/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
வசூலில் புகுந்து விளையாடும் பெண் அதிகாரி!
/
வசூலில் புகுந்து விளையாடும் பெண் அதிகாரி!
PUBLISHED ON : ஏப் 16, 2025 12:00 AM

ஊட்டி வர்க்கியை கடித்தபடியே, ''ஓவரா வாயை விட்டுட்டு, இப்ப தர்மசங்கடத்துல தவிக்காரு வே...''என, விவாதத்தை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தான்... பா.ஜ., கூட்டணியை அ.தி.மு.க., முறிச்சதும், 'இனி எந்த காலத்திலும் அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க மாட்டோம்'னு ஆவேசமா பேட்டிகள் தந்தாரு வே...
''அதோட, போற இடத்துல எங்க மைக் கிடைச்சாலும், பா.ஜ.,வினரை கடுமையா விமர்சனம் பண்ணிட்டு இருந்தாரு... இப்ப, பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி மறுபடியும் உருவாகிட்டுல்லா வே...
''இதனால, ஜெயகுமார் அதிர்ச்சியில இருக்காரு... 'அவர் கட்சியை விட்டு வெளியேறப் போறாரு, தி.மு.க.,வுல சேரப் போறாரு'ன்னு தகவல்கள் பரவுச்சு... ஆனா, கட்சி மேலிடம் அவரை சமாதானம் பண்ணிட்டதால, அமைதியாகிட்டாரு வே...'' என்றார், அண்ணாச்சி.
''புது ஆபீஸ் திறந்தும், 20,000 ரூபாயை வாடகையா குடுக்கறா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''துாத்துக்குடி மாவட்டம், உடன்குடி பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல, மாசம் 20,000 ரூபாய் வாடகையில் பத்திரப்பதிவு ஆபீஸ் செயல்படறது... இங்க, 'சீனியர் சிட்டிசன்ஸ்' ஏற முடியாத அளவுக்கு மாடிப்படிகள் இருக்கு... வேற எந்த அடிப்படை வசதிகளும் இல்ல ஓய்...
''இதனால, குலசேகரபட்டினம் மெயின் ரோட்டுல, பதிவுத்துறை சார்பில், 1.50 கோடி ரூபாய் செலவுல, நவீன வசதிகளுடன் புதிய சார் - பதிவாளர் ஆபீஸ் கட்டியிருக்கா... இதை, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமா முதல்வர் ஸ்டாலினும் திறந்து வச்சுட்டார் ஓய்...
''ஆனா, இன்னும் புதிய கட்டடத்துக்கு மாறாம, பழைய கட்டடத்துலயே மாசம், 20,000 ரூபாய் வாடகை குடுத்துண்டு இருக்கா... 'மக்களின் வரிப்பணத்தை இப்படி பாழடிக்கறாளே'ன்னு சமூக ஆர்வலர்கள் புலம்பறா... இது சம்பந்தமா, கோர்ட்ல வழக்கு போடலாமான்னும் அவா ஆலோசனை நடத்திட்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''ஏகப்பட்ட புகார்கள் போயும் பலனில்லை பா...'' என்றார், அன்வர்பாய்.
''யாரு மேலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''கோவையில, உயர்கல்வி துறையில் ஒரு பெண் அதிகாரி, அதே பணியிடத்தில் ஏழெட்டு வருஷமா இருக்காங்க... 'ரிட்டயர்' ஆகும் பேராசிரியர்களின் பண பலன்களுக்கான பைல்களை இவங்க, 'ஓகே' செய்யணும்னா, 'கட்டிங்' வெட்டணும் பா...
''அப்படி வைக்காதவங்க பைல்களை கிடப்புல போட்டுடுறாங்க... எந்த காரியமா இருந்தாலும், பணம் இல்லாம இவங்களிடம் வேலையே நடக்காது பா...
''பல்கலை ஆசிரியர்கள் சங்கம் சார்புல, பெண் அதிகாரி மீது உயர்கல்வி துறை மேலிடத்துக்கு ஏகப்பட்ட புகார்கள் அனுப்பியிருக்காங்க... ஆனா, எந்த நடவடிக்கையும் இல்ல பா...
''இதனால, பலரும் அதிருப்தியில இருக்காங்க... அதே நேரம், பெண் அதிகாரி எந்த பயமும் இல்லாம வசூல்ல புகுந்து விளையாடுறாங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
அவ்வழியே சென்ற சிறுமியை நிறுத்திய அண்ணாச்சி, ''கலைச்செல்வி, உங்கப்பா ஊர்ல இருந்து வந்துட்டாரா தாயி...'' என கேட்க, சிறுமி, 'ஆமாம்' என்ற அர்த்தத்தில் தலையை ஆட்டியபடியே நடக்க, பெரியவர்களும் கிளம்பினர்.