/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அமைச்சர் கனவில் 'வாரியிறைக்கும்' மாவட்ட செயலர்!
/
அமைச்சர் கனவில் 'வாரியிறைக்கும்' மாவட்ட செயலர்!
PUBLISHED ON : பிப் 24, 2026 12:27 AM

ஏ லக்காய் டீயை உறிஞ்சியபடியே, ''மாநில தலைவர் பதவியை குறி வைக்கிறார்னு சொல்றாங்க பா...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''எந்த கட்சியில வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''விருதுநகர் காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர், தி.மு.க.,வுக்கு எதிரா தினமும் எதையாவது சொல்லி, மீடியாக்கள்ல பரபரப்பா இருக்காருல்ல... லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான ராகுலுடன் நெருக்கமா இருக்கிற இவர், தமிழக காங்., தலைவர் பதவியை பிடிக்க நினைக்கிறாரு பா...
''அதாவது, 'இதுக்கு முன்னாடி காங்., இடம்பெற்றிருந்த கூட்டணி தலைமையை விமர்சித்த வாழப்பாடி ராமமூர்த்தி, மூப்பனார், இளங்கோவன்னு நிறைய பேருக்கு தலைவர் பதவி கிடைச்சிருக்கு... அந்த மாதிரி தனக்கும் தருவாங்கன்னு நினைச்சு, மாணிக்கம் தாகூரும் தி.மு.க.,வை திட்டி தீர்த்துட்டு இருக்கார்'னு, தி.மு.க., ஆதரவு காங்., தலைவர்கள் சொல்றாங்க பா...
''இதுக்கு இடையில, 'மாநில காங்., தலைவர் பதவிக்கு, சிதம்பரம் மகன் கார்த்தியும், 'மூவ்' பண்றதால, ரெண்டு பேருக்கும் இடையில பனிப்போரே நடக்குது'ன்னும் சொல்றாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''தி.மு.க., உட்கட்சி பிரச்னையில், அதிகாரிகள் அவஸ்தையை கேளுங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''சென்னை சோழிங்கநல்லுார் தொகுதி தி.மு.க., புள்ளிக்கும், மாநகராட்சியின் 15வது மண்டல குழு பிரமுகருக்கும் ஏழாம் பொருத்தம்... இதுல, தொகுதி புள்ளி தயவுல, சோழிங்கநல்லுார் மண்டலத்தில் உயர் அதிகாரி ஒருத்தர் பணியில் இருந்தாருங்க.. .
''இவரை, சமீபத்துல அங்க இருந்து மாத்திட்டு, அண்ணாநகர்ல இருந்து வேற ஒரு அதிகாரியை இங்க நியமிச்சாங்க... மண்டல குழு பிரமுகர் தான், தன் ஆதரவு அதிகாரியை மாத்திட்டு, அவருக்கு வேண்டிய அதிகாரியை கொண்டு வந்துட்டதா, தொகுதி புள்ளி கடுப் பாயிட்டாருங்க...
''இதனால, அண்ணாநகர்ல இருந்து வந்த அதிகாரியை பொறுப்பேற்க விடாம, தொகுதி புள்ளி, தன் அதிகாரத்தை பயன்படுத்தி முட்டுக்கட்டை போட்டுட்டு இருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''அரவிந்த் ரமேஷ், மதியழகன் இப்படி உட்காருங்க... உங்க தலைகளை பார்த்ததும், தணிகைவேலனும், ராஜேஷும் ஓட்டம் பிடிச்சுட்டாவ வே...'' என அண்ணாச்சி கூற, அங்கு பலத்த சிரிப்பலை எழுந்தது.
''அமைச்சராக துடிக்கறார் ஓய்...'' என, கடைசி தகவலை ஆரம்பித்த குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''ராமநாதபுரம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., முத்துராமலிங்கம், மாவட்டச் செயலராகவும் இருக்கார்... மறுபடியும் போட்டியிட விரும்பும் இவர், பணத்தை தண்ணியா செலவழிக்கறார் ஓய்...
''சமீபத்தில் நடந்த தி.மு.க., தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டத்துக்கு வந்தவாளுக்கு, பிரியாணி விருந்து குடுத்து அசத்தினார்... தொகுதியில், 50 ஆயிரம் குடும்பங்களுக்கு அண்டா, பானை உள்ளிட்ட பாத்திரங்களை பரிசா குடுத்திருக்கார் ஓய்...
''இவரது தொகுதியில் இருக்கற பல ஆயிரம் முஸ்லிம்கள், வெளிநாடுகள்ல வேலை பார்க்கறா... இவா ஓட்டுகளை வாங்கறதுக்காக, அவாளை எல்லாம், ரம்ஜான் பண்டிகையை காரணம் காட்டி விடுமுறை எடுத்துண்டு ஊருக்கு வரவழைக்க, ஜமாத்தார்கள் மூலம் காய் நகர்த்திண்டு இருக்கார்... எப்படியாவது இந்த முறையும் ஜெயிச்சு, அமைச்சராகணும்னு கங்கணம் கட்டி களத்தில் இறங்கியிருக்கார் ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.
அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

