PUBLISHED ON : செப் 14, 2026 12:15 AM

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்ட நண்பர்களுக்கு, கொழுக்கட்டைகளை வழங்கினார் குப்பண்ணா.
அதை சாப்பிட்டபடியே, “தி.மு.க., தலைமை அலுவலகத்துல நடந்த கூத்தை கேளுங்க...” என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
“தி.மு.க., தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தின் மாடியில, கலைஞர், 'டிவி' அலுவலகம் இருக்கு... இங்க வேலை பார்த்த சிலர், தேர்தல் முடிவுக்கு பிறகு வேற சேனலுக்கு போயிட்டாங்க...
“அதாவது பரவாயில்ல... இந்த அலுவலக, 'லிப்ட்' கதவுல யாரோ ஒருத்தர், 'பைக்' சாவியால, தமிழக வெற்றிக் கழகம் என்பதை குறிக்கிற மாதிரி, டி.வி.கே.,ன்னு எழுதி சுரண்டி வச்சுட்டாரு... இதை பார்த்து அறிவாலய நிர்வாகிகள், 'டென்ஷன்' ஆகி, அதை அழிக்கச் சொல்லிட்டாங்க...
“இந்த டிவிக்கு தலைமை அதிகாரியா இருந்த முதன்மை குடும்பத்தின் உறவினர், இப்ப துபாய்ல, 'செட்டில்' ஆகிட்டாராம்... இதனால, டிவி நிர்வாகத்தை உதயநிதியின் மகன் இன்பநிதி தான் கவனிக்கிறாருங்க...
“தினமும் காலை 10:30 மணிக்கு வந்துட்டு, மதியம் 1:30 மணிக்கு வீட்டுக்கு போறாரு... 'தேர்தல்ல தோற்று போயிட்டதால, இந்த வருஷம் தீபாவளி போனஸ் கிடைக்குமா'ன்னு, அதன் ஊழியர்கள் ஏக்கத்துல காத்திருக்காங்க...” என்றார் அந்தோணிசாமி.
“யாரையும் நீடிக்க விட மாட்டேங்கிறாங்க பா...” என்றார் அன்வர்பாய்.
“எந்த துறையில ஓய்...” என கேட்டார் குப்பண்ணா.
“பொதுவா, கலெக்டரை மூணு வருஷமாவது ஒரு மாவட்டத்துல நீடிக்க விட்டா தான், வளர்ச்சி பணிகளை சரியா செய்ய முடியும்... ஆனா, பெரம்பலுார்ல கடந்த ஒரு வருஷத்துல, மூணு கலெக்டர்களை மாத்திட்டாங்க பா...
“கடைசியா, மூணு மாசத்துக்கு முன்னாடி வந்த சரண்யா ஹரியையும் இப்ப மாத்திட்டாங்க... இவங்களை மக்கள் சுலபமா பார்த்து, தங்களது குறைகளை சொல்ல முடிஞ்சது பா...
“தன் மகனை அங்கன்வாடியில் சேர்த்து படிக்க வச்சாங்க... 'திங்கள் கிழமை குறைதீர் முகாம்ல குடுத்த மனுக்களுக்கு, வெள்ளி கிழமைக்குள்ள தீர்வு வழங்கணும்'னு அதிகாரிகளை விரட்டி வேலை வாங்கினாங்க பா...
“நீர்நிலைகளை புனரமைக்கும் நடவடிக்கைகளை எடுத்தாங்க... 'இந்த திட்டங்கள் எல்லாம் தொடருமா, இல்லையா'ன்னு, பெரம்பலுார் மக்கள் புலம்புறாங்க பா...” என்றார் அன்வர்பாய்.
“ரெண்டே மாசத்துல மூணு, 'டிரான்ஸ்பர்' வாங்கிட்டாரு வே...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
“திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் கோட்டத்துல வருவாய் துறை அதிகாரியா இருந்தவர், தி.மு.க., ஆட்சியில மணல் கொள்ளை மாமூல்ல, ஏகத்துக்கும் கொழிச்சாரு... த.வெ.க., ஆட்சிக்கு வந்ததும், இவரை சிவகங்கை, 'டாஸ்மாக்' அதிகாரியா மாத்தினாவ வே...
“அந்த இடம் பிடிக்காம, யார் யாரையோ பிடிச்சு, கொடுக்க வேண்டியதை குடுத்து, திருச்சி மாநகராட்சியின் ஸ்ரீரங்கம் மண்டலத்துல, உயர் அதிகாரி பதவியை வாங்கிட்டு வந்துட்டாரு... இப்ப, அதையும் விட்டுட்டு, பக்கத்துல இருக்கிற தஞ்சை கலெக்டர் அலுவலகத்துல முக்கிய பதவியை வாங்கிட்டு போயிட்டாரு வே...
“இதனால, 'ரெண்டே மாசத்துல மூணு இடங்களுக்கு இடமாறுதல் வாங்கியது இவரா தான் இருக்கும்... தி.மு.க., ஆட்சி மாதிரியே இந்த ஆட்சியிலும் செல்வாக்கா இருக்காரே'ன்னு, சக அதிகாரிகள் ஆச்சரியப்படுதாவ வே...” என முடித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
“சீனிவாசன், நாளைக்கு பார்க்கலாம் பா...” என்றபடியே அன்வர்பாய் எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
