/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ரூ.4 கோடி அபராதம் கட்டாமல் தி.மு.க., பிரமுகர் 'டிமிக்கி!'
/
ரூ.4 கோடி அபராதம் கட்டாமல் தி.மு.க., பிரமுகர் 'டிமிக்கி!'
ரூ.4 கோடி அபராதம் கட்டாமல் தி.மு.க., பிரமுகர் 'டிமிக்கி!'
ரூ.4 கோடி அபராதம் கட்டாமல் தி.மு.க., பிரமுகர் 'டிமிக்கி!'
PUBLISHED ON : பிப் 25, 2026 03:22 AM

''கி ழக்கு கடற்கரை சாலை, கட்சி ஆபீஸ்களின் தாயகமா மாறிண்டு வரது ஓய்...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், குப்பண்ணா.
''விளக்கமா சொல்லுங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி அலுவலகம், கிழக்கு கடற்கரை சாலை, பனையூர்ல இருக்கோல்லியோ... அதேபோல, பா.ம.க., தலைவர் அன்புமணி வீடு, பனையூர் பக்கம் அக்கரை என்ற ஊர்ல இருக்கறதால, அவரது கட்சி அலுவலகமும் அங்க இயங்கறது ஓய்...
''தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலையும் பனையூர்ல தான் குடியிருக்கார்... அவரும், தன் வீட்டுலயே கட்சியின் கிளை அலுவலகத்தை வச்சிருக்கார் ஓய்...
''நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நீலாங்கரையில் வசிக்கறார்... இதனால, இவர் வீட்டுலயே கட்சி அலுவலகம் செயல் படறது ஓய்...
''ம.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, திராவிட வெற்றிக் கழகம்னு ஒரு கட்சியை துவங்கியிருக்காரே... இவரும், தன் கட்சி அலுவலகத்தை நீலாங்கரையில் திறந்திருக்கார்... எல்லா கட்சிக்காராளும் கார்கள்ல அணிவகுத்து வரதால, கிழக்கு கடற்கரை சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுறது ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''தகவல் கேட்டா, தரக்குறைவா திட்டுதாரு வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''அரசு துறைகளின் செயல்பாடுகள் பத்தி பொதுமக்கள் கேட்கிற தகவல்களை வழங்க, எல்லா துறையிலும் பொது தகவல் அலுவலர்கள் இருக்காவ... இவங்களிடம் தகவல் கிடைக்காதவங்க, மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்வாவ வே...
''இந்த மனுக்களை விசாரிக்க, சென்னையில் தலைமை தகவல் ஆணையம் இருக்கு... இங்க விசாரணைக்கு வர்ற மனுதாரர்களை, இங்க இருக்கிற பிரிவு அலுவலர் ரொம்பவே தரக்குறைவா பேசுதாரு வே...
''முதியோர்களை கூட, வயசுக்கு மரியாதை தராமலும், ஜாதி பெயரை சொல்லியும் திட்டுதாராம்... இவரை பத்தி, கவர்னர், தேசிய எஸ்.சி., - எஸ்.டி., ஆணையம் வரைக்கும் புகார்கள் போயிருக்கு வே...'' என்றார், அண்ணாச்சி.
''கார்த்தீஸ்வரன், இந்த பேப்பரை அங்க வையுங்க...'' என்ற அந்தோணிசாமியே, ''அரசுக்கு, 4 கோடி ரூபாய் பாக்கி வச்சிருக்காருங்க...'' என்றார்.
''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.
''துாத்துக்குடி மாவட்டத்தில், கல் குவாரி மற்றும் மணல் குவாரிகள்ல நிறைய விதிமீறல்கள் நடக்கு... இது சம்பந்தமா ஆய்வு நடத்திய கனிமவளத் துறை அதிகாரிகள், மாவட்டம் முழுக்க பல குவாரிகளுக்கு, மொத்தமா, 10 கோடி ரூபாய் வரை அபராதம் விதிச்சாங்க...
''ஓட்டப்பிடாரம் தாலுகா பகுதியில், விதிகளை மீறி கிராவல் மண் எடுத்தது சம்பந்தமா, தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஒருத்தருக்கு, 4 கோடி ரூபாய் அபராதம் போட்டாங்க... ஆனா, அதை கட்டாம அவர் போக்கு காட்டிட்டு இருக்காருங்க...
''வர்ற தேர்தல்ல, ஓட்டப்பிடாரம் - தனி தொகுதியில் சீட் கேட்கிற இவர் மேல ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கு... இவர் மீதான வழக்குகள், 4 கோடி ரூபாய் அபராதம் பாக்கிக்கான ஆதாரங்களுடன், இவரது எதிர் கோஷ்டியினர், கட்சி தலைமைக்கு புகார் அனுப்பி இருக்காங்க...'' என முடித்தார், அந்தோணி சாமி.
டீ கடை ரேடியோவில், 'இந்த பாடலுக்கு இசையமைத்தது இளையராஜா...' என்ற அறிவிப்பு ஒலிக்க, பெரியவர்கள் கிளம்பினர்.

