/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
பூங்கா பணிகளுக்கு கோடிக்கணக்கில் கைமாறும் கமிஷன்!
/
பூங்கா பணிகளுக்கு கோடிக்கணக்கில் கைமாறும் கமிஷன்!
பூங்கா பணிகளுக்கு கோடிக்கணக்கில் கைமாறும் கமிஷன்!
பூங்கா பணிகளுக்கு கோடிக்கணக்கில் கைமாறும் கமிஷன்!
PUBLISHED ON : பிப் 27, 2026 04:11 AM

பெ ஞ்சில் அமர்ந்ததுமே, ''தொகுதியை கூட்டணி கட்சிக்கு தள்ளிவிட பார்க்கறா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''திருப்பூர் மாவட்டம், பல்லடம் சட்டசபை தொகுதி, இப்ப அ.தி.மு.க., வசம் இருக்கு... இந்த தொகுதி தி.மு.க.,வினர், கட்சியை பலப்படுத்தி, வர்ற தேர்தல்ல ஜெயிக்கற சூழலை உருவாக்கி வச்சிருக்கா ஓய்...
''இங்க போட்டியிட, திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் பத்மநாதன் தயாரா இருக்கார்... ஆனா, அவருக்கும் தி.மு.க., மண்டல பொறுப்பாளரான அமைச்சர் சக்கரபாணிக்கும் சரிப்பட்டு வரல ஓய்...
''இதனால, 'பல்லடத்தை கூட்டணி கட்சிக்கு தள்ளிவிடலாம்'னு, தலைமையிடம் சக்கரபாணி சொல்லிட்டார்... இதுக்கு இடையில், முதல்வரின் மருமகன் சபரீசன் நடத்தும், 'பென்' நிறுவனத்தின் தலைமை அதிகாரியும், சக்கரபாணிக்கு ஆதரவா, 'பல்லடத்தில் தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்பு குறைவு... அதனால, கூட்டணி கட்சிக்கு ஒதுக்கிடலாம்'னு மேலிடத்துக்கு, 'ரிப்போர்ட்' குடுத்திருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''மணிகண்டன் உட்கார இடம் குடுங்க வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சி, ''வாரம், 1.50 லட்சம் ரூபாய், 'ஆட்டை'ய போட்டிருக்காவ வே...'' என்றார்.
''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.
''திருவள்ளூர் மாவட்டத்துல ஒரு ஊராட்சியில், 2021 - 23ம் ஆண்டு வரை ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்திருக்குன்னு, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் போயிருக்கு... அப்ப, பணியில் இருந்த ஊராட்சி செயலர்கள், ஒன்றிய அதிகாரிகள், கான்ட்ராக்டர்கள்னு பலரிடமும் போலீசார் விசாரணை நடத்தியிருக்காவ வே...
''இதுல, எந்த வேலையும் செய்யாம, பல லட்சம் ரூபாயை எடுத்தது தெரிஞ்சிட்டு... அதுலயும், பிளீச்சிங் பவுடர் வாங்கியதா மட்டும், வாரத்துக்கு, 1.50 லட்சம் ரூபாய் பில் போட்டு பணத்தை எடுத்திருக்காவ வே...
''இது சம்பந்தமா, சீக்கிரமே நடவடிக்கை எடுக்க போறாவ... இதனால, முறைகேட்டில் ஈடுபட்டவங்க கலக்கத்துல இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
ஒலித்த மொபைல் போனை எடுத்த குப்பண்ணா, ''ஹலோ ஹரிபாபுவா... வயலுார்ல சங்கர், விஜயன், வினோத், பெருமாள், பச்சையப்பன், விஜய குமார், குமாருக்கு எல்லாம் பத்திரிகை குடுத்துட்டீரா ஓய்...'' என, தள்ளி சென்று பேச ஆரம்பித்தார்.
''கோடிக்கணக்குல பணிகளை ஒதுக்குறாங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''தமிழக வேளாண் துறையின் கீழ் தோட்டக்கலை துறை செயல்படுது... இந்த துறை சார்பில், சென்னை கதீட்ரல் சாலையில், 6 ஏக்கர்ல கருணாநிதி நுாற்றாண்டு பூங்கா அமைக்க, 90 கோடி ரூபாய் செலவு செஞ்சிருக்காங்க...
''ஆனா, திட்ட அறிக்கையில குறிப்பிட்டிருந்தபடி எந்த பணிகளும் அங்க நடக்கல... இந்த பூங்காவை அமைச்ச நிறுவனத்துக்கு, கடலுார்ல 18 கோடி ரூபாய், வடலுார்ல, 15 கோடி ரூபாய்க்கான பூங்கா பணிகள், சென்னை கிண்டியில், 32 கோடி ரூபாயில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கிற பணிகளையும் குடுத்திருக்காங்க...
''அதாவது, பூங்காவுக்கான எந்த உபகரணங்களையும் சரியா அமைக்காம, வெறும் பில்களை மட்டும் கொடுத்து பணம் வாங்குற நிறுவனங்களுக்கு தான் பணிகளை ஒதுக்குறாங்க... துறை முக்கிய புள்ளியின் மூத்த உதவியாளர் தான், கமிஷன் விவகாரங்களை எல்லாம் கவனிக்கிறாருங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
''பாலமுருகன், நாளைக்கு பார்க்கலாம் பா...'' என, நண்பரிடம் அன்வர்பாய் விடைபெற, மற்றவர்களும் கிளம்பினர்.

