/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
வசூல் வி.ஏ.ஓ.,வை காப்பாற்றும் தாலுகா அதிகாரி!
/
வசூல் வி.ஏ.ஓ.,வை காப்பாற்றும் தாலுகா அதிகாரி!
PUBLISHED ON : மார் 16, 2026 02:09 AM

''பணி நீட்டிப்பை ரத்து செய்யணும்னு கேக்கறா ஓய்...'' என்ற படியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.
''யாருக்கு வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''சென்னையில் இருக்கும், தமிழக அரசின் பல் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் ஒருத்தர், போன வருஷமே, 'ரிட்டயர்' ஆகிட்டார்... ஆனா, அவருக்கு இப்ப, ஒப்பந்த அடிப்படையில், ஒரு வருஷம் பணி நீட்டிப்பு குடுத்திருக்கா ஓய்...
''இதேபோல, இதே மருத்துவ கல்லுாரியில் முக்கிய பதவியில் இருக்கற ஒருத்தர், அமைச்சர் ஒருவரது உதவியாளருக்கு நெருங்கிய உறவினராம்... உதவியாளர் மூலமா, இங்க ஏற்கனவே முக்கிய பதவியில் இருந்த பெண்மணியை, புதுக்கோட்டை அரசு பல் மருத்துவ கல்லுாரிக்கு மாத்திட்டு, சென்னை கல்லுாரியின் முக்கிய பதவியை பிடிச்சுட்டார் ஓய்...
''இதே அதிகாரி, மருத்துவ கல்வி இயக்குநர் அலுவலகத்திலும் முக்கிய பொறுப்புல இருக்கார்... வர்ற மே மாசம், 'ரிட்டயர்' ஆகப் போற இவரும், பணி நீட்டிப்பு வாங்க இப்பவே முயற்சிகளை துவங்கிட்டார் ஓய்... இதனால, 'முக்கிய பதவிகளுக்கு குடுத்த பணி நீட்டிப்பை ரத்து செய்யணும்'னு, அந்த பதவிகளுக்கு காத்துண்டு இருக்கற டாக்டர்கள் எல்லாரும் புலம்பறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''அஸ்வத் நாராயணன், பிரேம்குமார் உட்கார இடம் குடுங்க...'' என்ற அன்வர்பாயே, ''குடிசை பகுதிகளை மட்டும் கவனிக்கிறதா புகார் சொல்றாங்க பா...'' என்றபடியே தொடர்ந்தார்...
''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''சென்னை, வேளச்சேரி தொகுதியில் இந்த முறை, தான் ஜெயிச்சே ஆகணும்னு, அ.தி.மு.க., மாவட்ட புள்ளி தீவிரமா இருக்காரு... இதுக்காக, குடிசை பகுதிகள்ல இருக்கிற பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு, சமீபத்தில், கணிசமான தொகையை குடுத்து அசத்தியிருக்காரு பா...
''அதே நேரம், மற்ற பகுதிகள்ல இருக்கிற ஓட்டுச்சாவடி நிர்வாகிகளை மாவட்ட புள்ளி கண்டுக்கல... இதனால, 'குடிசை பகுதிகள் தவிர மற்ற பகுதி நிர்வாகிகளை கவனிக்க வேண்டாம்னு தலைமை ஏதாவது உத்தரவு போட்டிருக்கா... மற்ற பகுதி நிர்வாகிகளின் ஒத்துழைப்பு இல்லாம, மாவட்ட புள்ளி ஜெயிச்சிடுவாரா'ன்னு அவங்க அதிருப்தியில இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''அசோக், இந்த பேப்பரை அங்க வைங்க...'' என்ற அந்தோணிசாமியே, ''வசூல் நபரை பாதுகாக்கிறாருங்க...'' என்றபடியே தொடர்ந்தார்...
''துாத்துக்குடி மாவட்டத்தில், போன மாசம் வி.ஏ.ஓ.,க்கள் நிறைய பேரை இடமாறுதல் செஞ்சாங்க... எல்லாரும், புதிய இடங்களுக்கு போயிட்டாங்க...
''ஆனா, ஏரல் தாலுகாவில் ஒரு வி.ஏ.ஓ., மட்டும், இன்னும் பழைய இடத்துலயே இருக்காரு... அவரது கடுமையான வசூல் வேட்டையால பாதிக்கப்பட்ட கிராம மக்கள், தாலுகா அதிகாரியிடம் நேர்லயே புகார் குடுத்திருக்காங்க...
''ஆனாலும், வி.ஏ.ஓ., மீது அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்கல... ஏன்னா, தாலுகா அதிகாரிக்கு, வி.ஏ.ஓ., முறைப்படி பங்கு குடுத்துடுறாருங்க... இதனால, புதுசா வரப் போற வருவாய் துறையின் உயர் அதிகாரி, தனக்கு வேண்டியவர் என்பதால, அவரிடம் சொல்லி, வி.ஏ.ஓ.,வின் இடமாறுதல் உத்தரவை ரத்து பண்ணி தர்றதா, அவருக்கு தாலுகா அதிகாரி வாக்குறுதி தந்திருக்காருங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
''வாரும் சண்முகராஜ்... செல்வகுமார், உமக்கு ஒத்தாசையா இருக்காரோல்லியோ...'' என, நண்பரிடம் குப்பண்ணா கேட்க, மற்றவர்கள் கிளம்பினர்.

