/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
தாலுகா அலுவலகத்தை ஆட்டி படைக்கும் பெண் ஊழியர்!
/
தாலுகா அலுவலகத்தை ஆட்டி படைக்கும் பெண் ஊழியர்!
PUBLISHED ON : பிப் 15, 2026 05:10 AM

''எல்லாரையும் ஒருமையில பேசி மிரட்டுதாருல்லா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''யாரை சொல்றீர் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''திருச்சி மேற்கு தாலுகா அலுவலகத்துல ஒரு அதிகாரி இருக்காரு... 'கட்டிங்' வசூல்ல புகுந்து விளையாடுதாரு... இதுல கிடைக்கிற பணத்தை, ரியல் எஸ்டேட், வட்டி தொழில்ல போட்டு, பல மடங்கா பெருக்குதாரு வே...
''தனக்கு கீழே வேலை செய்ற ஊழியர்களை, ஒருமையில திட்டுறதும் இல்லாம, சிலரை அடிச்சும் போடுதாரு... விண்ணப்பங்கள் குடுக்க வர்ற பெண்களிடம், 'டபுள் மீனிங்'ல பேசி, தர்மசங்கடப்படுத்துதாரு வே...
''இவரை பத்தி கலெக்டர் வரை புகார் போயும், எந்த நடவடிக்கையும் இல்ல... ஜாதி சங்க தலைவர் ஒருத்தர் பெயரை அடிக்கடி சொல்லி, 'அவர் இருக்கும் வரை என்னை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது'ன்னு தெனாவெட்டா பேசுதாரு வே...'' என்றார், அண்ணாச்சி.
''சற்குணன், இப்படி உட்காருங்க...'' என, நண்பருக்கு இடம் தந்த அந்தோணிசாமியே, ''அறையை காலி செய்யாம இருக்காருங்க...'' என்றார்.
''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.
''தமிழக சிறைத்துறை உயர் அதிகாரியா இருந்தவர், துறைக்கு சொந்தமான ஓய்வு விடுதியில் தங்கியிருந்தாரு... இவரது குடும்பம் டில்லியில் இருக்கிறதால, தனியாளான இவருக்கு, இந்த விடுதி வசதியா இருந்துச்சுங்க...
''இந்த விடுதியில், சிறைத்துறையை சேர்ந்த வெளியூர் அதிகாரிகள், சலுகை கட்டணத்துல தங்குவாங்க... ஆனா, அதிகாரி எந்த கட்டணமும் கட்டுறது இல்லைங்க...
''சமீபத்துல, அதிகாரியை சட்டம் - ஒழுங்கு பிரிவுக்கு மாத்தினாங்க... இந்த பதவிக்குன்னு தனியா அரசு பங்களா இருந்தும், அங்க போகாம, 'எனக்கு இது செட் ஆகிடுச்சு'ன்னு சொல்லி, சிறை விடுதியிலயே தங்கியிருக்காரு... இவருக்கு சிறைத்துறை போலீசாரும், சட்டம் - ஒழுங்கு போலீசாரும் சேர்ந்து சேவகம் செஞ்சிட்டு இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''மகேஷ்குமார், இந்த மேட்டரையும் கேட்டுட்டு கிளம்புங்க பா...'' என, நண்பரை நிறுத்திய அன்வர்பாயே தொடர்ந்தார்...
''கோவை தெற்கு தாசில்தார் அலுவலகத்தில், தற்காலிக பெண் ஊழியர் ஒருத்தர் இருக்காங்க... இவங்களை அரசு நியமிக்கல... தாலுகா அதிகாரி தான், தனக்கு கிடைக்கும், 'கட்டிங்' பணத்தில் சம்பளம் குடுத்து, இவங்களை நியமிச்சிருக்காரு பா...
''இந்தம்மா கண் அசைவு இல்லாம எந்த பைலும் நகராது... எல்லா விண்ணப்பங்களுக்கும், 'கட்டிங்' வசூலிக்கிறது, பட்டா கேட்டு வர்றவங்களிடம் பேரம் பேசி பணம் வசூலிக்கிறதுல கில்லாடி பா...
''தாலுகா அதிகாரியின் உதவியாளரை விட, இவங்களுக்கு தான் செல்வாக்கு அதிகம்... யாராவது இந்தம்மாவை எதிர்த்து கேள்வி கேட்டா, மறுநாளே அவங்களுக்கு ஏவல் வச்சிட்டேன்னு சொல்லி, எலுமிச்சை பழம், குங்குமத்தை எடுத்துட்டு வந்து, எல்லாரையும் பயமுறுத்துறாங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
ஒலித்த மொபைல் போனை எடுத்த அண்ணாச்சி, ''சொல்லும் சுகாத்... ஊர்ல, செல்வமணி மேடம் சவுக்கியமாவே...'' என பேசியபடியே நடக்க, மற்றவர்களும் கிளம்பினர்.

