/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
தி.மு.க., பொதுச்செயலர் பதவிக்கு 'சீனியர்'கள் போட்டி!
/
தி.மு.க., பொதுச்செயலர் பதவிக்கு 'சீனியர்'கள் போட்டி!
தி.மு.க., பொதுச்செயலர் பதவிக்கு 'சீனியர்'கள் போட்டி!
தி.மு.க., பொதுச்செயலர் பதவிக்கு 'சீனியர்'கள் போட்டி!
PUBLISHED ON : பிப் 16, 2026 03:12 AM

இ ஞ்சி டீயை பருகியபடியே, ''வெற்றி நிலவரம் பத்தி ஆய்வு பண்ணிட்டு போயிருக்காருங்க...'' என, பேச்சை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.
''சமீபத்துல, மதுரைக்கு வந்த முதல்வரின் மருமகன் சபரீசன், அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினாருங்க... அப்ப, 'லோக்சபா தேர்தலில், மதுரை தெற்கு சட்டசபை தொகுதியில், பா.ஜ.,வுக்கு அதிக ஓட்டுகள் எப்படி விழுந்துச்சு'ன்னு கேட்டதுக்கு, 'அது, மோடிக்காக விழுந்திருக்கும்... சட்டசபை தேர்தல்ல அப்படி நடக்காது'ன்னு நிர்வாகிகள் சொல்லியிருக்காங்க...
''அதே மாதிரி, 'மதுரை வடக்கு தொகுதியில், அ.தி.மு.க., மருத்துவ அணி இணை செயலர் டாக்டர் சரவணன் போட்டியிடுவார்... இப்பவே, தொகுதி மக்களுக்கு, 10 ரூபாய்க்கு மூணு இட்லியும், டீயும் குடுக்கிறார்... அவரது முக்குலத்தோர் சமுதாய ஓட்டுகளும் அங்க போயிட்டா, தி.மு.க., தேறுமா'ன்னு சபரீசன் கேட்டதுக்கு, 'அங்க, அரசு ஊழியர்கள் ஓட்டுகள் நிறைய இருக்கிறதால, நமக்கு பாதிப்பு வராது'ன்னு நிர்வாகிகள் சமாளிச்சிருக்காங்க...
''கடைசியா, 'மதுரை தி.மு.க.,வில் பல கோஷ்டிகள் இருக்கு... எல்லாத்தையும் ஓரங்கட்டி வச்சுட்டு, மாவட்டத்தில், 10 தொகுதிகளின் வெற்றிக்கும் கடுமையா உழைக்கணும்'னு அறிவுரை சொல்லிட்டு போயிருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''நியமனம் செல்லாதுன்னு சொல்லிட்டாரு வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''சென்னை பல்கலை.,யில், ஜாதி பாகுபாடு பார்க்கிறதா, தேசிய எஸ்.சி., - எஸ்.டி., ஆணையத்துக்கு நிறைய புகார்கள் போயிருக்கு... இது பத்தி விசாரிக்க, ஆணையத்தின் தலைவரே, சமீபத்தில் பல்கலைக்கு வந்துட்டாரு வே...
''அப்ப, 18 புகார்களை விசாரிச்சிருக்காரு... அதுல, 'சென்னை பல்கலை பதிவாளர் நியமனம் தொடர்பா அமைக்கப்பட்ட குழுவில், எஸ்.சி., - எஸ்.டி., பிரதிநிதிகள் இல்லை' என்ற குற்றச்சாட்டு குறித்தும் விசாரிச்சிருக்காரு வே...
''கடைசியா, 'உரிய பிரதிநிதித்துவம் இல்லாத குழுவால் நியமிக்கப்பட்ட பதிவாளரின் நியமனம் செல்லாது'ன்னு ஆணைய தலைவர் சொல்லிட்டாராம்... 'இது சம்பந்தமா, சீக்கிரமே, டில்லியில் இருந்து முறைப்படி அறிவிப்பு வரும்'னு பல்கலை வட்டாரங்கள்ல பேசிக்கிடுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''கடும் போட்டி நடக்கறது ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''எதுக்கு பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகனுக்கு, 87 வயசாறது... முதுமையால அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில், 'அட்மிட்' ஆகிறார் ஓய்...
''இப்பவும் துரைமுருகனுக்கு, ஒரு ஆப்பரேஷன் செய்ய வேண்டியிருக்காம்... ஆனாலும், முதுமை காரணமா ஆப்பரேஷன் இல்லாம, மருந்து, மாத்திரைகள்ல குணப்படுத்த டாக்டர்கள் முயற்சி பண்றா ஓய்...
''அதோட, 'அவர் முழு ஓய்வுல இருக்கணும்'னும் டாக்டர்கள் சொல்லிட்டா... தி.மு.க., வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் விண்ணப்பத்தில், பொதுச்செயலர் தான் கையெழுத்து போடணும் ஓய்...
''இதுக்காக, துரைமுருகனை தொந்தரவு பண்ண வேண்டாம்னு, தற்காலிக பொதுச் செயலரை நியமிக்க, கட்சி மேலிடம் முடிவு பண்ணியிருக்காம்... இந்த பதவியை பிடிக்க, 'சீனியர்'கள் பலரும் முட்டி மோதிண்டு இருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
அரட்டை முடிய, அனைவரும் கிளம்பினர்.

