பணி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டும் போலீஸ் அதிகாரி!
பணி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டும் போலீஸ் அதிகாரி!
PUBLISHED ON : மே 27, 2026 12:00 AM

ப ட்டர் பிஸ்கட்டை கடித்தபடியே, “பசையான இடத்துக்கு குறி வச்சிருக்காரு வே...” என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
“யாரை சொல்றீங்க...” என கேட்டார், அந்தோணிசாமி.
“விருதுநகர் மாவட்டத்தில், 28 நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் இருக்கு... இதுல, 4,000க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உறுப்பினர்களா இருக்காவ வே...
“பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை, பொங்கல் பண்டிகைக்கு இலவச வேஷ்டி, சேலை தயாரிப்பு பணிகள்னு வருஷம் முழுக்க இந்த சங்கங்கள்ல உற்பத்தி நடக்கும்... இதனால, 'பசை' யான விருதுநகர் கைத்தறி உதவி இயக்குநர் பதவிக்கு வர பலரும் முட்டி மோதுவாவ வே...
“தி.மு.க., ஆட்சியின் கடைசி நேரத்தில், மதுரையில இருந்த ஒரு அதிகாரி விருதுநகருக்கு வர முயற்சி எடுத்தாரு... ஆனா, அந்த அதிகாரி, பரமக்குடியில் பணியில் இருந்தப்ப பல முறைகேடுகள்ல ஈடுபட்டவர் என்பதால, அவரை தன் மாவட்டத்துக்கு வர விடாம, அப்ப அமைச்சரா இருந்த சாத்துார் ராமச்சந்திரன் தடுத்துட்டாரு... இப்ப, ஆட்சி மாறிட்ட சூழல்ல, விருதுநகர் பதவியை பிடிக்க மதுரை அதிகாரி மறுபடியும் காய் நகர்த்திட்டு இருக்காரு வே...” என்றார், அண்ணாச்சி.
“சேரன், தள்ளி உட்காருங்க...” என்ற அன்வர்பாயே, “ஆட்சி மாறியும், காட்சி மாறல பா...” என்றபடியே தொடர்ந்தார்...
“திருப்பூர் மாவட்டம், உடுமலையில் மரபுசாரா எரிசக்தி துறையின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் இருக்குது... காற்றாலைகள், சூரியமின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க, இங்கதான் அனுமதி வாங்கணும் பா...
“கடந்த தி.மு.க., ஆட்சியில் செல்வாக்கா இருந்த, கரூரை சேர்ந்த முன்னாள் அமைச்சர், வசூலுக்காகவே தனக்கு வேண்டிய அதிகாரி ஒருத்தரை நியமிச்சிருந்தாரு... அப்ப, ஒரு மெகாவாட் மின் திட்டத்துக்கு, 10 லட்சம் ரூபாய் வரை கப்பம் வசூலிச்சாங்க பா...
“ஆட்சி மாறிட்ட சூழல்ல, அதே பழைய வசூல் நடைமுறை இன்னும் தொடருது... பணம் குடுக்காம நிறைய பைல்கள் இந்த அலுவலகத்துல தேங்கி கிடக்குது... புதிய மின்துறை அமைச்சர், இதுல கொஞ்சம் கவனம் செலுத்தணும் பா...” என்றார், அன்வர்பாய்.
“பிரசாத், ராதாகிருஷ்ணன் வரா... இடம் குடுங்கோ...” என்ற குப்பண்ணாவே, “அரசியல் சாயம் பூசறார் ஓய்...” என்றார்.
''என்ன விவகாரம் பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''தமிழகத்தில், வி.வி.ஐ.பி.,க்களுக்கு பாதுகாப்பு வழங்கும் போலீஸ் பிரிவுல ஒரு அதிகாரி இருக்கார்... தி.மு.க., முன்னாள் அமைச்சர்களுக்கு பாதுகாப்பு அதிகாரிகளா பணியாற்றிய போலீசாரை, புதிய அமைச்சர்களின் பாதுகாப்புக்கு நியமிக்கறதுல இவர் பாரபட்சம் காட்டறார் ஓய்...
“அதாவது, 'அவா எல்லாம் கடந்த அ.தி.மு.க., - தி.மு.க., ஆட்சியில் பாதுகாப்பு பணியில இருந்ததால, அந்த கட்சிக்கு விசுவாசிகளாவே மாறிட்டா'ன்னு காரணம் சொல்றார்... அதே நேரம், தனக்கு வேண்டியவாளை மட்டும் புதிய அமைச்சர்களுக்கு பாதுகாப்பு அதிகாரிகளா நியமிச்சிருக்கார் ஓய்...
“இத்தனைக்கும் இந்த அதிகாரி, கடந்த ஆட்சியில் முதல்வரா இருந்த ஸ்டாலின் வெளிநாடு போனப்ப, அவர் கூடவே போயிட்டு வந்தவர் தான்... 'சீக்கிரமே, 'ரிட்டயர்' ஆக போற இவர், பணி நீட்டிப்பு வாங்கறதுக்காக த.வெ.க., விசுவாசியா தன்னை காட்டிக்கறார்'னு அந்த பிரிவுல இருக்கற போலீசார் பலரும் புலம்பறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
“பொன் துரைபாண்டியன் இங்கன உட்காரும்...” என்றபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
