PUBLISHED ON : செப் 26, 2024 12:00 AM

மாட்டி கொள்ளாமல் மண் அள்ள 'கிரீன் சிக்னல்!'
''தமிழகம் முதலிடம் பிடிச்சிருக்காம் பா...'' என்றபடியே, ஏலக்காய் டீயை உறிஞ்சினார் அன்வர்பாய்.
''மது விற்பனையில தான ஓய்...'' என, கிண்டலாக கேட்டார் குப்பண்ணா.
''இல்ல... சமீபத்துல, டில்லியில பா.ஜ., உறுப்பினர் சேர்க்கைக்கான தேசிய அளவிலானஆலோசனை கூட்டம் நடந்திருக்குது பா...
''இதுல, தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா, அமைப்பு பொதுச்செயலர் கேசவவிநாயகம், மாநில துணை தலைவர்
ஏ.பி.முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக்கிட்டாங்க...
''இதுல, கட்சி வளர்ந்துட்டு வர்ற தென் மாநிலங்கள்ல நடக்கிற உறுப்பினர் சேர்க்கையில், 'தமிழக பா.ஜ., தான் முதலிடத்தை பிடிச்சிருக்கு'ன்னு மேலிட தலைவர்கள் பாராட்டியிருக்காங்க பா...
''அதாவது, உறுப்பினர்
சேர்க்கை அறிவித்த, 20 நாட்கள்ல, 15 லட்சம் பேரை சேர்த்திருக்காங்க பா... அடுத்த மாசம், 15ம் தேதி வரை
உறுப்பினர் சேர்க்கை பணிகள் நடக்க
இருக்குது...
''அதனால, 'ஒரு கோடி இலக்கை எட்ட இன்னும் சுறுசுறுப்பா பணியாற்றுங்க'ன்னு மேலிட தலைவர்கள் ஊக்கம் குடுத்து
அனுப்பியிருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''கவுன்சிலிங் எப்ப நடக்கும்னு எதிர்பார்த்துட்டு இருக்காங்க...'' என, அடுத்த தகவலுக்கு தாவினார் அந்தோணிசாமி.
''எந்த துறையில வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''தமிழகம் முழுக்க, 600க்கும் மேற்பட்ட புள்ளியியல் ஆய்வாளர்கள் இருக்காங்க... இவங்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங்,
ஜூன் 26ல் நடத்துறதா அறிவிச்சாங்க...
''இதுக்கான முன்னுரிமை பட்டியலை, முதல் நாள் அறிவிச்சாங்க... தமிழகம் முழுக்க இருந்து பலரும்
கவுன்சிலிங்கில் பங்கேற்க சென்னையில குவிஞ்சாங்க...
''ஆனா, ராத்திரியோட ராத்திரியா, முன்னுரிமை பட்டியல் மாற்றப்பட்டு, கவுன்சிலிங் அன்று வேறு பட்டியலை ஒட்டியிருக்காங்க... இதுக்கு, ஆய்வாளர்கள் கடும் எதிர்ப்பு
தெரிவிக்கவே, கவுன்சிலிங்கையே ரத்து பண்ணிட்டாங்க...
''சீக்கிரமே மறுதேதியைஅறிவிக்கிறோம்னு சொன்னாங்க...ஆனா, மூணு மாசமாகியும் இன்னும் தேதி அறிவிக்கலைங்க... 'தலைமை அலுவலகத்தில்
நடக்கும் ஜாதி அரசியல் தான் இதுக்கு காரணம்'னு புள்ளியியல் ஆய்வாளர்கள் புலம்புறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''மாட்டிக்காம மண் அள்ளுங்கோன்னு பச்சை கொடி காட்டியிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''எந்த ஊருல வே...'' என கேட்டார், அண்ணாச்சி.
''கோவை மாவட்டம்,தொண்டாமுத்துார் ஏரியாவுல, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள்ல, மண் கொள்ளை
அதிகமா நடக்கறது...
''புகார்கள் வர்றப்ப மட்டும், வருவாய் மற்றும் கனிமவள துறையினர் பெயரளவுக்குஆய்வு பண்றா ஓய்... அப்புறமா எந்த நடவடிக்கையும்
எடுக்கறது இல்ல...
''ஆனா, 'மண் எடுக்கறதுல எந்த சிக்கலும் இல்லை... ஆனா, லாரிகளை மட்டும் பொதுமக்கள் சிறைபிடிக்காம கவனமா நடந்துக்குங்க'ன்னு கனிமவளத் துறையினர் கிரீன் சிக்னல்
குடுத்திருக்கா ஓய்...''இதனால, எந்த பயமும் இல்லாம மண் கொள்ளை அமோகமா நடக்கறது...அதிகாரிகளுக்கு
மாமூலும் கொட்டறது ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.பெஞ்சில் புதியவர்கள்அமர, பெரியவர்கள் கிளம்பினர்.