/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
பொருட்காட்சியில் 'புகுந்து விளையாடும்' தஞ்சை புள்ளி!
/
பொருட்காட்சியில் 'புகுந்து விளையாடும்' தஞ்சை புள்ளி!
பொருட்காட்சியில் 'புகுந்து விளையாடும்' தஞ்சை புள்ளி!
பொருட்காட்சியில் 'புகுந்து விளையாடும்' தஞ்சை புள்ளி!
PUBLISHED ON : மே 16, 2024 12:00 AM

''பங்கு தகராறு வெடிச்சிட்டதால, இலவசமா குடிநீர் கிடைக்குது பா...'' என்ற படியே, பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.
''எந்த ஊர் விவகாரம் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''திருவள்ளூர் மாவட்டம், நெமிலிச்சேரி ஊராட்சி 2வது வார்டு, நாகாத்தம்மன் நகரில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கு... 2018 - 19ல இங்க, 10 லட்சம் ரூபாய் செலவுல, 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி அமைச்சாங்க பா...
''இதுல, பொதுமக்களுக்கு இலவசமா வழங்க வேண்டிய குடிநீரை, குடம் 5 ரூபாய்னு விற்பனை செஞ்சாங்க... தினமும், 200 - 300 குடங்கள் தண்ணீர் விற்பனையாகும் பா...
''இந்த பணத்தை, ஊராட்சியின் தலை மற்றும் துணை பொறுப்புல இருக்கிற இரண்டு பெண்களும் பங்கு போட்டுட்டு இருந்தாங்க... பங்கு பிரிக்கிறதுல, சமீபத்துல ரெண்டு பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பே ஆயிடுச்சுன்னு சொல்றாங்க...
''இதனால, குடிநீருக்கு கட்டணம் வசூலிக்கிறதை நிறுத்திட்டாங்க... இப்ப, மக்கள் இலவசமா தண்ணீர் பிடிச்சிட்டு போறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''மொத்தம் 10 லட்சம் வருமானத்துல, 13 லட்சம் சம்பளம் குடுக்க முடியுமா வே...'' என கேட்ட பெரியசாமி அண்ணாச்சியே, தொடர்ந்தார்...
''சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டியில் அரசு ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளி பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன, நாணய சங்கம் இருக்கு... இதுல, செயலரா இருந்தவர் மார்ச் 31ல், 'ரிட்டயர்' ஆகிட்டாரு வே...
''புதிய செயலரை நியமிக்காததால, சங்கம் பூட்டியே கிடக்கு... இந்த பதவிக்கு வர, சேலம் நகர கூட்டுறவு வங்கியில் பணிபுரியும் ஒருத்தர் முயற்சி எடுக்காரு... சீனியரான இவர், மாசம் 1 லட்சம் ரூபாய்க்கு மேல சம்பளம் வாங்குதாரு வே...
''ஆனா, பனமரத்துப் பட்டி சங்கத்தின் மொத்த ஆண்டு வருமானமே 10 லட்சத்துக்கு கீழதான்... சேலம் நபர் இங்க வந்தா, வருஷத்துக்கு அவருக்கு மட்டுமே 13 லட்சம் சம்பளம் தரணுமுல்லா...
''இதனால, ஆளுங்கட்சி ஆதரவு பெற்ற சங்கத்தின் முன்னாள் தலைவர் ஒருத்தர், கூட்டுறவு துறையில ஜூனியரா பணிபுரியும் ஒருத்தரை சங்க செயலரா கொண்டு வர முயற்சி பண்ணுதாரு வே...'' என்றார், அண்ணாச்சி.
''பொருட்காட்சியில புகுந்து விளையாடுறாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''விளக்கமா சொல்லும் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''தஞ்சாவூரை சேர்ந்த ஒருத்தர், தமிழக வி.வி.ஐ.பி., மனைவியின் உறவினர்னு செய்தி, மக்கள் தொடர்பு துறை அதிகாரிகளை மிரட்டி, பொருட்காட்சி கடைகளை மொத்தமா எடுத்துடுறாருங்க... அப்புறம், அதை உள் வாடகைக்கு விட்டு சம்பாதிக்கிறாருங்க...
''சென்னையில் நடந்த பொருட்காட்சியில மட்டும், இப்படி கடைகளை எடுத்து, உள்வாடகைக்கு விட்டு, 1.50 கோடி ரூபாய் சம்பாதிச்சிட்டா ருங்க... அடுத்து, சேலம் பொருட்காட்சியிலும் கல்லா கட்டியவர், இப்ப கோவை பொருட்காட்சியிலும் கடைகளை எடுக்க களத்துல குதிச்சிருக்காருங்க...
''இதெல்லாம், சம்பந்தப்பட்ட வி.வி.ஐ.பி.,யின் மனைவிக்கு தெரியுமா அல்லது அவங்க பெயரை இவர் தவறா பயன்படுத்தி சம்பாதிக்கிறாரான்னு தெரியாம அதிகாரிகள் முழியா முழிக்கிறாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
பக்கத்தில் அமர்ந்திருந்த இளைஞரின் மொபைல் போனில் ஓடிய செந்திலின் வாழைப்பழ காமெடியை குப்பண்ணா ரசிக்க, மற்றவர்கள் இடத்தை காலி செய்தனர்.