/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
'சஸ்பெண்ட்' ரத்தாகியும் பணி கிடைக்காத அதிகாரிகள்!
/
'சஸ்பெண்ட்' ரத்தாகியும் பணி கிடைக்காத அதிகாரிகள்!
'சஸ்பெண்ட்' ரத்தாகியும் பணி கிடைக்காத அதிகாரிகள்!
'சஸ்பெண்ட்' ரத்தாகியும் பணி கிடைக்காத அதிகாரிகள்!
PUBLISHED ON : பிப் 14, 2026 01:36 AM

ட பராவில் பில்டர் காபியை ஆற்றியபடியே, ''பா.ஜ.,வினர் மீது அதிருப்தியில இருக்கா ஓய்...'' என, அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''யாருப்பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''பா.ஜ., அனுதாபியான, விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன், பா.ஜ., தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய விவசாயிகள் சம்பந்தமான கோரிக்கைகளை தயார் செஞ்சுருக்கார்... இதை வழங்க, திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சீனிவாசனை மொபைல் போன்ல பலமுறை கூப்பிட்டும், அவர் எடுக்கவே இல்லை ஓய்...
''அந்த கட்சியில், இன்னும் சில நிர்வாகிகளை தொடர்பு கொண்டும், அவாளும் கண்டுக்கல... வெறுத்து போனவர், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணியை பார்த்திருக்கார் ஓய்...
''அவர், தன் கார்லயே ஈஸ்வரனை பழனிசாமிகிட்ட அழைச்சுண்டு போயிருக்கார்... பழனிசாமியும், ஈஸ்வரனிடம் கோரிக்கை மனுவை வாங்கிண்டு, சாதகமா பேசி அனுப்பியிருக்கார்... இதனால, 'பா.ஜ.,வினர் இப்படி இருந்தா, தமிழகத்துல தாமரை மலர்ந்த மாதிரிதான்'னு விவசாயிகள் புலம்பறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''அமைச்சருக்கு போட்டியா, ஜல்லிக் கட்டுக்கு ஏற்பாடு பண்ணுதாவ வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''திருச்சியை சேர்ந்த அமைச்சர்கள் நேரு - மகேஷ் பனிப்போர் ஊரறிஞ்ச ரகசியமாச்சே... மகேஷ், தன் தொகுதியான திருவெறும்பூர், சூரியூரில் ஜல்லிக்கட்டு மைதானம் தயார் பண்ணி, அதை உதயநிதியை வச்சு திறந்து வச்சிருக்காரு வே...
''இதுக்கு போட்டியா, நேருவின் ஆதரவாளரான, கே.கே.நகர் பகுதி தி.மு.க., செயலர் காஜாமலை விஜய், அண்ணா ஸ்டேடியத்துல வர்ற 22ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு பண்ணுதாரு... ஆனா, மாநகர பகுதியா இருக்கிறதால, மாவட்ட நிர்வாகம் இதுவரை அனுமதி தரல வே...
''ஆனாலும், நேரு ஆசியுடன் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு நடக்கு... ஆனா, 'விளையாட்டு வீரர்கள் பயிற்சி எடுக்கிற ஸ்டேடியத்துல ஜல்லிக்கட்டு நடத்தக் கூடாது'ன்னு சமூக ஆர்வலர்களும், விளையாட்டு வீரர்களும் எதிர்ப்பு தெரிவிச்சிட்டு இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''அதிகாரிகள் பழி வாங்குறதா புலம்புறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''எந்த துறையில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''திருவள்ளூர் மாவட்டத்துல, காதல் ஜோடியை பிரிக்கும் விவகாரத்தில், சிறுவனை கடத்த, தன் அரசு காரை கொடுத்து உதவியதா, ஏ.டி.ஜி.பி., ஜெயராமை போன வருஷம் ஜூன்ல, 'சஸ்பெண்ட்' செஞ்சாங்கல்ல... வழக்கு விசாரணையில, அந்த சிறுவன் தன்னை யாரும் கடத்தலன்னு சொல்லிட்டதால, ஜெயராம் மீதான சஸ்பெண்ட் உத்தரவும் ரத்தாகிடுச்சுங்க...
''அதேபோல, மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி.,யா இருந்த சுந்தரேசன், உயர் அதிகாரிகள் மீது குற்றம்சாட்டி பேட்டி குடுத்தாரு... இதுக்காக, அவரையும் சஸ்பெண்ட் செஞ்சாங்க... இதை எதிர்த்து, ஐகோர்ட்ல சுந்தரேசன் வழக்கு போட்டதுல, அவர் மீதான சஸ்பெண்டும் ரத்தாகிடுச்சுங்க...
''ஆனாலும், உயர் அதிகாரிகள், இந்த ரெண்டு பேருக்கும் மீண்டும் பணி ஒதுக்காம பழிவாங்குறாங்களாம்... சீக்கிரமே சட்டசபை தேர்தல் தேதியை அறிவிச்சிட்டா, இவங்களுக்கு பணியிடங்கள் ஒதுக்க முடியாது...
''வர்ற மே மாசம் ஜெயராம் ஓய்வு பெற இருக்கிறதால, 'மீண்டும் பணியில் சேராமலே, வீட்டுக்கு போகணுமோ'ன்னு விரக்தியில இருக்காருங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

