PUBLISHED ON : மார் 28, 2024 12:00 AM

மார்ச் 28, 1904
ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் ராமலிங்க சர்மா - வெங்கட லட்சுமம்மா தம்பதியின் மகனாக, 1904ல் இதே நாளில் பிறந்தவர் உப்பலதடியம் நாகையா சர்மா.
இவர், திருப்பதி தேவஸ்தானம் உதவித்தொகையுடன் பட்டப்படிப்பு முடித்து, குமாஸ்தாவாக பணியாற்றினார். சித்துாரில் பத்திரிகையாளராகவும், ராம விலாச சபாவில் நாடக நடிகராகவும் வளர்ந்தார். தெலுங்கு சினிமாக்களில் நடித்து, தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.
சீனிவாச அய்யங்கார், சத்தியமூர்த்தியின் விடுதலை போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு, கவுஹாத்தி மாநாட்டில் பாடினார். தண்டி யாத்திரையில் பங்கேற்றார். வந்தே மாதரம், சுமங்கலி உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்தார்.
தமிழில் நடித்த, அசோக்குமார், மீரா, என் வீடு உள்ளிட்ட படங்களால் புகழடைந்தார். 'ரேணுகா பிலிம்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனம் துவங்கியதுடன் இசையமைப்பாளர், இயக்குனர், பின்னணி பாடகர் என பல திறமைகளையும் வெளிக்காட்டினார். தன் 69வது வயதில், 1973, டிசம்பர் 30ல் மறைந்தார்.
'பத்மஸ்ரீ' விருது பெற்ற முதல் தென்மாநில நடிகர் பிறந்த தினம் இன்று!