/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
வனப்பகுதியில் குறுக்கிடும் ஊராட்சி சாலைகள் ஊரக வளர்ச்சி துறை விரைவில் அறிக்கை
/
வனப்பகுதியில் குறுக்கிடும் ஊராட்சி சாலைகள் ஊரக வளர்ச்சி துறை விரைவில் அறிக்கை
வனப்பகுதியில் குறுக்கிடும் ஊராட்சி சாலைகள் ஊரக வளர்ச்சி துறை விரைவில் அறிக்கை
வனப்பகுதியில் குறுக்கிடும் ஊராட்சி சாலைகள் ஊரக வளர்ச்சி துறை விரைவில் அறிக்கை
PUBLISHED ON : நவ 26, 2025 04:19 AM

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 31 ஊராட்சிகளில், வனப்பகுதிகளில் குறுக்கிடும் சாலைகளை சீரமைக்க அனுமதி பெறுவதற்கு, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வனத்துறை கூட்டாக சேர்ந்து ஆய்வு பணி நடத்தி வருகின்றன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சிறுபாக்கம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள, 31 ஊராட்சிகளில் வனப்பகுதிகள் உள்ளன.
இந்த வனப்பகுதிகளில், சுற்றுப்புறத்தில் உள்ள கிராமங்களை இணைக்கும் சாலைகள் செல்கின்றன.
பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த சாலைகள், தற்போது கடுமையாக சேதமடைந்துள்ளன.
குறிப்பாக 31 இடங்களில் சாலைகள் மிகவும் மோசமாக சேதமடைந்து, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன. சில இடங்களில் சாலை குறுகிய சாலையாக இருப்பதால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
அத்துடன் பேருந்து, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களும், சாலையிலுள்ள பள்ளங்களில் ஏறி இறங்கும் போது, பழுதாகி விடுகின்றன. இதனால், பல்வேறு பணிகளுக்காக செல்வோர், கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
போக்குவரத்து அவசியம் கருதி, இந்த சாலைகளை அகலப்படுத்தி மேம்படுத்த, ஊரக வளர்ச்சித்துறை நிர்வாகம் முடிவெடுக்கிறது.
ஆனால், இந்த சாலைகளை சீரமைக்க, வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இதனால், சாலை அமைக்க முடியாத சூழல் ஏற்படுகிறது.
எனவே, வனப்பகுதி குறுக்கிடும் பகுதிகளில் சாலை அமைக்க வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம், வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம், பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட அளவிலான அனைத்து துறைகள் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சமீபத்தில் நடந்தது.
இந்த கூட்டத்தில், வனத்துறை பகுதிகளில் குறுக்கிடும் சாலைகளை சீரமைக்க, வனத்துறை அனுமதி வழங்க வேண்டும் என, கலெக்டர் சினேகாவிடம், ஊரக வளர்ச்சித் துறையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்த பிரச்னைக்கு தீர்வு காண மாவட்ட வனத்துறை, ஊரக வளர்ச்சித் துறை இணைந்து செயல்பட வேண்டும் என, கலெக்டர் சினேகா உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, வனப்பகுதிகளில் சாலை குறுக்கிடும் பகுதிகளில், ஊரக வளர்ச்சித் துறை மற்றும் வனத் துறையினர் கூட்டாக சேர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் துவங்கி, ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பணிகள் முழுமையாக முடிந்த பிறகு, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வனத்துறை இணைந்து டிசம்பருக்குள் கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

