அப்பகுதியில் இரவு நேரங்களில் வெளியே செல்ல, பெண்கள், முதியவர்கள் அச்சப்படுகின்றனர். எனவே, எரியாத தெரு விளக்குகளை பழுது பார்த்து சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.பாலாஜி, ஊரப்பாக்கம்.