PUBLISHED ON : செப் 13, 2026 01:32 AM

டபராவில் வந்த பில்டர் காபியை வாங்கியபடியே, “மானியம் வழங்க முடியல ஓய்...” என, அரட்டைக்கு பிள்ளையார் சுழி போட்டார் குப்பண்ணா.
“எந்த துறையில பா...” என கேட்டார் அன்வர்பாய்.
“தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில், தேசிய தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்துல, விவசாயிகளுக்கு நிறைய நலத்திட்டங்களை வழங்கறா... இந்த திட்டங்கள் எல்லாத்தையும், 'ஹெக்டேர்' அடிப்படையில் தான் தரா ஓய்...
“அதாவது, 2.5 ஏக்கர் கொண்டது ஒரு ஹெக்டேர்... இதனால, 10, 20 சென்ட் நிலம் வச்சிருக்கற சிறு, குறு விவசாயிகளுக்கு, இந்த மானியங்கள் நேரடியா கிடைக்க மாட்டேங்கறது ஓய்...
“மானியமா வர்ற உரங்களை பிரிச்சு குடுத்தாலும், அதுக்கான, 'கம்ப்யூட்டர் சாப்ட்வேர்'ல, 'பில்' போட முடியல... இதனால, பெரிய விவசாயிகள் பெயர்ல பில் போட்டு, சிறு விவசாயிகளுக்கு மானியங்களை பிரிச்சு குடுக்கறா ஓய்...
“இப்படி பண்றதால, தணிக்கையில பல சிக்கல்கள் வருது... இதனால, 'நிலப் பரப்பை கணக்கிடாம, விவசாயி என்ற அடிப்படையில் மானியங்களை நேரடியா வழங்கணும்'னு, தமிழக வேளாண் துறை அதிகாரிகள் சொல்றா ஓய்...” என்றார் குப்பண்ணா.
“நீதிமன்ற பணத்தையே, 'ஆட்டை' போட்டுட்டாங்கல்லா...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
“திண்டுக்கல் மாவட்டம், பழனி சார்பு நீதிமன்றத்தில் பணியாற்றிய ஒரு பெண் ஊழியர், வழக்குகளில், 'டிபாசிட்' செய்யப்படும் தொகை மற்றும் ஆவணங்களை பராமரிக்கும் பொறுப்புல இருந்தாங்க... சமீபத்தில் நடந்த தணிக்கையில், டிபாசிட் தொகையை நீதிமன்ற கணக்கில் வரவு வைக்காம இருந்தது தெரியவந்துச்சு வே...
“விசாரிச்சதுல, பல லட்சம் ரூபாயை பெண் ஊழியர் கையாடல் பண்ணியது அம்பலமாச்சு... இப்ப, அவங்களை கைது பண்ணியிருக்காவ வே...
“இதனால, 'மோசடியில பாதிக்கப்பட்டவங்க, நீதி கேட்டு நீதிமன்றங்களுக்கு வர்றாவ... அங்கயே பணம் கையாடல் நடந்தா என்ன அர்த்தம்'ன்னு, பொதுமக்கள் புலம்புதாவ வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி.
தன் மொபைல் போனை பார்த்து, “சங்கீதா மேடம், 'மெசேஜ்' அனுப்பியிருக்காங்க... அப்புறமா பேசிக்கலாம்...” என முணுமுணுத்த அந்தோணிசாமியே, “அமைச்சர் பெயர்ல ஆட்டம் போடுறாருங்க...” என்றார்.
“யாருப்பா அது...” என கேட்டார் அன்வர்பாய்.
“துாத்துக்குடியைச் சேர்ந்த த.வெ.க., - எம்.எல்.ஏ., முதல்வரின் நண்பர் என்ற, 'கோட்டா'வில் அமைச்சர் பதவியை பிடிச்சிட்டாரே... 'தொகுதியிலயே தங்குவேன்'னு வாக்கு குடுத்தவர், இப்ப விருந்தினர் மாதிரி அப்பப்ப மட்டும் தொகுதிக்கு வந்துட்டு போறாருங்க...
“இவருக்கு சமீபத்துல, கட்சியில மாவட்டச் செயலர் பதவியும் குடுத்துட்டாங்க... சாயந்தரம், 6:00 மணிக்கு மேல அவரை சந்திக்க முடியாம, கட்சி நிர்வாகிகள் தவிக் கிறாங்க...
“கட்சி பதவி, 'டெண்டர்'கள், அதிகாரிகள் இடமாறுதல்னு எதுவா இருந்தாலும், அவரது உறவினர் தான், 'டீல்' பண்றாரு... எல்லாத்துக்கும் கட்டணம் நிர்ணயிக்காத குறையா, 'கட்டிங்'கையும் கறந்துடுறாருங்க...
“அமைச்சர் பெயரை பயன்படுத்தி அதிகாரிகளையும் மிரட்டுறாரு... 'இவரால அமைச்சருக்கு தான் கெட்ட பெயர்'னு, த.வெ.க.,வினர் புலம்புறாங்க...'' என முடித்தார் அந்தோணிசாமி.
“ஸ்ரீநாத், இப்படி உட்காரும்... ஸ்ரீதர் வரலையா ஓய்...” என நண்பருக்கு இடம் தந்தபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
