PUBLISHED ON : பிப் 11, 2026 01:42 AM

'அரசியலில் பெரிய மனிதர்களாக இருப்பவர்கள், இப்படியெல்லாமா நடந்து கொள்வர்...' என ஆச்சரியப்படுகின்றனர், பீஹார் மாநில மக்கள்.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப், அந்த கட்சியில் இருந்து கடந்தாண்டு நீக்கப்பட்டார்.
இதையடுத்து, ஜனசக்தி ஜனதா தளம் என்ற புதிய கட்சியை துவக்கிய அவர், கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, தோல்வி அடைந்தார். இதனால், பீஹார் மாநிலம், பாட்னாவில் அவர் வசித்து வந்த அரசு பங்களாவை காலி செய்யும்படி, மாநில அரசு உத்தரவிட்டது.
இங்கு, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தேஜ் பிரதாப் வசித்து வந்தார். அரசு உத்தரவிட்டதால், வேறு வழியின்றி அந்த பங்களாவை காலி செய்தார்.
அந்த பங்களா, ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த, அமைச்சர் குமார் ரவுசனுக்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அந்த வீட்டில் குடியேறிய ரவுசன், அங்கிருந்த மின் விளக்குகள், மின் விசிறிகள், நாற்காலிகள் ஆகியவற்றை தேஜ் பிரதாப் எடுத்துச் சென்று விட்டதாக குற்றம் சாட்டினார்.
தேஜ் பிரதாப்போ, 'எனக்கு சொந்தமான பொருட்களை மட்டும் தான் எடுத்துச் சென்றேன். என் பெயரை கெடுப்பதற்காக அபாண்டமாக பழி சுமத்துகின்றனர்...' என்றார்.
பீஹார் மக்களோ, 'அரசியல் இவ்வளவு தரம் தாழ்ந்து போய்விட்டதே...' என, கவலைப்படுகின்றனர்.

