/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
பதவி போனாலும் ' பவர் ' குறையாத ' மாஜி ' அமைச்சர்!
/
பதவி போனாலும் ' பவர் ' குறையாத ' மாஜி ' அமைச்சர்!
பதவி போனாலும் ' பவர் ' குறையாத ' மாஜி ' அமைச்சர்!
பதவி போனாலும் ' பவர் ' குறையாத ' மாஜி ' அமைச்சர்!
PUBLISHED ON : ஜூலை 09, 2025 12:00 AM

பில்டர் காபியை உறிஞ்சியபடியே, ''உலகம் பூரா பரப்ப திட்டம் போட்டிருக்கா ஓய்...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''என்ன விஷயத்தை பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன், 'பென்' என்ற நிறுவனத்தை நடத்திட்டு வராரோல்லியோ... இந்த அமைப்பு மூலமா தான் சட்டசபை, லோக்சபா தேர்தல்ல வேட்பாளர் தேர்வு எல்லாம் நடந்துது... கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் செயல்பாடுகளை எல்லாம் கண்காணிச்சு, அரசுக்கு அறிக்கையும் குடுக்கறா ஓய்...
''இந்த நிறுவனம், முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியா, திராவிட இயக்கம் குறித்த வரலாற்று தகவல்களை, உலக அளவில் கொண்டு போக திட்டமிட்டிருக்கு... இதுக்காக, பிரிட்டன்ல இருக்கற முக்கியமான பல்கலையுடன் ஒப்பந்தம் போட்டிருக்கா ஓய்...
''லண்டன்ல இருக்கற அந்த பல்கலை நுாலகத்தின் ஒரு பகுதியில், திராவிட இயக்க தகவல்களுக்கு தனி பிரிவும் துவங்கியிருக்கா... திராவிட இயக்க வரலாறு, அரசியல், கலை, இலக்கியம் சம்பந்தமான, 200 புத்தகங்களை, அந்த நுாலகத்துக்கு வழங்கியிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''அம்மா மண்டபத்தை விற்க போறதா தகவல் பரவிட்டுல்லா...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''பொதுமக்கள் நியாயமான கட்டணத்துல, திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடத்த, போன அ.தி.மு.க., ஆட்சியில், சென்னை, மதுரை மற்றும் தேனியில் மொத்தம், 84 கோடி ரூபாய் செலவுல, அம்மா திருமண மண்டபங்களை கட்டுனாவ...
''சென்னையில மட்டும் நாலு மண்டபங்கள் கட்டுனாவ வே...இதுல, மதுரை மண்டபம் மட்டும் தான் மக்கள் பயன்பாட்டில் இருக்கு... தேனி, சென்னையில் ஆவடி, அயப்பாக்கம், கொரட்டூர், வேளச்சேரியில் கட்டிய மண்டபங்கள் இன்னும் பயன்பாட்டுக்கு வரல வே...
''மண்டபத்துக்கு தேவையான பொருட்கள் எதுவும் இல்லாததால, அதை நடத்த டெண்டர் விட்டும், யாரும் முன்வரலன்னு சொல்லுதாவ... இந்த சூழல்ல, ஆவடி மற்றும் அயப்பாக்கம் மண்டபங்களை விற்க போறதா தகவல் பரவுச்சு வே...
''இது பத்தி அதிகாரிகளிடம் கேட்டப்ப, 'அதெல்லாம் பொய்... மண்டபத்துக்கு தேவையான பொருட்களை வாங்கி போட்டு, வீட்டுவசதி வாரியம் இதை நிர்வாகம் பண்ண போகுது'ன்னு சொல்லுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''பதவி போனாலும், 'பவர்' போகலைங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''யாருக்கு பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''பெண்களை அவமதிக்கும் வகையிலும், ஹிந்துக்கள் மனம் புண்படும் விதமாகவும் பேசியதால, கோர்ட் உத்தரவுப்படி அமைச்சர் பதவியை பொன்முடி பறிகொடுத்தாரே... பதவி போனாலும், அவரது சொந்த மாவட்டமான விழுப்புரத்தில் இன்னும் அமைச்சர் பந்தாவோட தான் வலம் வர்றாருங்க...
''அமைச்சரா இருந்தப்ப, அவருக்கு வழங்கப்பட்ட, பி.எஸ்.ஓ., எனப்படும் தனி பாதுகாப்பு அதிகாரியை அரசு இன்னும் வாபஸ் வாங்கல... தினமும் காலையில் பொன்முடி, 'ஷட்டில் காக்' விளையாடுறதுக்கு கூட, தனி பாதுகாப்பு அதிகாரியுடன் தான் போறாருங்க...
''பொன்முடி விளையாடும்போது, பாதுகாப்புக்கு நிற்கும் அதிகாரி படத்தை, சிலர் சமூக வலைதளங்கள்ல பதிவிட்டு, தி.மு.க.,வை வறுத்தெடுத்துட்டு இருக்காங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.