இடமாறுதல் வசூலில் புகுந்து விளையாடும் இருவர் அணி!
இடமாறுதல் வசூலில் புகுந்து விளையாடும் இருவர் அணி!
PUBLISHED ON : ஜூன் 24, 2026 01:07 AM

டபராவில் பில்டர் காபியை ஆற்றியபடியே, “கையும் களவுமா பிடிச்சும் வழக்கு போடல ஓய்...” என விவாதத்தை ஆரம்பித்தார் குப்பண்ணா. “என்ன விவகாரமுங்க...” என கேட்டார் அந்தோணிசாமி.
“பெரம்பலுார் மாவட்டம், அம்மாபாளையம் கிராமத்துல, 10ம் வகுப்பு மட்டுமே படிச்ச மணி என்பவர், நோயாளிகளுக்கு ஊசி போட்டு சிகிச்சை தர்றதா, கலெக்டர் சரண்யா ஹரிக்கு புகார் வந்துது... அவங்க உத்தரவுப்படி, மருத்துவ பணிகள் இணை இயக்குநர் டாக்டர் மதியழகன் குழுவினர், அம்மாபாளையத்துக்கு போனா ஓய்...
“அங்க, 'தன்ஷிகா மெடிக்கல் ஸ்டோர்'ல இருந்த மணியை பிடிச்சு விசாரிச்சா... அப்ப, மணி மொபைல் போனுக்கு பேசிய ஒருத்தர், 'என் உறவினருக்கு உடம்பு சரியில்ல... வந்து பாருங்க'ன்னு கூப்பிட்டார் ஓய்...
“உடனே, மணியுடன் அந்த வீட்டுக்கு மருத்துவ குழுவினரும் போனா... அங்க போனதுமே மணியிடம் அங்கிருந்த நோயாளி, 'டாக்டர், ரெண்டு நாளைக்கு முன்னாடி நீங்க ஊசி போட்டதுல வலி குறைஞ்சது... இப்ப மறுபடியும் வலிக்குது... இன்னொரு ஊசி போடுங்க'ன்னு சொன்னதை கேட்டு, மருத்துவ குழு அதிர்ச்சியாயிடுத்து ஓய்...
“மணி மீது செஞ்சேரி போலீசில் டாக்டர் மதியழகன் புகார் குடுத்தார்... ஆனா, மெடிக்கல் ஸ்டோர்ல ஆய்வு நடத்தியப்ப சிகிச்சை அளிக்கறதுக்கான ஸ்டெதஸ்கோப், குளுக்கோஸ், ஊசி, மருந்துகள் எதுவும் இல்லாததால, மணி மீது போலீசார் வழக்கு போடாம, 'இனிமே சிகிச்சை அளிக்க மாட்டேன்'னு எழுதி வாங்கிண்டு அனுப்பிட்டா ஓய்...” என்றார் குப்பண்ணா.
“பல கோடி ரூபாய் போச்சேன்னு புலம்புதாரு வே...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
“சட்டசபை தேர்தல்ல, கடலோர தென் மாவட்டத்துல அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் ஒருத்தர் போட்டியிட்டாரு... அந்த தொகுதியை, வேற ஒருத்தருக்கு தலைமை குடுக்க இருந்துச்சு வே...
“ஆனா, கட்சியில் இருக்கிற தன் நண்பர் அறிவுரைப்படி, 'எனக்கு வாய்ப்பு தந்தா நல்லா செலவு பண்ணுவேன்'னு தலைமையிடம் போராடி 'மாஜி' சீட்டை வாங்கினாரு... அதே நண்பர், 'ஓட்டுக்கு 1,000 ரூபாய் தந்தா ஈசியா ஜெயிச்சிடலாம்'னும் அறிவுரை தந்திருக்காரு வே...
“அதை கேட்டு, மாஜியும் நிலத்தை வித்து பணத்தை வாரியிறைச்சாரு... ஆனா ஓட்டு எண்ணிக்கையில் அவருக்கு, 'டிபாசிட்'டே பறிபோயிட்டு வே...
“இதனால, 'சீட் கிடைக்காதுன்னு தெரிஞ்சு ஒதுங் கியிருந்தேன்... நண்பர் பேச்சை கேட்டு பல கோடிகள் போச்சே'ன்னு தினமும் அழாத குறையா புலம்பிட்டு இருக்காரு வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி.
“வாங்க செல்லபாண்டியன்... உங்களை பார்த்ததும் சின்னதுரை நழுவிட்டாரு...” என்ற அன்வர்பாயே, “இடமாறுதல்ல புகுந்து விளையாடுறாங்க பா...” என்றபடியே தொடர்ந்தார்...
“பத்திரப்பதிவு துறையில் அமைச்சர், செயலர், ஐ.ஜி., எல்லாம் லஞ்சம் வாங்காம செயல்படுறாங்க... ஆனா, ஐ.ஜி.,யின் உதவியாளர் ஒருத்தரும், ஏ.ஐ.ஜி., ஒருத்தரும் சேர்ந்து இடமாறுதல்ல ஏகத்துக்கும், 'கட்டிங்' வசூலிக்கிறாங்க பா...
“சமீபத்தில் நடந்த சார் - பதிவாளர்கள் இடமாறுதலுக்கு, 90 சதவீதம் பேர் லஞ்சம் குடுக்கல... ஆனா, இந்த ரெண்டு பேரும் மாநிலம் முழுக்க சிலரிடம் லஞ்சம் வாங்கிட்டு, இடமாறுதல் பட்டியல்ல அவங்க பெயர்களை சேர்த்துட்டாங்க பா...” என முடித்தார் அன்வர்பாய்.
“அருள்சாமி, கண்ணன் இங்கன உட்காருங்க வே...” என்றபடியே பெரியசாமி அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
