/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ஏப்., 5க்கு பின் மதிய உணவில் மாணவர்களுக்கு முட்டை 'மிஸ்ஸிங்'
/
ஏப்., 5க்கு பின் மதிய உணவில் மாணவர்களுக்கு முட்டை 'மிஸ்ஸிங்'
ஏப்., 5க்கு பின் மதிய உணவில் மாணவர்களுக்கு முட்டை 'மிஸ்ஸிங்'
ஏப்., 5க்கு பின் மதிய உணவில் மாணவர்களுக்கு முட்டை 'மிஸ்ஸிங்'
PUBLISHED ON : ஏப் 24, 2024 12:00 AM
தமிழகத்தில் அரசு, உதவி பெறும் பள்ளிகளில், மதிய உணவுத் திட்டத்தில், ஏப்., 5க்கு பின் எவ்வித அறிவிப்பும் இல்லாமல் சத்துணவுடன் முட்டை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் முட்டை வழங்கப்படுகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை ஒவ்வொரு நாளும் கலவை சாதங்களுடன் திங்கள் -முட்டை மசாலா, செவ்வாய் - மிளகு முட்டை, புதன் - தக்காளி மசாலா முட்டை, வியாழன் - மசாலா முட்டை, வெள்ளி - வேக வைத்த முட்டை வகைகள் வழங்க வேண்டும்.
ஒன்று முதல் 9ம் வகுப்புக்கான ஆண்டு தேர்வுகள் மார்ச் 27 துவங்கியது. ஒன்று முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.,5 ல் தேர்வுகள் முடிவுற்றன. நான்கு முதல் 9ம் வகுப்புக்கு ஏப்.,10 மற்றும் 12 ல் நடக்க இருந்த அறிவியல், சமூக அறிவியல் தேர்வு ஏப்.,22 மற்றும் 23 க்கு மாற்றப்பட்டது. மதுரையில் மட்டும் கடைசி தேர்வு ஏப்.,24க்கு மாற்றப்பட்டது.
இதற்கிடையே ஏப்., 6 முதல் 21 வரை கோடை மற்றும் லோக்சபா தேர்தல் காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால் ஏப்., 8, 10, 12 ஆகிய நாட்களில் சீருடைக்கு அளவு எடுப்பது, ஆதார் பணிகள் ஆகியவை காரணமாக மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என வாய்மொழி உத்தரவிடப்பட்டது.
அதன் பின் நேற்று, நான்கு முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு, கடைசி தேர்வான சமூக அறிவியல் நடந்தது. மதுரையில் மட்டும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் காரணமாக, கடைசி தேர்வு இன்று நடக்கிறது.
இந்நிலையில் விடுமுறை நாட்கள் தவிர்த்து ஏப்., 5க்கு பின் செயல்பட்ட பள்ளி வேலை நாட்களில், தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் சத்துணவுடன் முட்டை வழங்கப்படவில்லை.
இதுகுறித்து பெற்றோர் கூறியதாவது:
மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மதிய உணவு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அந்தந்த பி.டி.ஓ.,க்களிடம் முட்டை வேண்டும் என 'தேவை பட்டியல்' கொடுக்கப்பட்டும், வழங்கப்படவில்லை. முட்டை வழங்கவில்லை என்றால் ஏன் முன்கூட்டியே அறிவிக்கவில்லை?
இக்கல்வியாண்டில் 210 நாட்கள் முட்டை வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தம் உள்ளது. அதற்கான நிதியும் அரசு ஒதுக்கிவிட்டது. ஆனால் தற்போது வரை சில மாவட்டங்களில் 193 முதல் 195 நாட்கள் வரையே வேலைநாட்களாக இருந்துள்ளது.
ஒப்பந்தப்படி 10 நாட்களுக்கும் மேலாக சத்துணவில் முட்டை வழங்கப்படவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

