தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ அ.தி.மு.க.,வுக்கு 'யெஸ்' பா.ஜ.,வுக்கு 'நோ!'

அ.தி.மு.க.,வுக்கு 'யெஸ்' பா.ஜ.,வுக்கு 'நோ!'

அ.தி.மு.க.,வுக்கு 'யெஸ்' பா.ஜ.,வுக்கு 'நோ!'


PUBLISHED ON : ஏப் 11, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 11, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''கஞ்சா கும்பலால,ஊரே பீதியில உறைஞ்சு கிடக்குல்லா...'' என்றபடியே, கருப்பட்டி காபியுடன் பெஞ்சில் அமர்ந்தார், பெரியசாமி அண்ணாச்சி.

''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் இளைஞர்களை குறி வைத்து, கஞ்சா விற்பனை கும்பல் செயல்படுது... சமீபத்துல, கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க முயன்ற, குறிப்பிட்ட சமூகத்தின் இளைஞர்கள் நாலு பேரை கத்தி, அரிவாளால் வெட்டி ரணகளப்படுத்திட்டு வே...

''இதுல, ஒரு இளைஞருக்கு தொடையில நரம்புகள் அறுந்து ஆபத்தான நிலையில, சிகிச்சை எடுத்துட்டு இருக்காரு... 'இனியும் போலீசார் வேடிக்கை பார்க்காம, கஞ்சா கும்பல் மேல நடவடிக்கை எடுக்கணும்... இல்லன்னா பெரிய அளவுல சட்டம் - ஒழுங்கு பிரச்னை வெடிக்கும்'னு கீழக்கரை மக்கள் பீதியோட சொல்லுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''ஏக் தம்ல 34 தொகுதிகளை வலம் வர போறாருங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''பா.ஜ., கூட்டணியில த.மா.கா., சேர்ந்து, மூணு தொகுதிகள்ல போட்டியிடுதே... த.மா.கா., தலைவர் வாசன் பிரசாரம் துவங்கி ஊர், ஊரா போயிட்டு இருக்காருங்க... 17 ம் தேதி வரை மொத்தம் 22 நாள் பிரசாரம் செய்றாரு... இதுல, முதல் கட்டமா 34 தொகுதிகளை கவர் பண்ண போறாருங்க...

''அதுலயும், 13 நாட்கள் மட்டும் தான் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு பிரசாரம் பண்ணுவாராம்... த.மா.கா., போட்டியிடும் ஸ்ரீபெரும்புதுார், துாத்துக்குடி, ஈரோடு ஆகிய மூணு தொகுதிகள்ல தலா மூணு நாள் வீதம் ஒன்பது நாள் பிரசாரம் செய்றாருங்க...

''ஒரு லோக்சபா தொகுதியில வர்ற ஆறு சட்டசபை தொகுதிகளையும் வளைத்து பிரசாரம் செய்ற மாதிரி, ஆறு பாயின்ட்களை தேர்வு பண்ணி பேச இருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''அ.தி.மு.க.,வுக்கு அனுமதி தந்தவா, பா.ஜ.,வுக்கு மறுத்துட்டா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''என்ன விவகாரம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''திருச்சி, தென்னுார் உழவர் சந்தை மைதானம், மாநகராட்சி கட்டுப்பாட்டுல இருக்கு... 4.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மைதானத்துல எல்லா கட்சி பொதுக் கூட்டங்களும் நடக்கும் ஓய்...

''ஆனா, கடந்த ஒரு வருஷமா எந்த கூட்டத்துக்கும் அனுமதி தரல... சமீபத்துல, அ.தி.மு.க., தரப்பு கேட்டப்பவும் முதல்ல அதிகாரிகள் மறுத்திருக்கா ஓய்...

''ஆனா, சுகாதார துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும், திருச்சி மாநகர் மாவட்டச் செயலரான சீனிவாசனும், தேர்தல் கமிஷன் பரிந்துரை பட்டியலில் அந்த மைதானம் இடம் பெற்றிருந்த கடிதத்தை காட்டி, மாநகராட்சி கமிஷனரிடம் வாக்குவாதம் பண்ணி அனுமதி வாங்கிட்டா... அப்பறமா அந்த மைதானத்துல, பழனிசாமி பங்கேற்ற பிரமாண்ட பொதுக் கூட்டத்தையும் ரெண்டு பேரும் சேர்ந்து நடத்தி முடிச்சுட்டா ஓய்...

''இதுல காமெடி என்னன்னா, சமீபத்துலதிருச்சிக்கு வந்த பா.ஜ., தலைவர் நட்டா பொதுக் கூட்டத்தையும் இங்க நடத்த பா.ஜ.,வினர் முயற்சி பண்ணா... ஆனா, மாநகராட்சி தரப்புல, 'அங்க பராமரிப்பு பணிகள் நடக்கறதால நோ பர்மிஷன்'னு மறுத்துட்டாளாம் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

''திராவிட கட்சிகள் பாணியில, அவங்களும் போராடி அனுமதி வாங்க கத்துக்கணும் பா...'' என்றபடியே அன்வர்பாய் எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us