PUBLISHED ON : ஜூன் 16, 2026 12:00 AM

பெஞ்சில் அமர்ந்ததுமே, “யாரை பிடிக்கிறதுன்னு தெரியாம தவிக்கிறாங்க...” என, அரட்டையை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
“யாரை சொல்றீர் ஓய்...” என கேட்டார் குப்பண்ணா.
“தமிழக வெற்றிக் கழகம், சந்திச்ச முதல் தேர்தல்லயே ஆட்சியை பிடிச்சிருக்கே... 'த.வெ.க.,வுக்கு அரசியல் ஆலோசகரா இருக்கும் ஜான் ஆரோக்கியசாமி தான் இதுக்கு காரணம்'னு அந்த கட்சியினர் பெருமை அடிச்சுக்கிறாங்க...
“அதோட, அரசின் முக்கிய முடிவுகள் மற்றும் அதிகாரிகள் இடமாறுதல்ல அவரது ஆதிக்கம் இருக்குன்னும், த.வெ.க., வட்டாரங்கள்ல தகவல்கள் பரவுச்சு... இதனால, சில ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், தங்களுக்கு நல்ல பணியிடங்கள் கேட்டு, அவரை போய் பார்த்திருக்காங்க...
“அதேபோல, அ.தி.மு.க.,வுல இருந்து த.வெ.க.,வுக்கு வந்திருக்கிற, 'மாஜி' அமைச்சர்கள் சிலரும், டில்லி சிறப்பு பிரதிநிதி பதவிக்கு தங்களை சிபாரிசு பண்ணும்படி, ஜான் ஆரோக்கியசாமியிடம் கேட்டிருக்காங்க...
“அவரோ, 'அரசு நிர்வாகத்தில் நான் தலையிடுறது இல்ல... முதல்வர் விஜய் சொல்றதை மட்டும் தான் செய்வேன்... எந்த சிபாரிசுக்கும் என்னை தேடி வராதீங்க'ன்னு தீர்மானமா சொல்லிட்டாராம்... இதனால, த.வெ.க.,வில் யாரை பிடிச்சா காரியம் நடக்கும்னு தெரியாம பலரும் திண்டாடுறாங்க...” என்றார் அந்தோணிசாமி.
“அதிகாரிகளை மாத்தியும் பிரயோஜனம் இல்ல வே...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், திருச்செந்துார் முருகன் கோவில்ல அதிரடி ஆய்வு நடத்தி, முறைகேடுகளை கண்டுபிடிச்சாருல்லா... இது சம்பந்தமா, கோவில் இணை கமிஷனர் ராமு, உதவி கமிஷனர் மெய்வேல் ஆகியோரை வேற ஊர்களுக்கு துாக்கியடிச்சுட்டாரு வே...
“நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி. எஸ்., அதிகாரிகள் தவிர, வேற யாரையும் வி.ஐ.பி., தரிசனத்துக்கு அனுமதிக்கக் கூடாதுன்னு அமைச்சர் ரமேஷ் உத்தரவு போட்டிருக்காரு... ஆனா, இப்பவும் சில அதிகாரிகள், பக்தர்களை சண்முகவிலாசம் மண்டபம் வழியா வி.ஐ.பி., தரிசனத்துக்கு கூட்டிட்டு போறாவ வே...
“இதை, சில பக்தர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்கள்ல போட்டும் விதிமீறல்கள் குறையல... புதுசா வந்திருக்கிற அதிகாரிகளும், பழைய அதிகாரிகளுடன் சேர்ந்து, பாதுகாப்பு ஊழியர்கள் மூலம் பிரசாதம் விற்பனை செய்யுதாவ வே...” என்றார் அண்ணாச்சி.
“போலீசாரையே மிரட்டுறாங்க பா...” என்றார் அன்வர்பாய்.
“யாருங்க அது...” என கேட்டார் அந்தோணிசாமி.
“சிவகங்கை மாவட்டம், பூவந்தியை சுத்தி, 50க்கும் மேற்பட்ட, 'கிரானைட் பாலீஷ்' நிறுவனங்கள் செயல்படுது... தென் மாவட்டங்கள்ல இருந்து தினமும் ராத்திரி, 100க்கும் மேற்பட்ட லாரிகள்ல கிரானைட் கற்களை பாலீஷ் போட கொண்டு வர்றாங்க பா...
“மாவட்ட எல்லையில், இந்த லாரிகளை போலீசார் நிறுத்தி ஆவணங்களை கேட்டா, அவங்களை மிரட்டுற மாதிரி டிரைவர்கள் பேசுறாங்க... 'பல மாவட்டங்களை கடந்து வர்றோம்... எந்த போலீசாரும் எதுவும் கேட்கல... நீங்க மட்டும் தொல்லை பண்றீங்களே'ன்னு சொல்றாங்க பா...
“இன்னும் சில டிரைவர்கள், லாரிகளை போலீசார் மேல மோதுறது மாதிரி பயம் காட்டுறாங்க... 'தென் மாவட்டங்கள்ல இருக்கிற கனிமவள குவாரிகளை ஆளுங்கட்சியினர் கைப்பற்றிட்டாங்க... அதான், டிரைவர்கள் எங்களை மிரட்டுறாங்க'ன்னு சிவகங்கை போலீசார் புலம்புறாங்க பா...” என முடித்தார் அன்வர்பாய்.
அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.
