PUBLISHED ON : டிச 21, 2025 05:58 AM

சாணார்பட்டி: -சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக மக்களின் நலன் வேண்டி மார்கழி அமாவாசையை முன்னிட்டு மகா பிரத்யங்கரா தேவி யாக பூஜையை சபையின் நிர்வாகி டாக்டர் திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் நடத்தி வைத்தார்.
இதையொட்டி பிரத்தியங்கிரா தேவி அம்மன், நரசிங்க பெருமாள் பூக்களால் அலங்கரிக்க யாககுண்டத்தில் மிளகாய் மூடை மூடையாக கொட்ட வேத மந்திரங்களுடன் யாக வேள்வி பூஜை நடத்தப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வெளிநாட்டு பக்தர்கள் இணையதளம் வழியாக பூஜையில் பங்கேற்றனர். பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை பனை ஓலையில் எழுதி அக்னி குண்டத்தில் போட்டு வேண்டிக்கொண்டனர். நாட்டு மாடுகளுக்கு அகத்திக்கீரை அளிக்க அமாவாசை கோபூஜையும் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
செம்பட்டி: அக்கரைப்பட்டி சடையாண்டி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மலை குகைக்கோயில், அடிவார கோயில்களில் மூலவருக்கு திரவிய அபிஷேகம், மலர் அலங்காரத்துடன் மகாதீபாராதனை நடந்தது.
சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில், கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், தோணிமலை முருகன் கோயிலில் அமாவாசை சிறப்பு அபிஷேகம் நடந்தது.

